தினமலர் விமர்சனம் » சென்னை எக்ஸ்பிரஸ் (இந்தி)
தினமலர் விமர்சனம்
இது சீரியஸான காமெடி படம், காமெடியான ஒரு சீரியஸ் படம்!!. வானத்தை நோக்கி காட்டப்பட்ட கிரேன், கீழ் சரிந்து ஷாருக்கான் முன் க்ளோஸப்பில் நிற்க, கையில் சம்மட்டியுடன், நெற்றியில் ரத்தம் வழிய ஏய்!!! என்று கத்துகிறார் கிங் கான். முதல் காட்சியிலிருந்து காமெடி துவங்குகிறது.
காலகாலமாக ரயிலைப் பிடிக்க ஓடி வரும் நாயகியை கவ்விப் பிடிக்கும் ஷாருக்கான் இந்த படத்தில் நாயகியுடன் அவளைத் துரத்தும் அடியாட்களையும் சேர்த்து பிடிக்கிறார். தாத்தாவின் அஸ்தியை கரைக்க ராமேஸ்வரம் செல்வதாகக் கூறி ஷாருக் சென்னை எக்ஸ்பிரஸ் ஏறுகிறார்.
‘கொம்பன்’ கிராமத்தின் கொம்பனாக ‘பெரிய தலையாக நம்மூரு தகடு தகடு நடிகர், அவரின் மகளாக தீபிகா படுகோனே. தனக்குப் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேற, தப்பிக்க நினைக்கும் தீபிகாவை எதேச்சையாய் காப்பாற்றும் ஷாருக்கான் வில்லன்களின் கத்திப்பிடியில் சிக்கிக் கொண்டு கொம்பன் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
இதன் பின் என்ன? முரட்டு அப்பனிடமிருந்து மகளை அபேஸ் செய்து பின் கடைசியில் நாயகன் சென்டிமென்ட் வசனங்கள் பேசி மனதை குழைத்து சுப மங்களம் காண்பதுதான் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’.
தமிழ் சினிமாவில் எப்படி ‘ரேணிகுண்டா,’ ‘கடப்பா’ முதலிய ஆந்திர இடங்களை ரவுடிகளின் தலைநகராக ஜோடிப்பார்களோ, அதைப்போல இப்போது ஹிந்தி சினிமாவில் தமிழ் நாட்டை வன்முறை மாநிலமாக இழிவுபடுத்த துவங்கியுள்ளனர். காட்சிக்குக் காட்சி டாடா சுமோக்களில் அரிவாளுடன் கூட்டம் கூட்டமாக பல்க் பாய்ஸ்கள். இயக்குனர், தமிழ் நாட்டில் இப்படி எங்க குண்டர்தனத்தைப் பார்த்தார்னே தெரியலை ?? நம்ம ஊர்லிருந்து மசாலா படங்கள் மட்டும் பிரசித்தமாக ரீமேக் செய்யப்படுவதாலோ என்னவோ, தமிழர்கள் என்றாலே இப்படித்தான் என்பது போல் இப்படம் சித்தரிக்கிறது.
சுராஜ் இயக்கிய ‘படிக்காதவன்’ படத்தின் உட்டாலக்கடிதான் சென்னை எக்ஸ்பிரஸ். எங்கே ஒரு படத்திலிருந்து காப்பி அடிச்சா காப்பிரைட்ஸ் கேட்டு வழக்கு போடுவாங்களோன்னு நினைச்சு வழியிலே ‘கில்லி’, ‘ஆளவந்தான்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘முத்து’ இப்படி பல படங்களிலிருந்து காட்சிகள் சுடப்பட்டிருக்கு. என்னதான் இத்தனை படத்திலிருந்து காப்பியடிச்சாலும் படத்தின் கதை என்னவோ கண்ணைக் கட்டி காட்டுக்குள்ள விட்ட மாதிரி கண்டபடி பயணிக்கிறது.
நம்ம ஊர் இட்லி, தோசையை கிண்டல் செய்வதில் துவங்கி மனிதரின் பெயரைக் கிண்டலடிப்பது, உடையைக் கிண்டலடிப்பது, கலாச்சாரத்தைக் கிண்டலடிப்பது என சந்து பொந்தாக புகுந்து தன்னால் முடிந்த வரை ரோஹித் ஷெட்டி கிண்டலடிக்கப் பார்த்திருக்கிறார். இருப்பினும் இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் கிண்டலாக தெரியாமல் கிணற்றுத் தவளை கத்துவது போலத்தான் தெரிகிறது. முதலிலிருந்து கடைசிவரை தமிழரைக் கொச்சைப்படுத்தி கடைசியில் க்ளைமாக்ஸில் கலாச்சாரத்தைப் பற்றி ஷாருக்கான் பேசுமிடம் சிரிப்பைத் தான் எழுப்புகிறது.
கொடுக்கின்ற பேட்டியிலெல்லாம் தீபிகா தமிழ் பெண்ணாக சரியான உச்சரிப்புடன் பட்டையை கிளப்புகிறார் என உரைத்த ஷாருக்கான் என்ன அறிந்தாரோ தெரியவில்லை. தீபிகா பேசும் தமிழ் வசனங்கள் அத்தனை அபத்தம்.
‘ஏய் தங்கபலி கிட்டே வராதே’, ‘இங்க் நிலம் சரில’ (இங்கே நிலைமை சரியில்லை) இப்படி தீபிகா பேசும் வசனங்கள் அத்தனையும் வெறுப்பைத் தான் வரவழைக்கின்றன. தமிழ் பெண்ணாக தீபிகா படுகோனைக் காட்டி இப்படி கொலை செய்து தமிழ் பேச வைத்தது தான் கண்டனத்திற்குரியது. டப்பிங்காவது கொடுத்திருக்கலாம்.
கமல், ரஜினி, தனுஷ், சூர்யா, விக்ரம் இப்படி தமிழ் சினிமாவை சேர்ந்த ஒவ்வொரு கலைஞரும் ஹிந்தியை முடிந்த வரை சரியான உச்சரிப்பில் தான் பேசினர். தமிழ் நடிகைகள் ஸ்ரீதேவியாகட்டும் , ஹேமமாலினியாகட்டும் ஹிந்தியை என்ன கொலை செய்தார்களா ?? இயக்குனர் கொண்ட ஏளனப் பார்வை படம் முழுதும் பிரதிபலிக்கிறது .
தன் துவண்டு போன மார்கெட்டை செங்குத்தாக தூக்கி நிறுத்த பிரியாமணி சரியான குத்தாட்டம் போடுகிறார். சில இடங்களில் ஷாருக்கான் பேசும் வசனங்கள் சிரிப்பு எழுப்புகிறது. பல இடங்களில் காட்டுக்கடி கடிக்கிறது. விஷால் சேகரின் இசைதான் படத்தின் முக்கிய வேர். ‘கஷ்மீருமே டூ கன்னியாகுமாரி’ பாடலும் ‘க்யூன் க்யூன்’ பாடலும் மனதில் பதிகிறது.
ஏதேதோ உளறிக் கொட்டி கடைசியில் சென்டிமென்ட் வசனங்கள் பேசி அதைக் கிளறி மூட ரோஹித் ஷெட்டி முயன்றுள்ளார். படம் முடிந்த பிறகு லுங்கி டான்ஸ் என்று கூறி உடல் அசையாமல் ஷாருக்கான் தீபிகா படுகோனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ட்ரிபியூட் எனக் கூறி ஆடுவது எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூழ கும்புடு போட்டது போலத் தான் தோன்றியது.
மொத்தத்தில் :
‘சென்னை எக்ஸ்பிரஸ்’ சரியான ‘வெண்ணெய் எக்ஸ்பிரஸ்’ . ஷாருக்கான் சொல்வது போல் இந்தப் படம் பார்க்க போனா
“உயிரோட வந்த நீ உயிரோட திரும்ப மாட்ட“ --------------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
ஹீரோ தன் தாத்தாவின் அஸ்தியை கரைக்க ரயில்ல ராமேஸ்வரம் போறார். ரயிலில் வந்த மயிலை சந்திக்கறார். மயிலுக்கு என்ன பிரச்சனைன்னா வீட்ல பார்த்து வெச்ச மாப்ளை பிடிக்கலை, அதனால வீட்டை விட்டு ஓடி வர திட்டம் போட்டிருக்கு.
ஹீரோவை யார்னே தெரியலைன்னாலும் அவர் தான் தன் காதலர்னு சும்மா அடிச்சு விட்ருது. ஆல்ரெடி பார்த்து வெச்ச மாப்ளையை அடிச்சு வீழ்த்துனாத்தான் பொண்ணு ஹீரோவுக்கு! ஹீரோ, ஹீரோயினைக்கூட்டிட்டு எஸ் ஆகறார். வழிப்பயணத்துல ஹீரோயின் கூட சினேகா ஆகிடுது, அடச்சே, சினேகம் ஆகிடுது. லவ் வந்துடுது. (நாமும் எத்தனையோ பயணம் கடந்து வந்துட்டோம் ஒரு லவ்வும் வந்து தொலைய மாட்டேங்குது) அவங்க 2 பேர் லவ் என்ன ஆச்சு? என்பதே கதை.
ரொம்ப சாதாரணமான, நமக்கு மிகவும் பரிச்சயமான இந்தக்கதையை ரொம்ப சுவராஸ்யமான திரைக்கதை, சம்பவங்கள் மூலம் விறுவிறுப்பாக்கொண்டு போறாங்க ஹீரோ ஷாருக்கான். நம்ம ஊர் மவுன ராகம் கார்த்திக் மாதிரி, என்ன ஒரு இளமைத்துள்ளல், நடிப்பு, பாடி லேங்குவேஜ், எல்லாம் அபாரம். இந்த வயசுலயும் பாஜிகர் படத்துல பார்த்த அதே சுறுசுறுப்பு,இளமை. வெல்டன். இவர் பேசும் தமிழ், ஆங்கில, ஹிந்தி வசனங்கள் செம காமெடி கலாட்டா, கிரேசி மோகன் பாணியில் அமைந்த வார்த்தை ஜால காமெடி பெரிய பிளஸ்.
ஹீரோயின் தீபிகா. இவர் லோ ஹிப் சேலை மிகமிக அபாயகரமான ஷேர் மார்க்கெட். வர் போட்டு வரும் வளையம் உள்ள மூக்குத்தி இவர் முக அழகுக்கு பொருந்தவில்லை என யாராவது அவரிடம் போய் சொன்னால் தேவலை (அல்லது ஃபோன் நம்பர் கொடுத்தா நான் மெசேஜ்ல சொல்லிக்கறேன்)
படம் முழுக்க தமிழ் வசனங்கள் வந்து போகுது, மும்பைல சப் டைட்டில் போட்டுத்தான் படத்தை ஓட்டணும் போல...
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. ஓப்பனிங்க் சீனில் ஹீரோயினுக்கு ஓடும் ரயிலில் இருந்து கை கொடுத்து ஏத்தி விடும் ஹீரோ, வில்லன்கள் என தெரியாம 4 பேரையும் அதே போல் கை கொடுத்து ரயிலில் ஏற்றுவது செம காமெடி சீன். தியேட்டரில் செம அப்ளாஸ்.
2. அந்த ரயில் ஒரு பாலத்தில் நிற்கும்போது ஹெலிகாப்டர்ஷாட்டில் இரு புறமும் ஓடும் ஆற்றை காட்டுவது அபாரமான லொக்கேஷன் செலக்ஷன், ஒளிப்பதிவு பிரமாதம். (மகாராஸ்ட்ராவில் உள்ள டூர் ஸ்பாட்டான லோனாவாலாவாம் - நாமெல்லாம் பேங்க்ல லோன் வாங்கிட்டுதான் அங்கே போக முடியும்) ஹாலிவுட் படத்துக்கு இணையான காட்சி அது
3. திருமணமான மாப்பிள்ளைகள் மணப்பெண்ணை தூக்கிக்கொண்டு 300 படிக்கற்கள் உள்ள மலைக்கோயிலில் தூக்கிச்செல்ல வேண்டும் என்ற நிபந்தனைப்படி ஹீரோ, ஹீரோயினை தூக்கிச்செல்லும் செண்ட்டிமெண்ட் சீன்.
4. கூட இருக்கும் வில்லனின் அடியாட்களுக்கு தமிழ்மட்டுமே தெரியும் என்பதால் ஹீரோ - ஹீரோயின் இருவரும் பாட்டு மூலமாகவே சங்கேதமாக தகவல் பரிமாறிக்கொள்வது சுவராஸ்யம். ஹிந்தியில் சூப்பர் ஹிட் பாட்டுக்களை அதே மெட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்பாடுவது பாலிவுட்டில் அமோக வரவேற்பு பெறும்.
5. ப்ரியாமணியுடனான குத்தாட்டம் கலக்கல் டான்ஸ், அந்த மெட்டு, டான்ஸ் கோரியோகிராபி கிழி கிழி (நன்றி - கலா சலா சல சலா ). க்ளைமாக்ஸில் வரும் லுங்கி டான்ஸ் செம ஆட்டம் .
இயக்குநரிடம் சில கேள்விகள்:1. கில்லி படத்தில் விஜய் த்ரிஷாவின் கழுத்தில் அரிவாளை வெச்சு மிரட்டி வில்லன்களிடம் இருந்து தப்பிப்பதும், பிரகாஷ் ராஜை ஜீப்புடன் ஓட விட்டு சேத்தில் தள்ளி விடுவதும் மிக புகழ் பெற்ற காட்சி, அதை அச்சு அசல் அப்படியே காப்பி அடிச்சது ஏன்? இத்தனைக்கும் இது ஆல்ரெடி தெலுங்கில் வந்த சீன் தான். ஒரே சீனை எத்தனை பேர்தான் சுடுவீங்க? (ஒக்கடு தெலுங்கு ஒரிஜினல்)
2. முத்து படத்தில் லவ் லெட்டர் கை மாறி ஆளாளுக்கு தப்பா ஆளை அர்த்தம் பண்ணிக்கிட்டு நைட் தோட்டம் வந்து அலை மோதும் காமெடி அப்படியே சுட்டிருக்கீங்க முடியல(மீட் ஸ்டோர் ரூம்)
3. ஹீரோயினுக்கு ஃபேஸ் எக்ஸ்பிரசன்ஸ் சுத்தமா வர்லை. அதனாலதானோ என்னவோ கேமரா எப்பவும் அவர் முகத்தைத்தவிர மத்த எல்லா இடங்கள்லயும் சுத்திட்டே இருக்கு.
4. ஷாருக்கான் படத்துல ரஜினி வரனும்னு கட்டாயமா? என்ன? ரஜினி இந்தப்படத்துல நடிக்கறார், ஒரு கெஸ்ட் ரோல்ல வர்றார்னு ஆசை காட்டி சும்மா ஒரே ஒரு பாட்டுக்கு அவர் ஃபோட்டோவ மட்டும் மாட்டி ஹீரோ ஷாரூக் ஆடுவது ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் மாதிரி இருக்கு, படு செயற்கை, இதெல்லாம் அறிமுக ஹீரோ படத்துக்கு ஓக்கே, ஷாரூக் மாதிரி சூப்பர் ஸ்டார்கள் இன்னொரு சூப்பர்ஸ்டாரை அண்டிப்பிழைக்கனுமா?
5. இளையதளபதி விஜய், புரட்சித்தளபதி விஷால் 2பேரும் சம்பந்தம் இல்லாம ஏதாவது பஞ்ச் டயலாக் அப்பப்ப பேசுவாங்க, அந்த மாதிரி இதுல ஹீரோ எதுக்காக ஒரு டயலாக்கை அடிக்கடி ரிப்பீட்டிங்க்? - டோண்ட் அண்டரெஸ்டிமேட் த பவர் ஆஃப் எ காமன்மேன் = பொது ஜனத்தின்சக்தியை குறைச்சு எடை போடவேணாம்.
6. அலெக்ஸ் பாண்டியன் அட்டர் ஃபிளாப் ஆக முக்கியக்காரணமே ஹீரோ, 80 கிமீ வேகத்தில் ஜீப்ல போய்க்கிட்டே எதிரே 120 கிமீ வேகத்தில் வரும் ஜீப் டயரை அரிவாளால் வெட்டி தள்ளும் சீன் தான். கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத அந்த சீனை ஏன் காப்பி அடிக்கணும்?
7. கிங்க்காங்கின் மொக்கை காமெடி சீன், இலங்கைக்கு டீசல் கடத்தும் சீன் தேவை இல்லாதது.
8. படத்தின் முன்பாதி செம ஸ்பீடா போகுது, பின்பாதி டெட் ஸ்லோ. இழு இழு என இழுத்திருக்க வேண்டாம், எடிட்டிங்க்ல இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.
9. தனுஷ் இன் உத்தம புத்திரனில் இருந்து சில காட்சிகளை உருவியது எதுக்கு? என் லிங்குசாமியின் ரன் படங்களை மாக்ஸ் காட்சியை சுட்டது ஏன்?
10. ஹீரோவின் பெயர் ராகுல் என வைத்தது யாருக்கு குல்லா போட?
மனம் கவர்ந்த வசனங்கள்1. ஹீரோயின் - அந்த ஃபோன் அவருது.
வில்லன்கள் - அடடா, முதல்லியே சொல்லி இருந்தா அவரையும் தூக்கிப்போட்டிருப்போமே?
2. ஹீரோயின் - எங்கப்பா ஒரு பெரிய தலை. ஓஹோ, டீச்சரா? ஐ மீன் வாத்தியாரா? ஹய்யோ, அவர் ஒரு டான்(தாதா)
3. ஐ ஆம் இன்ஸ்பெக்டர். விச் பார்ட்? ஹோல் பாடிக்கும் யோவ், எந்த ஏரியாவுக்குன்னு கேட்டேன்.
5. உயிரோட வந்த நீ உயிரோட இங்கே இருந்து போக மாட்ட.
6. ஆல் இஸ் வெல் என்னது,? ஆயில் இஸ் வெல்லா?
7. என்னங்க? வண்டி ரிப்பேரா? ஏன் கார்ல புகை வருது? ம்ம்ம், கார் தம் அடிக்குது.
8. கேரளா லாரி டிரைவர் - எந்தா ஜோலி? ஐ ஆம் நாட் ஏஞ்சலா ஜூலி.
9. நான் ரொம்ப நல்லவன், ஒரு மகளோட மாப்பிள்ளைக்கு இதைவிட முக்கியமான தகுதி என்ன வேணும்?
சி பி கமெண்ட் - ஷாரூக் ரசிகர்கள், தீபிகா படுகோனே ரசிகர்கள் பார்க்கலாம். ஜாலி டைம்பாஸ், பெண்களும் பார்க்கலாம்.