தினமலர் விமர்சனம்
கௌதம் மேனனின் உதவியாளர் மணி நாகராஜின் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் குமார் - ஸ்ரீதிவ்யா ஜோடியுட-ன் ஊர்வசி, டி.பி.கஜேந்திரன் , விடிவி.கணேஷ், அபிஷேக் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும் நடிக்க, மூன்றாண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒரு வழியாக திரைக்கு வந்திருக்கும் படம் தான் "பென்சில்.
பேருக்கும், புகழுக்கும், பணத்திற்கும் அலைந்து மாணவர்களின் உயிருடன் விளையாடும் தனியார் பள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனும் உயரிய கருவுடன் வந்திருக்கும் பென்சில். படக்கதைப்படி, ஐ.எஸ்.ஓ., தரசான்றிதழ் பெற்று அதன் மூலம் மேலும் கொள்ளையடிக்க., முயற்சிக்கிறது ஒரு பெரும் பணபலம் படைத்த தனியார் பள்ளி. அப்பள்ளிக்கு அந்த ஐ.எஸ்.ஓ. தரசான்றிதழ் அதிகாரியான ஊர்வசி, இன்ஸ்பெக்ஷன் வந்திருக்கும் நாளில் ஒரு மாணவன் பென்சிலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறான். அயோக்கியத்தனமும், அடாவடித்தனமும் நிரம்பிய அம்மாணவன் தமிழகமே கொண்டாடும் பிரபல நடிகரின் வாரிசு வேறு .
அந்த மாணவனின் சாவை முதலில் பார்க்கும் நாயகன் ஜீ.வியும், நாயகி ஸ்ரீதிவ்யாவும் பள்ளி வளாகம் பரபரப்பாவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட சக மாணவனை கொன்ற கொலையாளி யார்? என்று கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். நாயகனுக்கு நாயகி மீதும், நாயகிக்கு நாயகன் மீதும் விழும் சந்தேகம் தவிர்த்து வேறு ஒரு பள்ளி தாளாளர், மாணவனால் பாதிக்கப்பட்ட சக மாணவி, மேலும் ஒரு ஆசிரிய காதல் ஜோடி.... என ஏகப்பட்டடோர் மீது சந்தேக வளையம் விழ, நாயகனும், நாயகியும் நிஜமான கொலையாளியை கண்டு பிடித்தனரா? பள்ளிக்கு தரசான்றிதழ் கிட்டியதா? இல்லையா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதையாக இழுவையாக இழுத்து விடை சொல்கிறது பென்சில் படத்தின் மொத்தகதையும்!
சிவா எனும் கதாநாயகராக ஜீ.வி.பிரகாஷ் குமார் பள்ளி மாணவனாக சாலப் பொருத்தம். ஆனால் ரொம்பவும் நல்ல மாணவராக பள்ளியின் முதல் நிலை மாணவராக நம்புவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மார்ஸ் கிரகத்தை ஆராய துடிக்கும் அவர், திடீரென துப்பறியும் நிபுணராக மாறி, ஸ்ரீதிவ்யா சொல்படி கொலையாளியை கண்டுபிடிக்க முயல்வதும், சாகசங்கள் செய்வதும், ஸ்ரீதிவ்யாவுடன் டூயட் பாடிட துடிப்பதும் நம்ப முடியாத ஹம்பக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கதாநாயகி ஸ்ரீதிவ்யாவும் மாணவியாக குட்டைப் பாவாடையில் ரசிகனை குதுகலிக்க வைக்கிறார். மேலும், நன்றாகவே நடித்திருக்கிறார் அம்மணி என்பது படத்திற்கு பலம் என்றாலும் கொலை நடந்த இடத்தில் பெரிய மனுஷியாக கொலையாளியை பிடிக்க ஜீ.வியுடன் திட்டம் தீட்டுவதெல்லாம் டூ-மச்!
மாணவ வில்லனாக வரும் ஷாரிக்ஹாசன் அறிமுகமா. .? என ஆச்சர்யமாக கேட்கும் வண்ணம் செம வில்லத்தனம் செய்திருக்கிறார். இந்த ஷாரிக் நட்சத்திர தம்பதிகள் ரியாஸ் கான் - உமா ரியாஸின் வாரிசாம். கமலா காமேஷின் பேரனுக்கு நிச்சயம் பிரைட் பியூச்சர் உண்டு. ஆல் தி பெஸ்ட் ப்ரோ!
பிற நட்சத்திரங்களாக மின்னும் ஐஎஸ்ஓ ஆபிஸர் ஊர்வசி, பிரின்ஸி டி.பி.கஜேந்திரன், விடிவி கணேஷ், அபிஷேக், சுஜாவாருணி, மிர்ச்சி ஷா, திருமுருகன் உள்ளிட்டவர்களில் விடிவி உச்சம் தொட்டிருக்கிறார்.
"ஓன்டூ த்ரி..., "கண்களிலே கண்களிலே... உள்ளிட்ட பாடல்கள் ஜீ.வி.பிரகாஷின் இசையில் தாளம் போட வைக்கும் ரகம். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும்பலம்! ஆண்டனியின் எடிட்டிங் இயக்குனர் விருப்பபட்டதை பெல்லாம் செய்து திருப்திபட்டிருப்பதாக தோன்றுகிறது!
மொத்தப் படத்தில் முயல் குட்டி மாதிரி துள்ளும் அழகிய ஸ்ரீதிவ்யாவும், தனியார் பள்ளி மற்றும் பெற்றோருக்கான மெஸேஜ் உடன் கூடிய க்ளைமாக்ஸும் பலம். க்ளைமாக்ஸில் மட்டும் மெஸேஜ் வைத்து விட்டு, மீதி படத்தை இழு, இழு... என இழுத்து சொல்லியிருப்பது பலவீனம்.
மணி நாகராஜின் இயக்கத்தில், சக மாணவன் பிணம் அருகிலேயே ஜீ.வி., மீது ஸ்ரீதிவ்யா காதல் வயப்படுவது உள்ளிட்ட குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் டெக்னிகலாக ரசிகனை கவரும் பென்சில், கதை, திரைக்கதை காட்சிப்படுத்தல்கள்... வாயிலாகவும் இன்னும் லாஜிக்காகவும், மேஜிக்காகவும் உருவாக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு உருவாக்கப்பட்டிருந்தால் பென்சில் மேலும் ஷார்ப் பாகவும், சிறப்பாகவும் இருந்திருக்கும்.... என்பது நம் கருத்து.
ஆகமொத்தத்தில், நல்லமெஸேஜ் சொல்லியிருக்கும் பென்சில் இன்னும் பிரமாதமாக கூர் தீட்டப்பட்டிருக்கலாம்!