தினமலர் விமர்சனம்
"காமராஜ்", "அய்யாவழி" உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், சேரன் பாண்டியன், சிந்துநதி பூ உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் செளந்தர்யனின் இசையில், ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கும் படம்...எனும் எதிர்பார்ப்புகளை நதிகள் நனைவதில்லை எவ்வாறு பூர்த்தி செய்திருக்கிறது? பார்ப்போம்....
கதைப்படி., தங்க மெடல் வாங்கியும், தகப்பனிடம் திட்டு வாங்கும் வேலையில்லா பட்டதாரி அறிமுக நாயகர் பிரணவ். அவருக்கு நல்தொரு அரசு வேலை கிடைக்குமென்ற நம்பிக்கையில் காதலிக்கிறார் ரிஷா!. ஆனால், பிரணவோ, தன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடிவந்த இன்னொரு நாயகி மோனிகாவை திருடர்களிடமிருந்து காப்பாற்றப் போய் மொட்டை மாடியில் இருந்து விழுந்து ஒற்றை காலை இழக்கிறார். கூடவே, ரிஷாவின் காதலையும் இழக்கிறார்!.
அதன்பின், பிரணவின் தங்கை தவிர்த்த மொத்த குடும்பமும், அவரை தண்டச்சோறு, கால் ஊனம் என கடுப்பேற்ற., பிரணவ்வின் பாசத்திற்குரிய தங்கை கல்யாணி நாயரும், நிஜமான நேசத்திற்குரிய நாயகி மோனிகாவும் ஆறுதலாக இருந்து அன்பை பொழிகின்றனர். அதன் விளைவாக, தன் கால் ஊனத்தையும் கழற்றி வைத்துவிட்டு ஹீரோ பிரணவ், செயற்கரிய காரியம் ஒன்றை செய்து தேசமே போற்றும்படி நடந்து கொண்டதால், பத்து லட்சம் பணமும், அரசு வேலையும் பரிசாக பெற்று தன் தங்கையின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்துவதுடன் மோனிகாவுக்கும் மூன்று முடிச்சு போடுவதுதான் நதிகள் நனைவதில்லை... படத்தின் மொத்த கதையும்!..
எந்த காலத்தில் இருக்கிறார் இயக்குநர்? என ரசிகர்கள் கேட்பது புரிகிறது....ஆனாலும்., நம்பிக்கையோடு படம் எடுத்திருக்கிறார் நாஞ்சில் பி.சி.அன்பழகன்!. அவரது நம்பிக்கைக்கு காரணம் சேரன் பாண்டியன் செளந்தர்யனின் இசையில் தினுசு தினுசாக ஒலிக்கும், ஜொலிக்கும் ஏழு பாடல்களாகவும் இருக்கலாம். கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவாகவும் இருக்கலாம்...சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பாகவும் இருக்கலாம், தவசிராஜின் சண்டைப்பயிற்சியாகவும் இருக்கலாம்... அல்லது அறிமுக நாயகர் பிரணவ், கதாநாயகியர் மோனிகா, ரிஷா, பாலாசிங், செந்தில், குண்டுகல்யாணம், மதுரை முத்து, டவுட் செந்தில், நெல்லை சிவா, கல்யாணி நாயர் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளத்தின் பெரும் நடிப்பாகவும் இருக்கலாம்!
எது எப்படியோ., நாஞ்சில் பி.சி.அன்பழகனின் எழுத்து, இயக்கத்தில் நிறையவே நிறை - குறைகள் இருந்தாலும், நாடக பாணியில் தெரிந்தாலும் நதிகள் நனைவதில்லை - நல்ல கதைகள் தோற்பதில்லை..என்பதற்கு சான்றானால் சரி!....
நதிகள் நனைவதில்லை!
வேலையில்லாமல் திரியும் பட்டதாரி இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் அவமானங்களும், அதிலிருந்து அவன் போராடி வெல்வதும்தான் கதை.
தண்டச்சோறு என்று திட்டும் அப்பா, விதவை அக்கா, கல்யாண வயதுத் தங்கை, வேலையில்லாமல் நண்பர்களுடன் வெட்டிப் பேச்சு பேசித் திரியும் இளைஞன் பிரணவ், இதில் இரட்டைக் காதல் வேறு, அணையை வெடிவைத்துத் தகர்க்க நினைக்கும் தீவிரவாதச் செயலை முறியடிப்பது என்று எல்லாமே அரைச்சமாவு.
ஹீரோ பிரணவ் கிராமத்து இளைஞனுக்கு பொருத்தம். நடிப்பும் ஓ.கே. எதிர்வீட்டு மோனிகா அழகு. நடிப்பிலும் அழுத்தம் காட்டுகிறார். இன்னொரு காதலி ரிஷாவும் ஓ.கே.
அப்பா பாலாசிங் ஹீரோவை குறை சொல்லிச் சொல்லியே குறைபட்டுப் போகிறார். மதுரைமுத்து உள்ளிட்ட நண்பர்கள் அரட்டை, சகிக்கலை. படத்தின் ப்ளஸ் இசை. பாடல்கள், முன்னணி இசை அமைப்பாளர்களை விஞ்சுகிறது. கிராமத்தை நகல் எடுத்தது போன்ற ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
பல ப்ளஸ்கள் இருந்தும் கதை சொல்லும் விதத்திலும் சோர்வு தரும் திரைக்கதை அமைப்பிலும் இயக்குநர் சறுக்குகிறார். இன்னும் பயிற்சி தேவை.
கவித்துவமான தலைப்பாக இருந்தும் க(வி)தையில் ரசனை கம்மி.
குமுதம் ரேட்டிங் - சுமார்