Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

வீரம்

வீரம்,Veeram
15 ஜன, 2014 - 17:04 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வீரம்

தினமலர் விமர்சனம்


ஆரம்பம் முதல் அஜீத்தின் அதிரடி ஆரம்பம்! என்று சொன்ன அஜீத் தரப்பு அதை மெய்பிக்கும் விதமாக "ஆரம்பம் வெளிவந்த இரண்டே மாதங்களில் "வீரம் படத்தை வெளியிட்டு, தன் பலத்தை காட்டியிருக்கிறது! இதுநாள் வரை "சிட்டிலுக்கில் வந்த "அல்டிமேட் ஸ்டார் இந்தப்படத்தில் வேஷ்டி சட்டையில், முரட்டு கிராமத்து இளைஞனாக, பாசமுள்ள அண்ணனாக பட்டையை கிளப்பி இருக்கிறார்! பலே, பலே!!

கதைப்படி, அஜீத்குமார் ஒட்டன்சத்திரம் விநாயகமாக, விதார்த், "அன்பு பாலா உள்ளிட்ட 4 தம்பிகளுக்கு அண்ணனாக, அந்த ஊரில் அடிதடி, வம்பு, வழக்குகளில் ஈடுபடுவர்களை கூட்டிவந்து வீட்டில் விருந்து வைத்து, அதன்பின் வாயிற் கதவை மூடி அவர்களை நையப்புடைத்து அனுப்பும் நல்லவர்! சிறுவயதில் பெற்றோரை இழந்து 4 தம்பிகளுடன், டீ கிளாஸ் கழுவுவதில் வாழ்க்கையை தொடங்கியவர் விநாயகம் அஜீத், என்றாலும் பல லாரிகளுக்கு முதலாளி, ரைஸ்மில் ஓனர், விவசாயம், வெள்ளாமை, காய்கறி வியாபாரம் என தன் உழைப்பால் தன் குடும்பத்தை தூக்கி நிறுத்தி, ஊரில் பெரும் புள்ளியாக வலம் வரும் அஜீத்தும், அவரது 4 சகோதரர்களும் திருமணம் செய்து கொள்வதில்லை எனும் உறுதியுடன் வாழ்கின்றனர். காரணம், பொண்டாட்டி வந்தால் ஒற்றுமையான சகோதரர்களான தங்களை பிரித்து விடுவார்கள் எனும் நியாயமான பயம்தான்! ஆனாலும், விதார்த்துக்கும், பாலாவுக்கும் அண்ணன் அஜீத்துக்கு தெரியாமல் தலா ஆளுக்கு ஒரு காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் அடிதடி வழக்குகளுக்கு ஜாமின் வாங்கிதரும் பெரிய வக்கீலா(!)ன "பெயில் பெருமாள் சந்தானம், தன் காதலையும் உதறிவிட்டு இவர்களது சகோதர ஒற்றுமை கண்டு மெய்சிலிர்த்து அஜீத்தின் 5-வது தம்பியாக ஐயக்கியமாகிறார்.

சந்தானம் கோர்ட்டில் இருப்பதை விட இவர்களுடன் சுற்றும் நேரம் ஜாஸ்தி என்பதால் அவருக்கு விதார்த், பாலாவின் அஜீத்துக்கு தெரியா காதல் தெரிய வருகிறது. அதுமுதல் தன் காதலையும் புதுப்பித்துக் கொள்ளும் "பெயில் சந்தானம், 4 சகோதரர்களுடனும் சேர்ந்து தங்கள் காதலுக்கு அஜீத் சம்மதிக்க வேண்டுமென்றால், அஜீத்தையும் ஒரு பெண்ணின் காதலில் தள்ள வேண்டுமென களம் இறங்குகிறார். அதற்கு ஏதுவாக அஜீத்தின் சிறுவயது நண்பரும், கலெக்டருமான ரமேஷ் கண்ணாவின் ஐடியாபடி, அஜீத்துக்கு பள்ளி பருவத்தில் பிடித்த பெண்ணின் பெயரான கோப்பெருந்தேவி எனும் பெயரில் ஒரு அழகிய இளம் பெண்ணை அஜீத்முன் நிறுத்தினால் எல்லாம் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும், அஜீத்துக்கும் காதல் பிறக்கும் எனும் யோசனை வருகிறது.

அதன்படி புராதான கோயில் சிற்பங்களை அழகுப்படுத்தும் புனிதப்பணி செய்யும் கோப்பெருந்தேவி தமன்னா, அந்த ஊர் கோயில் சிற்பங்களை சீரமைக்க தன் அழகிய இளம் பெண்கள் நிரம்பியகுழுவோடு அங்கு வரவழைக்கப்படுகிறார். ஊர் பெரும்புள்ளி அஜீத்தின் மைனஸ் பாயிண்ட்டுகளை எல்லாம் ப்ளஸ் பாயிண்ட்டாக காட்டி அஜீத் மீது தமன்னாவுக்கு காதல் வர வைக்க முயற்சிக்கின்றனர் சந்தானம் சகோதரர்கள். தமன்னாவுக்கு அஜீத் மீதும், அஜீத்துக்கு தமன்னா மீது ஒரே நேரத்தில் காதல் வருகிறது. ஆனால் அந்த காதலுக்கு, அஜீத் அது வரை சம்பாதித்து வைத்திருக்கும் வில்லன் கோஷ்டியும், தமன்னாவின் அப்பாவும் அகிம்சாவாதியுமான நாசரின் விரோதிகளும் சேர்ந்து உலை வைக்க பார்ப்பதுடன், அஜீத்-தமன்னா ஜோடியையும் அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டவும் களம் இறங்குகின்றனர். அவர்களது சதியில் இருந்து அஜீத்-தமன்னா ஜோடியும், அவர்களது காதலும் தப்பித்து கரை சேர்ந்ததா? கரம் சேர்ந்தனரா.? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமான திக், திக் க்ளைமாக்ஸ்!

"அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார், ஒட்டன்சத்திரம் விநாயகமாக ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமெண்ட் என்று வழக்கம் போலவே அடி தூள் பரத்தியிருக்கிறார். அதிலும் அந்த டிரையின் பைட் சூப்பர்ப்! "எல்லோரும் சந்தோஷமா திருப்தியா சாப்பிட்டு போங்க... என அஜீத் என்ட்ரியாகும் ஷாட்டில் பேசும் "பன்ச் வசனத்தில் தொடங்கி, "நம்ம கூட இருக்கிறவங்களை நாம் ஒழுங்காபார்த்துக்கிட்ட நம்மளை நமக்கு மேல இருப்பவன் நல்லா பார்த்துப்பான்... என்றும், "எவ்ளோ பேரு இருக்காங்கறது முக்கியமல்ல... யாரு இருக்காங்ககிறது தான் முக்கியம்... என்றும், "யாருடா அந்த 5வது ஆளு... யாருக்கும் அஞ்சாத ஆளு... என்றும் இடையிடையே அஜீத்தும், அவரை சார்ந்தவர்களும் பேசும் வசனங்களில் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸில் இந்த குடும்பம் உனக்கு என்ன செய்தது? என அஜீத்தை அடித்துபோட்டு வில்லன் அதுல் குல்கர்னி கேட்கும்போதும், இந்த குடும்பம் என்ன செய்யல்ல...?! "அம்மாவா சோறு போட்டாங்க, அப்பாவா சொல்லி கொடுத்தாங்க... என மேலும் பேசும்போது தியேட்டரில் தல, நன்றிகாட்ட, நல்லது செய்ய உனக்கு ஈடு இல்ல தல என ரசிகர்கள் கூக்குரலிடுகின்றனர். "பில்லா, "மங்காத்தா, "ஆரம்பம் மாதிரி டான் கேரக்டர்களுக்கு அஜீத்தின் "சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி ஸ்டைல் ஓ.கே., கிராமத்து இளைஞராக தமன்னாவை காதலிக்கும் பாத்திரங்களிலும் சால்ட் பெப்பர் லுக்கா என ரசிகர்கள் சில இடங்களில் சலிப்படையவும் செய்கின்றனர்.

தமன்னா, கோப்பெருந்தேவியாக அவர் புனரமைக்கும் சிலைகள் மாதிரியே சிலிர்க்க வைக்கிறார்.

சந்தானம் பீடீ ஊதுன வாய்க்கும், பீப்பி ஊதுன வாய்க்கும் எங்களுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று சீனுக்கு சீன் அஜீத்துக்கு ஈக்குவலாக "பன்ச், அதுவும் காமெடி பன்ச் அடித்து தியேட்டரில் மேலும் விசில் சப்தத்தை கிளப்புகிறார். அதிலும், க்ளைமாக்ஸில் அஜீத்-தமன்னா திருமணத்தை சந்தானம் நடத்தி வைத்து ""எவ்வளவு தான் "முரட்டுகாளையா இருந்தாலும், பொண்டாட்டி முந்தியை பிடித்ததும் அப்படியே மாறிடுவிங்களே... என அஜீத்தையும், "வீரம் - முரட்டுகாளை என்பதையும் தெரிந்தோ தெரியாமலோ குத்திக்காட்டும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது.(அதிர்ச்சியிலா, சிரிப்பிலா?)

விதார்த், பாலா உள்ளிட்ட அஜீத் சகோதரர்கள், அதுல்குல்கர்னி உள்ளிட்ட வில்லன்கள், நாசர், சுமித்ரா, ஒரே காட்சியில் வரும் மறைந்த பெரியார்தாசன், அஜீத்வீட்டு எடுபிடி அப்புக்குட்டி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை, ஆனாலும் மனதில் நிற்கவில்லை என்பது மைனஸ்!

வெற்றியின் ஒளிப்பதிவு வீரத்திற்கு கிடைத்த வெற்றி.

சிவாவின் இயக்கத்தில் ஒட்டன்சத்திரம் பெரும்புள்ளி விநாயகம் அஜீத், தமன்னாவின் அப்பாவிடம் காதல் சம்மதம் பெற, குடும்பத்துடன் 7 நாட்கள் அங்கேயே ஹால்ட் அடிப்பதும், அவர்களது எதிரிகளை பந்தாடுவதும், ஒட்டன்சத்திரத்தில் அஜீத்துக்கு வேலை இல்லாதது மாதிரி சற்றே லாஜிக்காக இடிக்கிறது!

மற்றபடி, அஜீத்தின், "வீரம் - ஈரம் - சூரம் - தரம்!


----------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஒட்டன்சத்திரம் - இந்த ஊர்ல ஹீரோ தன் தம்பிங்க 4 பேர் கூட கட்டை பிரம்மச்சாரியா வாழ்றாரு.மேரேஜ் பண்ணிக்கிட்டா வர்ற மனைவி குடும்பத்தைப்பிரிச்சுடுவா என்பதால் அவர் மேரேஜே பண்ணிக்கலை. ஆனா தம்பிங்க 4 பேரும் ஆளுக்கு ஒரு பிகரை தனித்தனியா லவ் பண்றாங்க. இப்டியே அண்ணனை விட்டா அவர் நம்ம எல்லாரையும் பிரம்மச்சாரியாவே ஆக்கிடுவார் என்பதால் அவருக்கு ஒரு ஃபிகரை கோர்த்து விடலாம்னு சந்தானம் கூட சேர்ந்து ஐடியா பண்றாங்க. இவங்க பண்ற கலாட்டாக்கள், கோர்த்து விடல்கள் என இடைவேளை வரை படம் ஜாலியாப்போகுது .

இவர் ஊருக்கே எஜமான் மாதிரி , அடிதடி ரகளைன்னு வாழ்ந்தவர் . இவருக்கு ஜோடி சேர்ந்த பொண்ணு அமைதியான டைப். அவங்கப்பாவும் அமைதியை விரும்பும் ஆள். அவங்க ஊருக்கு ஹீரோ நல்லவர் மாதிரி அமைதியாப்போறாரு. போகும்போது ரயில்ல ரவுடிகள் தாக்க வரும்போது ஹீரோ செம ஃபைட் போடறதைப்பார்த்து அந்தம்மா ஆடிப்போகுது. இடைவெளை.

அதுக்குப்பின் ஹீரோ அவங்க கிராமத்தில் போய் தங்கி நல்ல பேர் எடுக்கறாரு. ஹீரோயின் குடும்பத்துக்கு வேற ஒரு பகை வருது.அவங்க கிட்டே இருந்து அவங்களைக்காப்பாத்தி எப்kடி கரை சேர்க்கிறார்? என்பதே மிச்ச மீதிக்கதை

ஆரம்பம் அதிரடிப்படம் கொடுத்து அடுத்த 70 வது நாளில் ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட் செய்ய துணிச்சல் வேணும். ஏன்னா நம்ம கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் செம்மல்கள் ஒரு ஹீரோ படம் ஹிட் ஆகிட்டா அதே பாணில 25 படம் வரிசையா கொடுக்க நிர்ப்பந்திப்பாங்க. அந்த பாணியில் இருந்து விலகி அஜித் இதில் விநாயகம் கேரக்டரில் நடிச்சுப்பட்டையை கிளப்பி இருக்கார்.

இவர் வசனம் பேசும் காட்சிகளில் பொறுத்து, நிறுத்தி நிதானமாப்பேசுவதும் , அடிக்குரலில் செந்தூரப்பூவே கேப்டன் போல் கனத்த குரலில் பேசுவதும் அஜித்க்குப்புதுசு. நல்லாப்பண்ணி இருக்கார்.

என்ன தான் மைசூர்பாக் ஸ்வீட்டா இருந்தாலும் தொடர்ந்து 3 சாப்பிட நேரும்போது கொஞ்சம் மிக்சர் சாப்ட்டுட்டு அடுத்த ஸ்வீட்டை சாப்ட்டா தித்திப்பு திகட்டாது, அது மாதிரி அஜித்க்கு சால்ட்-பெப்பர் லுக் மங்காத்தா , ஆரம்பம் 2ல் நல்லா எடுபட்டுச்சு என்பதற்காக தொடர்ந்து ஒரே மாதிரி ஸ்டைலில் செய்தால் போர் அடிச்சுடும். ஒரு படம் அப்படி, அடுத்த படம் இப்படி என மாத்தனும். டூயட் காட்சிகளில் நெளிய வைக்கிறார். வேட்டி போட்டு கோட் போட்டு வரும் காட்சியைத்தவிர்த்து இருக்கலாம். அதே போல் பாடல்களுக்கான நடன அசைவுகளும் டூயட்களில் எடுபடவில்லை. தனிக்குத்தாட்டப்பாட்டு ஓக்கே .

சந்தானம் இதிலும் கோல் அடிச்சிருக்கார், வழக்கமா அவர் எந்தப்படத்தில் வந்தாலும் ஹீரோவை நேருக்கு நேர் கலாய்ப்பவர், இதில் பம்மி இருப்பது ஏனோ? அவர் அடிக்கும் ஒன் லைனர்கள் பரவாயில்லை. வழக்கம் போல் பழைய ஜோக்ஸ்களை உல்டா செய்வதும் இதில் தொடருது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் கல கல.

இடைவேளைக்குப்பின் தம்பி ராமையா காமெடி பேலன்ஸ் செய்யுது. தமன்னா தான் ஹீரோயின். பெரிய வாய்ப்பு தான், ஆனாலும் அதிக திறமை காட்ட வாய்ப்பில்லை என்பதால் முடிந்த வரை கண்ணியமாக கிளாமர் காட்டி இருக்கார் (கிளாமரில் என்னய்யா கண்ணியமான கிளாமர், கண்ணியம் இல்லா கிளாமர்?)

விதார்த் உட்பட்ட 4 தம்பிகள் நடிப்பும் ஓக்கே. கஜினி வில்லன் தான் இதிலும் வில்லன், பெரிசா எதுவும் செய்யலை. நாசர் நடிப்பு கன கச்சிதம் .

இடைவேளைக்குப்பின் வரும் திரைக்கதை தடுமாறுது. எப்படி சுவராஸ்யமாய்க்கொண்டு போவது என தெரியாமல் காமெடிக்காட்சிகளை வெச்சு ஒப்பேத்தி இருக்காங்க.

சி.பி.கமெண்ட்ஸ் :
வீரம் - பேமிலி ஆடியன்சை கவர்ந்திழுக்கும் முன் பாதி, யூகிக்க வைக்கும் திருப்பங்கள் இல்லாத பின் பாதி. ரஜினிக்கு ஒரு எஜமான், கேப்டனுக்கு ஒரு சின்னக்கவுண்டர். அஜித்துக்கு ஒரு வீரம்.


-------------------------------------------------------------------

குமுதம் சினி விமர்சனம்


பொங்கல் திருவிழாவுக்குப் பொருத்தமாய் வழக்கமான கோட், துப்பாக்கி, கண்ணாடி எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு குடும்பத்துடன் பார்க்கிறபடி கிராமம், வேட்டி, சட்டை என்று ஜல்லிக்கட்டு விளையாடியிருக்கிறார் தல!

கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் ஐந்து அண்ணன் தம்பிகள், கடைசியில் குடும்பஸ்தர்களாகும் கதை!

உப்பு-மிளகுத்தலை (சால்ட் அண்ட் பெப்பர்தான் பாஸ்!) 15 நாள் ஷேவ் பண்ணாத தாடி என்று வழக்கம் போல் அஜித்குமார் ரகளை செய்கிறார். ஆக்ஷன் (டிரெயினில் வெட்ட வந்த வில்லனை அப்படியே அலேக்காக கத்தியால் குத்தி டாப்பில் தொங்கவிடும் காட்சி), டான்ஸ் (வேட்டியை மடித்துக் கட்டி அதிரும் குத்தாட்டம்), என்று காட்சிக்குக் காட்சி விஸில் பறக்கிறது. தல, செமை ரிலாக்ஸாக காமெடியில் கலக்கியிருப்பது கொள்ளை அழகு.

ரொம்ப நாள், ரொம்ப வருஷம் கழித்து தமன்னா. சிலைகளைப் பராமரிக்கும் சிலை. அதே பொலிவு, அதே சுழிவு. கொஞ்சம் காதல், கொஞ்சம் அப்பாவித்தனம், கொஞ்சம் சிணுங்கல் என்று இன்னொரு ரவுண்ட் வர விநாயகம் சுழி போட்டிருக்கிறார்.

அந்த சகோதரர்கள் ரொம்ப பாந்தம். அதுவும் விதார்த், மைனா பாடல் பாடும்போது சிரிப்பலை!

முன்பாதியில் சந்தானமும், பின்பாதியில் தம்பி ராமைய்யாவும் கூடுதலாகவே புன்னகைக்க வைக்கிறார்கள்!

வழக்கமான கதைதான் என்றாலும் சாப்பாடு போட்டுவிட்டு வில்லன்களைத் தெம்பாக அடிப்பது, டிரெயின் கிளம்பிய பிறகு எச்சரிக்கையாக அண்ணனிடம் தங்கள் காதலிகளை அறிமுகப்படுத்துவது என்று சின்னச் சின்ன காட்சிகளில் கவனம் சேர்த்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குநர் சிவா.

எதிரிகள் ஊர் முழுக்க கொலைவெறியுடன் ரவுண்ட் கட்டியிருந்தாலும் நாசர் குடும்பம் மட்டும் எதுவும் தெரியாமல் குடும்பக் குத்துவிளக்குகளாய்த் திரிவது கொஞ்சம் கூட நம்பும்படியில்லை.

வில்லன்கள் சிறுமியைக் கொல்ல வரும்போது அது பயப்படக்கூடாது என்று ஓட்டப்பந்தயம், கண்ணாமூச்சி என்று அதை திசை திருப்பி எதிரிகளை சம்ஹாரம் செய்யும் காட்சி நைஸ். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுக்கு பத்தடி தள்ளி நின்று ஒரு கைகுலுக்கல்!

"நல்லவன்னு சொல்லுவாங்க பாட்டு நன்றாக இருக்கிறது. ஆர்.ஆர்.ரில் டி.எஸ்.பி.க்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி!

முன்பாதியில் ரொம்ப ஜாலியாகப் போகும் படம், பின் பாதியில் வில்லன்கள் ஒரே மாதிரி திட்டம் போடும் காட்சிகளில் தொய்ந்து போகிறது.

வீரம் - தல பொங்கல்

ஆஹா - தல தல தல!

ஹிஹி - பழகிப்போன கதை!

குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

வீரம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in