ஸ்ரீ சாய்சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜயசங்கர் இருவரும் இணைந்து தயாரிக்க, கே.பாக்யராஜ், பொன்வண்ணன், யுவன், சாராஷெட்டி, சிஞ்சு மோகன், சிங்கம்புலி, செந்தில்வேல், மீரா கிருஷ்ணன், முத்துக்காளை, கடையம் ராஜு, செல்வரகு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க, ஜிப்ஸி என்.ராஜ்குமார் இயக்கத்தில், "ஊரின் நன்மைக்காக போராடும் சாமியாடி, சாஸ்திரி நண்பர்களுக்கும், தீமைக்காக வாழும் சாராய வியாபாரி சகோதரர்களுக்குமிடையில் நடக்கும் முட்டலிலும், மோதலிலும் இறுதி வெற்றி யாருக்கு? எனும் கருவோடு வந்திருக்கும் படமே "அய்யனார் வீதி."
அந்த கிராமத்தின் அய்யனார் கோவில் தலைமை சாஸ்திரியான சுப்ரமணிய சாஸ்திரிகள் - கே..பாக்யராஜும், பெரிய குடும்பத்தைச் சார்ந்த சாமியாடி அய்யனார் - பொன்வண்ணனும் நெருக்கமான நண்பர்கள். ஊர் நல்லது கெட்டதுகளில் முன்னாடி நிற்கும் இருவரும் அய்யனாரின் பரம்பரை பகையாளி மருது - செந்தில்வேல் சகோதரர்களின் கள்ளச்சாராய தொழிலுக்கு பெரும் கட்டயப் போட்டு தடையாய் இருந்து வருகின்றனர். இதனால், அய்யனாரையும், அவரது நண்பர் பாக்யராஜையும் தீர்த்து கட்டத்துடிக்கும் மருது பிரதர்ஸ், அய்யனாருடைய மகள் செளமியா எனும் சாரா ஷெட்டியுடன் தங்களது இளம் வாரிசு செந்தில் எனும் யுவனை பழகவிட்டு, அய்யனாரை ஊரார் முன் சாமியாட விடாது, அவமானப்படுத்துகிறார்கள். அதனால் மனமுடைந்து போகும் அய்யனார், ஊரை விட்டுப் போகிறார். அவருக்கு பதில், அய்யனாராக சாமியாட களம் இறங்குகிறார் சுப்ரமணிய சாஸ்திரிகள் -கே..பாக்யராஜ், அவரையும் தீர்த்து கட்டி ஊரையே ஒழித்துக்கட்ட களம் இறங்குகின்றனர் மருது பிரதர்ஸ். அதிலிருந்து, சாஸ்திரிகள் பாக்யராஜும், ஊர் மக்களும் எப்படி தப்பிக்கின்றனர்? மருது பிரதர்ஸுக்கு முடிவு என்ன ஆகிறது..? என்பதை தலையை சுற்றி மூக்கை தொடும் வகையில் சொல்கிறது "அய்யனார் வீதி" படத்தின் மீதிக் கதையும், களமும்..!
சுப்ரமணிய சாஸ்திரியாக வரும் பாக்யராஜ், அய்யனாராக பொன்வண்ணன், இளம் கதாநாயகராக செந்தில் எனும் யுவன், கதாநாயகியர் செளமியா எனும் சாரா, துர்காவாக சிஞ்சுமோகன், சிங்கமுத்துவாக சிங்கம் புலி, மருதுவாக இப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான செந்தில்வேல், கொத்தால முத்து -ராஜா, சிவகாமி - மீரா கிருஷ்ணன், அய்யனார் - பொன் வண்ணனின் ஜால்ராக்களாக வெவ்வாலு - முத்துக்காளை, இப்பட இயக்குனர் ஜிப்ஸி என்.ராஜ்குமார், புரொடக்ஷ்ன் எக்ஸிக்யூட் டீவ் கடையம் ஆர்.ராஜு, மக்கள் தொடர்பாளர் செல்வரகு... உள்ளிட்ட எல்லோரும் எக்கச்சக்கமாக நடித்திருக்கின்றனர் என்பது தான் இப்படத்தின் பலமும், பலவீனமும் எனலாம்.
சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பில் அடிக்கடி கத்தரி கோல் காணாமல் போயிருப்பது பெரும் பலவீனம். கிராமத்து இயல்பான அழகை படு யதார்த்தமாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சக்திவேல் என்பது பலம்.
யு.கே முரளியின் இசையில் "வாராரு அய்யன் வாராரு.....", "பொண்ணுங்களை பொறுத்தவரை பசங்கள் எல்லாம்காமெடி பீஸு...", "கள்ளப் பார்வை கண்ணைக் கிள்ள...", "உன் கண்ணு சாராயம் முன்னாலே...", "அன்பு கொண்ட ஐயன் முகம்..." உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கும் ரக ராகம். ஆனால், அதே நேரம் பின்னணி இசை காதுகளை ரணமாக்கும் கர்ண கொடூரம்.
யுவன் , பாக்யராஜ் , பொன்வண்ணன் , சிங்கம் புலி ...உள்ளிட்ட பிரபலங்களுடன் புதுமுகங்களும் நடிக்க, ஜிப்ஸி என்.ராஜ்குமார் இயக்கத்தில், கிராமமும் கிராமம் சார்ந்த பகுதிகளில் இப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுபலம். அதே மாதிரி, "கண் அளக்காததையா கை அளக்கும்...?" என்பது உள்ளிட்ட கிராமிய சொலவாடைகளும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. மேலும், பெரும் திருப்பமாக க்ளைமாக்ஸில் அய்யனாராக வேடமிட்டு பாக்யராஜ் செய்யும் கொலை கூட, அட, எனத் திடுக்கிட வைக்கிறது. ஆனாலும் அய்யனாராக பாக்யராஜ் பொன்வண்ணன் அளவு கூட பொருந்தாதது பெரும் வருத்தம்.
மேலும், இப்படத்தில் இடம்பெறும் கிளைக்கதைகள் சிலவற்றில் ஒன்றான இளம் நாயகர் செந்தில் எனும் யுவன், சௌமியா சாராஷெட்டி கல்லூரிக் காதலில், "வாழ்க்கையில் முன்னேற லட்சியம் வேண்டும்..." என்று கூறி, யுவன் ., தன்னை காதலிப்பதாக கூறுவது பார்த்து, கல்பனா சாவ்லா, மேரி க்யூரி, அன்னை தெரசா மாதிரி சாதிக்க விரும்பும் நாயகி, "நாயகரையும் காதலிக்கும் முன் ஏதாவது சாதித்து விட்டு வா..." என்கிறார் சாரா ஷெட்டி, அதனால் யுவன் விடாது முயன்றதால், கல்லூரியில் இளம் சாதனையாளர் விருது இருவருமே பெறுகின்றனர். அதன் பின்னே சாரா ஏன்? காதலன் யுவனை நிராகரிக்கிறார்...? என்பது உள்ளிட்ட புரியாத புதிர்... காட்சிகளும்., அய்யனார் சித்த பிரமை பிடித்தது போல் மௌனமாக இருக்கிறாரே அவருக்கு என்ன ஆயிற்று ? என்கிற ப்ளாஷ்பேக்கில் தொடங்குகிற கதை தேவை இல்லாமல் எங்கெங்கோ பயணித்து, ஏகப்பட்ட வேறு சிறுசிறு ப்ளாஷ் பேக்குகளுடன் எக்கச்சக்க குழப்பத்தை தருவதும் ரசிகனை பெரிதாய் சோர்வடைய செய்கிறது... என்பதும் பெரும் பலவீனம்.
ஆக மொத்தத்தில், "அய்யனார் வீதி எனும் அழகிய தெய்வீக டைட்டிலுடன் கூடிய இத்திரைப்படம், அய்யோ விதி" என சற்றே நொந்து கொள்ள வைக்கிறது!"