தினமலர் விமர்சனம்
கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகராகவும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் திரைப்படம் தான் துணைமுதல்வர். கூடவே மற்றொரு நாயகர் ஜெயராமுககும் ரீ-என்ட்ரி தந்திருக்கம் துணைமுதல்வர் படத்தை, ரா.விவேகானந்தன் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். ஸ்வேதாமேனன், காதல் சரண்யா இருவரும் கதாநாயகியர். துணைமுதல்வர் துணிச்சல் மிக்கவரா? ரசிகர்களுக்கு தூக்கம் தருபவரா? பார்ப்போம்...
கதைப்படி, பால்ய சிநேகிதர்களான பெரியபாண்டி கே.பாக்யராஜூம், சின்னபாண்டி ஜெயராமும் தான் அந்த பட்டிக்காட்டு கிராமத்தில் மெத்தப்படித்தவர்கள். பாக்யராஜ் ஐந்தாம் வகுப்பும், ஜெயராம் மூன்றாம் வகுப்பும் முழுதாய் முடித்தவர்கள் என்பதால் அந்த ஊரில் உள்ள நாட்டாமையில் இருந்து வீட்டு ஆமைகள்...வரை எல்லோரும் நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் இவர்கள் இருவரது ஐடியாவை கேட்டு தான் நடக்கின்றனர்.
நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் இருந்து யாரும் ஆத்திர, அவசரத்திற்கு வெளியூர் போகவேண்டுமென்றால், பரிசலைத்தான் பயன்படுத்தும் சூழல்!. இதனால், அடிக்கடி சுழலில் மாட்டும் பரிசல்களால் பல உயிர்பலிகள் நடக்கின்றன. அப்படி தன் தாயையும், சின்ன வயதில் பறிகொடுத்த பாக்யராஜ், ஊருக்கு பாலம் வேண்டி சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று எம்.எல்.ஏ.ஆகிறார். அவருக்கு துணையாக இருக்கும் ஜெயராம், தன் புத்திசாதுர்யத்தால், பாக்யராஜை துணைமுதல்வராகவும் ஆக்கி அழகு பார்க்கிறார். ஆனாலும் ஊருக்கு பாலம் வர மறுக்கிறது. அதனால் ஒரு மெகாதிட்டம் வகுக்கின்றனர். பாக்யராஜூம், ஜெயராமும் அந்த திட்டப்படி, பாக்யராஜ், காட்டுக்குப்போனபோது கரடி அடித்து கடித்துக்குதறியதால் இறந்ததாக ஜோடிக்கின்றனர். அவர்கள் திட்டப்படியே இடைத்தேர்தல் வருகிறது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அந்த ஊருக்கு போட்டி போட்டுக்கொண்டு பாலத்துடன் பள்ளி்க்கூடம், மருத்துவமனை இத்யாதி இத்யாதி...சவுகரியங்களை செய்து கொடுக்க தேர்தல்நாள் அன்று அதுநாள்வரை பதுங்கி இருந்த பாக்யராஜ் வெளிவருகிறார். அவரையும், ஜெயராமையும் தீர்த்துக்கட்ட இருகட்சிகளும் அடியாள்படையுடன் துரத்துகின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது...? என்பது தான் துணைமுதல்வர் படத்தின் வள வள, கொழ கொழ மீதிக்கதை!.
பெரியபாண்டியாக பாக்யராஜ் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு டைட்டானிக் படம் பார்த்துவிட்டு, அதன் நாயகரும், நாயகியும் பாசமலர் அண்ணன் தங்கை மாதிரியான அண்ணன் தங்கை என ஆரம்ப காட்சியிலேயே அளந்து விடுவஐ ஹாஸ்யம்!. அதேநேரம் துணை முதல்வர் ஆனபின்பும் துக்கடா பாலம் கட்ட முடியாமல் சுயேட்சை எம்.எல்.ஏ.வான இவர், இந்த கட்சியில் இருந்து அந்த கட்சிக்கும், அந்த கட்சியில் இருந்து இந்த கட்சிக்கும் தாவும் காட்சிகள் பெரும் அபத்தம்!. அவரை இரு பெரிய கட்சிகளும் விலைக்கு வாங்க முயற்சிக்கும்போது அதில் ஒரு கட்சியிடம் நல்லா துட்டு வாங்கி அந்த காசிலேயே ஊருக்கு ஒரு பாலத்தை, பாக்யராஜ் நினைத்தால் கொண்டு வந்திருக்கலாம். அவ்வாறு வாங்காதும், பாலம் கட்டாதது மட்டுமின்றி துணைமுதல்வர் ஆன முதல்நாளே சட்டசபையில் துட்டு போட்டு துள்ளுவதும், ரசிகர்களை கொல்வதும் நியாயமே இல்லை, சரி அதுவாவது போகட்டும், தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் ஒரு சீட்டை, சுயேட்சை கே.பாக்யராஜ் ஜெயித்து வந்திருக்கிறார். தேர்தலில் பிற இடங்களில் நின்று சரிசமமாக ஜெயித்ததோ க.க.க., கூ.கூ.கூ. எனும் இரண்டே இரண்டு கட்சிகள். இருவரில் ஒருத்தர் ஆட்சி அமைக்க பாக்யராஜின் ஆதரவு தேவை என்பது லாஜிக்காக இடிப்பதை திரைக்கதை மன்னர் பாக்யராஜ் கவனிக்காது விட்டது எப்படி? 234ல் பாதி 117 இருகட்சிகளும் சரிசமமாக ஜெயித்திருந்தால் பாக்யராஜ் எப்படி எந்த தொகுதியில் நின்று ஜெயித்திருக்க முடியும்? என்பதற்கு அவர்தான் விடை சொல்ல வேண்டும்?
ஜெயராம், சின்னப்பாண்டியாக கிடைத்த கேப்பில் எல்லாம் நடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்திருப்பதற்கு பாராட்டலாம்! பாக்யராஜின் காதல் மனைவியாக ஸ்வேதா மேனன், சேச்சியாக செம கிளாமர். காதல் சரண்யா, ஜெயராமின் முறைப்பெண்ணாக முறைத்தபடியே வந்துபோனாலும் மப்பும் மந்தாரமுமாக மதிமயக்குகிறார்!.
பீப்பாய் சைசில் இருந்தாலும் சரண்யா ஸ்டெப் அப்பப்பா!!
கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு, ஜெய் -பாலாஜி- ஆதி ஆகியோரின் இசை என ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் லாஜிக்கே இல்லாத கே.பாக்யராஜின் கதையும், திரைக்கதையும் ரா.விவேகானந்தன் இயக்கத்தில் துணைமுதல்வர் படத்தை, ரசிகர்களிடமிருந்து..."தூர"முதல்வர் ஆக்கிவிடுகிறது!.