Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

அதிதி

அதிதி,Athidhi
  • அதிதி
  • நந்தா
  • அனன்யா
  • இயக்குனர்: பரதன்
18 ஜூலை, 2014 - 15:11 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அதிதி

தினமலர் விமர்சனம்


மலையாளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற காக்டெயில் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். ஒரு கணவன், மனைவி, அவர்களை காருடன் கடத்தும் ஒருவர், இவர்கள் மூன்று பேருக்கும் இடையிலான ஒரு உணர்ச்சிப் போராட்டம்தான் படத்தின் கதை. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் போன்றே தோன்றும். அதற்கேற்ற காட்சியமைப்புகளுடனும் கதாபாத்திரங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள படம்.


விஜய், ஸ்ரேயா நடித்த அழகிய தமிழ் மகன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரபல வசனகர்த்தா பரதன் இயக்கியுள்ள இரண்டாவது படம். எதற்கு வம்பு என்று ஒரு ரீமேக் படத்தை இயக்கிவிட்டார் போலும். மலையாளத்தில் ஓரளவிற்கு வெற்றியைப் பெற்ற படம் என்றாலும் வணிக ரீதியாகவும், ரசிகர்களிடத்திலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மலையாள திரை உலகத்தைப் பொறுத்தவரை நட்சத்திரங்கள் யார் என்று பார்க்க மாட்டார்கள், அவர்களுக்குத் தேவை கதை, அதை சொல்லியிருக்கும் விதமும்தான். ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதைகளை விட நடிகர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அது என்று மாறுகிறதோ அன்றுதான் தமிழ் சினிமாவும் மாறும்.


ஒரு ரீமேக் படமாக இல்லாமல் இந்தப் படம் ஒரு நேரடிப் படமாக இருந்திருந்தால் நிச்சயம் பாராட்டி வரவேற்கலாம். இருந்தாலும் ஒரிஜனல் படத்தின் கதைக்கருவை சிதைக்காமல், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி படமாக்குகிறேன் என கதையைச் சிதைக்காமல் விட்டதற்காகவே இயக்குனரைப் பாராட்டலாம். இருந்தாலும் நடுநடுவே கொஞ்சம் தொய்வு ஏற்படத்தான் செய்கிறது. நீண்ட நேரம் முக்கிய கதாபாத்திரங்கள் காரில் பயணித்துக் கொண்டேயிருப்பது சுவாரசியமில்லாமல் போய்விடுகிறது. ஒரு ரீமேக் படம் வெற்றி பெற்றால் இயக்குனரை பாராட்ட மாட்டார்கள். ஆனால், ஒரிஜனல் படத்தை அவர் சிதைக்காமல் கொடுத்து ரசிக்க வைத்தாலே போதும் என்றுதான் நினைப்போம். இதைத்தான் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் பரதன்.


ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் முக்கிய பொறுப்பிலிருப்பவர் நந்தா. அழகான மனைவி அனன்யா, அன்பான மகள் , என காதலித்து திருமணம் செய்து கொண்டு உறவினர் ஆதரவு இல்லாமல் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் நந்தாவும், அனன்யாவும் காரில் வெளியில் செல்லும் போது லிப்ட் கேட்டு ஏறுகிறார் நிகேஷ் ராம். கொஞ்ச நேரம் சாதாரணமாகப் பேசிவிட்டு துப்பாக்கி முனையில் அவர்களிருவரையும் மிரட்டி கடத்துகிறார். அவர்கள் மகளை கடத்தி விட்டதாகவும், மீட்பதற்கு பணம் வேண்டும் என்றும் கேட்கிறார். பணத்தைக் கொடுத்த பிறகும் அதை ஆற்றில் எறிந்து விடுகிறார். நந்தாவும், அனன்யாவும் செய்வதறியாது திகைக்கிறார்கள். அவர் எதற்காக இவர்களைக் கடத்தினார், அவர்கள் மகளையும் கடத்தினார், அதற்கான காரணம் என்ன என்பது நாம் சிறிதும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்.


அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அட...இப்படியெல்லாம் கூட வேலை செய்வாரா எனக் கேட்கத் தோன்றும் கதாபாத்திரத்தில் நந்தா. ஈரம் படத்திற்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அப்பாவித்தனமான முகமும், பேச்சும் அவருடைய கதாபாத்திரத்தை நம்பும்படி செய்கிறது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா ? என்பது மாதிரியான கதாபாத்திரம். முழுமையாகச் சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது சுவாரசியம் குறைந்துவிடும். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் பெயர் வாங்க முடியும் என்பதை நந்தா போன்ற நடிகர்கள் அவ்வப்போது நிரூபித்து வருகிறார்கள். ஆனால், கமர்ஷியலான வெற்றிதான் அவர் போன்ற நடிகர்களுக்குக் கிடைக்காமல் போகிறது. இந்தப் படமாவது அந்த ஏமாற்றத்தைப் போக்குமா என்று பார்ப்போம்.


அனன்யாவை அதற்குள்ள அம்மா கதாபாத்திரத்தில் உயர்த்திவிட்டார்கள். துறுதுறு என நாடோடிகள் படத்தில் பார்த்தவரை, இந்த படத்தில் ஒரு அமைதியான கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு என்னமோ போல் உள்ளது. நான்கு படம் நடிப்பதற்குள்ளாக அம்மா கதாபாத்திரத்திற்கு அவரை பிரமோட் செய்துவிட்டார்களே. இருந்தாலும் அனன்யாவின் நடிப்பு வழக்கம் போல் அம்சமாகத்தான் உள்ளது. ஆனாலும், கண்முன் அந்த நாடோடிகள் அனன்யா வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.


படத்தில் மூன்றே மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள். மூன்றாவதாக புதுமுகம் நிகேஷ் ராம். அப்பாவித்தனமான முகத்தை வைத்துக் கொண்டு வில்லத்தனமான வேலையில் ஈடுபடுகிறார். ஒரு சிலருக்குத்தான் இப்படி வெள்ளந்தியான முகம் வாய்க்கும். ஆனால், அவர்கள் செய்யும் வேலை எல்லாமே விவகாரமாக இருக்கும். நடிப்பில் ஆவரேஜாக இருந்தாலும் இவருடைய கதாபாத்திரத்தின் தன்மையால் இயல்பாக நடிக்கிறாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. படத்தில் இவரைப் போன்று, இவ்வளவு தாராள மனதுடன் ஒரு கணவன் இருந்தால் நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு நன்றாக இருக்கும்.


மற்ற நடிகர்கள் என்று சொன்னால் பின்னணிப் பாடகர் பிரசன்னா, வர்ஷா அஸ்வதி கொஞ்சமாகத்தான் வருகிறார்கள். பரத்வாஜின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஆகியவை குறிப்பிடும்படி இல்லை. தம்பி ராமையாவின் நகைச்சுவை டிராக் தேவையில்லாதது. ரன் படத்தின் காமெடி டிராக்கை ஞாபகப்படுத்துகிறது.


தொடர்ச்சியான கார் பயணம் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. நந்தாவையும், அனன்யாவையும் காரிலேயே கடத்தி வைத்துக் கொண்டு நிகேஷ் நடத்தும் சில நாடகங்கள் சுவாரசியமாகவும், சில நாடகங்கள் அலுப்பாகவும் உள்ளன. ஆனால், எதிர்பாராத கிளைமாக்ஸ் திருப்பம் படத்தை நிமிர்ந்து உட்கார வைத்து ரசிக்க வைக்கிறது.


அதிதி என்றால் சுத்தத் தமிழில் விருந்தினன் என்று அர்த்தமாம். படமும் முழுமையான விருந்தாக இல்லையென்றாலும், ரசிக்கலாம்.







-------------------------------------------------------------------



குமுதம் விமர்சனம்





அதிதி என்றால் விருந்தினர் என்று அர்த்தம். ஹீரோவின் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் அதி பயங்கரம்தான் படம். மகளைக் காணவில்லை, மனைவியையும், கணவனையும் வில்லன் கடத்துகிறான், வாழ்நாள் வருமானம் பூராவும் தீக்கு இரையாகிறது. கணவனின் அலுவலக ரகசியத்தை, மனைவியே போட்டிக் கம்பெனிக்குக் கொடுக்கிறாள். மனைவி மேல் வில்லன் கை வைக்கிறான். ஏன்? என்ன ஆச்சு? என்பதுதான் அதிதி.


ஆங்கிலத்தில் "பட்டர்ப்ளை ஆன் ஏ வீல், மலையாளத்தில் "காக்டெய்ல் என்று சக்கைப்போடு போட்ட ஆக்ஷன் த்ரில்லரை விறுவிறுப்பு குறையாமல் தமிழில் தந்ததற்காக இயக்குநர் பரதனைப் பாராட்டலாம்.


நந்தா, அன்பு, கண்டிப்பு, கோபம், இயலாமை என்று செமை ஸ்கோர் அடிக்கிறார். (ஏன் இன்னும் பெரிய பிரேக் கிடைக்கவில்லை?)


அனன்யா க்யூட். தவிப்பு தானாக வருகிறது.


வெறித்த பார்வை, வெடுக்கென்ற வார்த்தை என்று அந்த தாடிக்கார வில்லன் நிகேஷ்ராம் டெர்ரர்!


தம்பி ராமைய்யா, கொஞ்சம் புலம்பல். கொஞ்சம் அலம்பல்!


அஷ்வதி வர்ஷா, ஹம்மாடி வர்ஷா!


"உன் பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கணும். அடுத்தவன் பொண்டாட்டி எல்லாம்... (மியூட்!) இருக்கணுமா? படத்தின் அடி நாதமே இதுதான். க்ளைமாக்ஸ் வசனம் முகத்தில் அறைகிறது!


எல்லாம் சரிதான். தப்புப் பண்ணும் ஆண் மட்டும் எந்த தண்டனையும் பெறாமல் ஜாலியாய் சுற்ற, பெண்ணுக்கு மட்டும் கோமா தண்டனை எந்த விதத்தில் நியாயம்?


அதிதி - கள்ளக் காதலுக்கு எச்சரிக்கை!


குமுதம் ரேட்டிங் - ஓ.கே



--------------------------------------------------------



கல்கி சினி விமர்சனம்




சர்வசாதாரணமாக மனைவியை ஏமாற்றி பிற பெண்களுடன் கூத்தடித்தும் தவறு செய்யும் ஆண்களுக்கு "சவுக்கடி கொடுக்கும்வண்ணம் "அதிதி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. மலையாளத்தில் "காக்டெயில் என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழுக்கும் முற்றிலும் புதிய பாணி. அதிதி என்றால் "விருந்தாளி என்று அர்த்தம். அந்த எதிர்பாராத விருந்தாளி நடத்தும் களேபரம்தான் கதை.


அழகான கணவன், மனைவி நந்தா - அனன்யா. அருமையானத் தேர்வு. இயல்பான நடிப்பில் இருவரும் ஜொலிக்கிறார்கள்.


இரண்டு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கிடையே நடக்கும் தொழில் போட்டியில் விழி பிதுங்கும் நந்தா, மனைவியிடம் பாசம், மகளிடம் அன்பு - வில்லன் நிகேஷ்ராம் உடன் மோதல் என தன் பங்கை நன்றாகச் செய்துள்ளார்.


பல மாடிக் கட்டடத்தின் உச்சியில் நிகேஷ்ராம் உட்கார்ந்து கொண்டு அறிமுகமாகும் முதல் காட்சியும் சரி, படத்தின் முடிவில் செயலற்று கோமா ஸ்டேஜில் இருக்கும் தம் மனைவி எப்போது எழுவார் எனக் காத்திருக்கும் காட்சியிலும் சரி, நந்தாவை அலைக்கழித்து, ஆட்டிவிக்கும் ராஜதந்திரத்திலும் சரி, அனன்யாவை தொட்டுப் பார்த்து முகர்ந்து பார்க்கும் அந்த வில்லத்தனத்திலும் சரிநிகேஷ்ராம் நடிப்பு உச்சிக்கே செல்கிறது. படத்தின் தயாரிப்பாளரும் அவரேதான். தன் பங்கை உணர்ந்து நடித்துள்ளார். அவருக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் கூட கச்சிதமாய் பொருந்தி உள்ளார்.


படத்தில் டுவிஸ்ட்டுக்கு மேல் டுவிஸ்ட் வைத்து இயக்குனர் நம்மை பல காட்சிகளில் பதற்றப்பட வைக்கிறார். நிகேஷ்ராம் நந்தா தரும் தண்ணீர் பாட்டிலை அருந்துவதும், ரோட்டோர பெண்ணை அனன்யா முன்னாலேயே ரேட் பேசி அழைத்து வரச் சொல்வதும், அனன்யாவை ரூமுக்குள் வைத்து நந்தாவை வெளியே போ என தள்ளி, காமம் பேசுவதும் என இயக்குனர் பதற்றப்பட வைக்கிறார். அனன்யா அழகான அம்மா - கணவனைத் திருத்த அவர் போடும் நாடகம் பலே. தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்.


தம்பி ராமைய்யா வரும் காட்சிகள் எல்லாம் கலகல, அவர் சென்னை வந்து அலைந்து விட்டு மீண்டும் உடுமலைப் பேட்டை செல்லும்போது அவர் பேசுவது மெசேஜ். சென்னைக்கு வர்றவங்க, "அத்தை மகள் இருக்காள், பொண்டாட்டி தம்பி இருக்கான்னு வந்துடாதீங்க என்று சொல்லும் இடம் சிந்திக்க வைக்கிறது. இசை பரத்வாஜ். பாட்டு மட்டுமல்ல, பின்னணி இசையும் கதைக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது.


"ஜெய்யின் ஒளிப்பதிவு மிரட்டலான அழகு. மொத்தத்தில் "அதிதி ஒரு அருமையான குடும்பப் படம். சமூகத்துக்கு ஒரு சவுக்கடி கொடுக்கும் படம். நிகேஷ்ராம் மூலம் சமூகத்தைச் சாடி, வசனம் எழுதி இயக்கி இருக்கும் பரதனுக்கு சபாஷ் போடலாம்.


படம் முழுக்க பதற்றப்பட வைத்து முடிவில் இதயத்தைத் தொட்டு ஈரம் கசிய வைத்து விடுகிறார். எதிர்பாராமல் வந்த விருந்தாளி அதிர்ச்சி தந்து ஆனந்தப்படுத்துகிறார். அதுசரி, நிகேஷ்ராம். மற்றும் அனன்யா சேர்ந்து நடத்தும் நாடகம் மீது நந்தாவுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வரவில்லையா என்பது மட்டும் கேள்வியாய் தொக்கி நிற்கிறது.




அதிதி - கோலிவுட்டுக்கு நல்ல விருந்தாளி



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

அதிதி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in