தினமலர் விமர்சனம்
பாணா காத்தாடி, பரதேசி படங்களின் நாயகரும், மறைந்த நடிகர் முரளியின் வாரிசுமான அதர்வாவும், வெள்ளக்காரதுரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களின் நாயகி ஸ்ரீதிவ்யாவும் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடிக்க, குளோபல் இன்போடைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், புதியவர் ரவி அரசு இயக்கத்தில், தடகள விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சற்றே புதுமையாக வந்திருக்கும் படம் தான் "ஈட்டி".
த்ராம்பஸ்தீனியா எனும் இரத்த ஒழுக்கு நோயினால் சிறு வயது முதலே பாதிக்கப்பட்டவர் ஹீரோ அதர்வா. உடம்பில் அடிபட்டால் அவ்வளவு தான் போச்சு... எனும் நிலையில் இருந்தாலும், தடகள ஓட்டப் பந்தயத்தில் துருவ நட்சத்திரமாக விளங்கும் தஞ்சாவூரைச் சார்ந்த கல்லூரி மாணவரான அதர்வாவிடம், சென்னை பொண்ணு கல்லூரி மாணவி ஸ்ரீதிவ்யா, ஒரு தவறான போன்காலால் சரியான காதலில் சிக்கிக்கொள்கிறார். போனிலேயே, காதல் வளர்க்கும் இருவரும், ஒரு சந்தர்ப்பத்தில் அதாகப்பட்டது, அதர்வா தன் தடகள விளையாட்டு போட்டிகள் சம்பந்தமாக, சகவீரர்கள் மற்றும் கோச் ஆடுகளம் நரேனுடன் சென்னை வரும் வேளையில், ஒரு அசாதாரண சூழலில் முதன்முதலாக நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
அந்த அசாதாரண சூழல், அதர்வாவை அடிதடி பேர்வழியாகக் காட்ட அதனால் முதலில் கடுப்பாகும் ஸ்ரீதிவ்யா, அதன்பின், கொலை வெறியுடன் தன் அண்ணனை கொல்ல வந்த தமிழ் நாட்டையே கலக்கும் கள்ள நோட்டு கும்பலை தடுப்பதற்காக தான் அதர்வா, அடிதடி அவதாரம் எடுத்தார் எனும் உண்மை தெரிந்ததும், அதர்வாவுடன் மேலும் நெருக்கமாகிறார். ஆனால், அதர்வா, கொலைவெறி கள்ள நோட்டு கும்பலுக்கு பரம விரோதியா தியாகிறார். விடுவார்களா? அவர்கள் அதர்வாவை சுத்துப் போடுகின்றனர். இறுதியில், வில்லன்களை தவிடு பொடியாக்கி., கள்ள நோட்டு கும்பலை காவல்துறை உதவியுடனும், உதவி இல்லாமலும், அதர்வா ஒற்றை ஆளாக ஒழித்து கட்டி, தன் லட்சியமானஓட்ட பந்தய விளையாட்டிலும் வென்று ஸ்ரீதிவ்யாவின் கரம் பற்றுவதுதான் "ஈட்டி " படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான கரு, கதை, களம், காட்சிபடுத்தல் எல்லாம் !
நெஞ்சை அள்ளும் தஞ்சை புகழேந்தியாக தடகள விளையாட்டு வீரராக, அதர்வா நடிப்பிலும், இளமை துடிப்பிலும் ஒரு ஓட்ட பந்தய வீரராக நடிக்கவில்லை, அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அதர்வா, ஸ்ரீதிவ்யாவுடன் பரவசமாக காதல் கொள்வதிலாகட்டும், வில்லன்களை பறந்து, பறந்து அடிப்பதிலாகட்டும், ஈட்டியாக ஒடு தளத்தில் பாய்ந்து ஓடுவதிலாகட்டும், அப்பா ஜெ.பியுடனான அன்பு நெகிழ்ச்சி காட்சிகளிலாகட்டும் அனைத்திலும் ஆஹா, ஒஹோ சொல்லுமளவிற்கு அசத்தியிருக்கிறார்.
காயத்ரியாக ஸ்ரீதிவ்யா, சென்னை கல்லூரி மாணவியாக செம ஹோம்லி குல்கந்து! தோழிக்கு பிரச்சனை என்றதும், போனில் தான் போட்டது ராங் - கால் என்பது தெரியாமல் பொங்கி எழும் ஸ்ரீதிவ்யா, போனில் அதர்வாவை தாம் - தூம் என திட்டிவிட்டு பின், அதர்வாவின் மிரட்டலுக்கு பயந்து அடிக்கடி அவர் போனுக்கு ரீ-சார்ஜ் செய்வது நம்பும்படியாக இல்லை. அதே நேரம், அதன்பின் இருவரும் காதல் வலையில் வீழ்வது, ஸ்ரீதிவ்யாவின் அழகிய நடிப்பால் நம்பும்படியாக, சிறப்பாக படம் பிடிக்கப்பட்டிருப்பது ஆறுதல்.
அதர்வாவின் விளையாட்டு ஆசிரியராக வரும் ஆடுகளம் நரேன், அப்பா ஜெயபிரகாஷ், ஸ்ரீதிவ்யாவின் அப்பா அழகம்பெருமாள், அண்ணன் களவாணி வில்லன், போலீஸ் அதிகாரி செல்வா, கள்ளநோட்டு பெரிய மனிதர் ஆர்என்ஆர்.மனோகர், அவரது நார்த் மெட்ராஸ் கையாள் ரவுடி புதுமுகம், அதர்வாவின் நண்பர்கள் கும்கி அஸ்வின், முருகதாஸ் உள்ளிட்டோரும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கின்றனர்.
அதிலும், அதர்வாவின் விளையாட்டு கோச் ஆடுகளம் நரேன், ஹீரோ அதர்வா அளவிற்கு கடின உழைப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார். நீ இந்தப் பந்தயத்தில் பெற இருக்கும் வெற்றி உன் சந்தோஷம் மட்டுமல்ல.. உங்கப்பாவின் கனவு, எனது பல வருடலட்சியம்... என அதர்வாவை உசுப்பேற்றி ஒரு சிறந்த ஓட்டப்பந்தய வீரராக்குவதும், ''திறமைங்கறது கடின பயிற்சி தான் என்பதும், எவ்வளவு தான் ஜாக்கி திறமைசாலியாக இருந்தாலும் குதிரை தரமானதாக இருந்தா தான் ஜெயிக்க முடியும்... என்பதும், ஹீரோ அதர்வாவுக்கு மட்டுமல்ல... படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் பூஸ்ட்டாக இருப்பது ஈட்டியின் பெரும்பலம். அதர்வா, ஸ்ரீதிவ்யா, நரேன், மாதிரியே வில்லன் ஆர் என்ஆர் மனோகர், அப்பா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் கச்சிதமான கவனம் ஈர்க்கும் நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் .
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில், பஞ்சு மிட்டாய்... நான் புடிச்ச மொசக் குட்டி..., குய்யோ முய்யோ.... உள்ளிட்ட ஐந்துபாடல்களும்..., திரும்ப திரும்ப கேட்க வைக்கும் சுப ராகம். ஜிவியின் இசை மாதிரியே சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவும், ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பும், 'ஈ.ட்டி' படத்திற்கு மவுசை கூட்டி விடுகின்றன என்றால் மிகையல்ல!
என் பையன் இந்தியாவுல ஜெயிக்கிறது முக்கியமல்ல.. இந்தியாவுக்காக ஜெயிக்கிறது தான் முக்கியம்..., அவன் நம்ம கிட்ட தாண்ட மணிரத்னம் மாதிரி பேசுறான்... ஆனா அவன் ஆளுகிட்ட மணிகணக்கா பேசுறான்... , ஏங்க அது பார்க்கர் பேனாங்க, இப்ப அது பார்க்குற பேனா ஆச்சுங்க... உள்ளிட்ட வசனங்களிலும் , அழகிய கோர்வையாள காட்சிகளிலும் கவனிக்க வைத்த இப்பட இயக்குனர் ரவி அரசு, லேசாக கீறல் பட்டாலே இத்தம் நிற்காமல் போகும், ஆழமாக அடிபட்டால் அவ்வளவுதான் போச்சு.. எனும் ரீதியில் உயிருக்கே உலை வைக்கக் கூடிய த்ராம்பஸ்தீனியா வியாதியுடைய ஹீரோவை தேசிய அளவில் வெற்றி பெறும் தடகள சாம்பியனாக காட்டியிருப்பதும் அவர், இறுதி காட்சிக்கு முன்பு வரை சிறு கீறல் கூட படாமல் வில்லன்களை பந்தாடுவதையும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதையும் இன்னும் நம்பகத்தன்மையுடன் காட்ட முயற்சித்திருந்தார் என்றால் ஈட்டி , குத்தீட்டியாக இன்னும் பெரிய அளவில் ரசிகர்களின் நெஞ்சில் பாய்ந்திருக்கும் .
அவ்வாறு இல்லாமல், கடைசி வரை, காதல் காட்சிகளிலும், காமெடி சீன்களிலும், கவனம் ஈர்க்கும் டயலாக் பன்ச் களிலுமே இயக்குனர் கவனம் செலுத்தி இருப்பதும், க்ளைமாக்ஸில் ஜப்பானில் ஓடி ஜெயித்துவிட்டு வரும் ஹீரோ, படிப்பை முடித்தாரா? காதல் பந்தயத்தில் ஜெயித்தாரா என்பதையெல்லாம் சொல்லாமல், ஹீரோ, திடீரென போலீஸ் உயரதிகாரி ஆவதும்... சற்றே, சினிமாடிக் - டிராமாடிக்காக தெரிவதால், பெறும் வெற்றி அடைய வேண்டிய ஈட்டி' , வெறும் 'வெற்றி' எனும் அளவிலேயே முடிகிறது!
ஆகவே, "ஈ.ட்டி - வெற்றி! அவ்வளவே!!