தினமலர் விமர்சனம் » கோலாகலம்
தினமலர் விமர்சனம்
'வெண்ணிலா கபடிக்குழு' படத்திற்குப்பின் நடிகை சரண்யா மோகன் ஸோலோ நாயகியாக நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு படம் தான் 'கோலாகலம்'!
கதைப்படி, புதுமுக நாயகர் அமல், பாண்டியராஜனின் வாரிசு. காதல் திருமணம் செய்து கொண்டதால் சொந்தபந்தங்களை இழந்து தனித்து வாழும் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ்' பாண்டியராஜன் தம்பதியின் ஒற்றை வாரிசு அமலுக்கு, சொந்த பந்தங்கள் சுற்றம் இருக்க வாழ்வதற்கு ஆசை! அது, அவரது அப்பா அம்மாவின் காதல் திருமணத்தால் நிராசை ஆன வருத்தத்தில் இருக்கும் அவர், தன் நெருங்கிய தன் கல்லூரி நண்பரின் சொந்த பந்தங்கள் நிரம்பிய குடும்பத்தை தன் குடும்பமாக நினைத்து பாசத்துடன் பழகுகிறார். நண்பனையும், அவனது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களையும் உறவு முறை வைத்து மச்சான், மாமா, சித்தப்பு, பெரியப்பு, அத்தை, அக்கா என பழகும் அமல், ஒருநாள் நண்பனின் தங்கையை கிண்டல் செய்தவனின் கையை முறிக்கிறார். கிண்டல் செய்தவன் நண்பனின் மாமன் மகன், நண்பனது தங்கையின் முறைப்பையன் என்பது தெரியாமலே அமல் அவனது கையை முறிக்க, அவன் அமலை பழி தீர்க்க காத்திருக்கிறான். அதற்கான நாளும் வருகிறது.
அக்குடும்ப திருமண விழா ஒன்றில் ஒட்டு மொத்த உறவின் முன்பும் தன் கை முறிய காரணம் அமல் தான் என்று முறைப்பையன் அமலை முறைக்க, அவனை அடிக்க துரத்தும் அமலை ஒட்டு மொத்த குடும்பமும் நீ என்ன எங்கள் குடும்பமா? ஜாதியா? எனக் கேட்டு வெளியே போ... என துரத்துகிறது. அந்த அவமானத்தில் கூனி குறுகும் அமல், ஜாதியை காரணம் காட்டி தானே என்னை தூக்கி எறிந்தீர்கள்... அந்த ஜாதியை பொய்யாக்கி, அந்த கைமுறிந்த முறை பையனுக்கு கிடைக்க வேண்டிய நண்பனின் தங்கை சரண்யா மோகனை தான் காதலித்து கரம் பிடிக்கப்போவதாக சவால் விட்டு உறுதி கூறி, அந்த திருமண மண்டபத்தை விட்டு வெளியேறுகிறார்.
அமலுக்கும், அவரது சவாலுக்கும் பயந்து நண்பனின் மொத்த உறவும், சரண்யா மோகனுக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் நிச்சயம் செய்கிறது. அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாத அறிமுக ஹீரோ அமல், கைமுறிந்தவனின் கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா.? சரண்யா மோகனை காதலித்து கடத்தினாரா? சவாலில் வென்றாரா.? என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது 'கோலாகலம்' படத்தின் மீதிக்கதை!
சரண்யா மோகன், ரம்யா எனும் பாத்திரமாகவே மாறி பளிச்சிட்டிருக்கிறார். முன்பாதியில் அறிமுகநாயகர் அமலின் காதலுக்கு (வேறொரு பெண்ணுடன்...) உதவுவதும், பின்பாதியில் அவரை துரத்தி துரத்தி, விரட்டி விரட்டி காதலிப்பதும், 'யாரடி நீ மோகினி' தனுஷ்-சரண்யா மோகனை ஞாபகப்படுத்துவது கோலாகலத்தின் வெற்றிக்கு வித்திடுகிறது! பலே, பலே!!
அறிமுகநாயகர் அமல், நல்ல நிறம், நல்ல உயரம், நல்ல உருவம்... ஆனாலும் நல்ல நடிப்பை வழங்குவதற்கு இன்னும் இரண்டு படம் ஆகும் போல...!
பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், வி.கே.ஆர்.ரகு, விஷவாந்த் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது. ஆனால் சிரிப்பு தான் வரவே மாட்டேங்கறது.
பரணியின் இசையில் நல்தாலாட்டு, கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவில் உயிரோட்டம் எல்லாம் இருந்தும் பி.ஜி.சுரேந்திரனின் எழுத்து, இயக்கம், தயாரிப்பில், பின்பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முன்பாதியில் இல்லாதது பலவீனம்!
ஆகமொத்தத்தில், முன்பாதியும் கோலாகலமாக இருந்திருந்ததென்றால் 'கோலாகலம்' மெய்யாலுமே கோலாகலமாக இருந்திருக்கும்!!