தினமலர் விமர்சனம் » ஷிப் ஆஃப் திஸஸ் (ஆங்கிலம்-இந்தி)
தினமலர் விமர்சனம்
ரசிகர்கள் பக்குவப்படவில்லை அதனால் என்படம் ஓடவில்லை என உரைக்கும் படைப்பாளிகளைக் கண்டிருக்கிறோம்!! ஆனால், எத்தனை படைப்பாளிகள் வியாபாரத்தைப் பொருட்படுத்தாத உரிய கலை அம்சத்தைக் கொண்ட படங்களை இயக்கும் தைரியம் கொண்டிருக்கிறார்கள்?? மையக் கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் வரவழைத்து பின்னணி இசையால் சிம்பதியை கிளறிவிட்டு, தான் ஒரு உலக சினிமாவை படைத்துள்ளதாக மார் தட்டிக் கொள்ளும் இயக்குனர்கள் உண்டு.
இங்கே ஒரு இயக்குனர் “ஆனந்த் காந்தி” இன்றைய தலைமுறையினருக்கு ஆர்ட் பிலிம்களின் முன்னோடி என உரைத்தால் அது மிகையல்ல. படம் முழுக்க வரும் கதாபாத்திரங்கள் யாவும் நாம் வாழ்வில் சந்தித்திருப்பதற்குரிய மனிதர்களே. இக்கதையைப் பொறுத்தவரை சிறியவர், பெரியவர் என்று எவரும் கிடையாது. யாவரும் சாதாரண மனிதர்கள். இவர் செய்வது சரி, இவர் செய்வது தவறு என்றும் வகைப்படுத்திக் காட்டவில்லை. ஒவ்வொரு மனிதர்க்கும் தனி வாழ்க்கை, தனி சமயோஜிதம். இந்திய சினிமாவில் பெரிதும் ஆயப்படாத ஒரு இடம் டிராமா இவ்வகையில் வெளிவந்த படங்களும் குறைவு தான்.
இந்த டிராமா வகையை சார்ந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதில் தேவையற்ற பாடல்களோ, பரிதாபங்களோ புகுத்தாமல் கதைக்கு எது தேவையோ அதை மட்டும் சரியான அளவில் விளக்கிக் காட்டியது தான் இயக்குனர் ஆனந்த் காந்தியின் வெற்றி.
ருத்ரைய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ படத்தில் எப்படி முதல் காட்சியிலிருந்து இறுதிவரை கதாபாத்திரங்களின் நிறம் மாறாதோ!! அதைப் போலத்தான் இப்படத்திலும் கதை மாந்தர்கள் திடீரென்று நல்லவராகவோ கெட்டவராகவோ மாறப்படவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் சரியான பினிஷிங் அமைந்திருப்பது படத்தின் சிறப்பம்சம்.
சரி, கதை தான் என்ன? மூன்று மனிதர்கள், ஒவ்வொருவரும் வேறுபட்ட வகையினர். மனிதர்களைப் போல பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் வாழ அருகதை உண்டு, ஒரு மனிதன் வாழ ஓர் உயிரை வருத்தலாகாது என உரைக்கும் மிடில் ஏஜ் மேன். சப்தங்களின் மூலம் களத்தை மனதில் பதிவு செய்து அதற்கு நிழற்படம் கொடுக்கும் ஆங்கிலோ இந்தியன் போட்டோகிராபர். காசு சேர்ப்பதை தவிர வேறு கொள்கைகள் கொள்ளாத சுமார் முப்பது வயதுள்ள இளைஞன். இம்மூவரை சுற்றியுள்ள சமூகம், இவர்கள் வாழ்க்கையை மாற்றும் விதம் தான் கதை.
பொதுவாக ஆர்ட் பிலிம் என்றால் போரடிக்கும், உட்கார முடியாது என்ற எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால் ஆனந்த் காந்தியின் சாதுர்ய வசனங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது. படத்தில் நடித்த ஒரு நடிகரின் நடிப்பைக் கூட நாம் இது வரை கண்ட சினிமா நடிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏதோ யதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை கேமராவை வைத்து படமாக்கியதைப் போலத் தான் தோன்றியது.. முதல் படத்திலேயே இத்தனை நேர்த்தியா...! மெய்சிலிர்க்க வைக்கிறார் ஆனந்த் காந்தி.
சினிமாவை ஒரு பள்ளிக் கூடமாக நினைத்து அதில் முத்துக் குளிக்க நினைக்கும் அனைத்து மாணவர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். வெறும் பொழுது போக்கிற்காக ரிலாக்ஸ் செய்வதற்காக சினிமாவிற்கு செல்ல நினைப்பவர்கள் விலகிக் கொள்வது நல்லது.
ஒரே ஒரு வருத்தம் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 இந்த அளவிற்கு தேசம் முழுவதும் பேசப்படவில்லை. இந்தி படம் இப்படி அமையும் போது அது கேப்டிவேடிங் இந்தியன் சினிமாவாக தேசமெங்கும் பேசப்படுகிறது.. எப்படியோ இதைப்போன்ற படங்கள் வர்த்தக ரீதியிலும் நல்ல வெற்றியைக் காண வேண்டும். அப்போது தான் மெலோ டிராமாக்களுக்கு முட்டுக் கட்டை போட்டு கிரியேடிவ் சினிமாக்கள் களம் காணும்.
ரசிகர்களின் மூளையை சலவை செய்யாமல் எண்ணத்திற்கு விதை போடும் உன்னதப் படைப்பு. சமூக ஆய்வலர்கள், சினிமாவை நேசிப்பவர்கள், சினிமா பித்தர்கள் தவறவிடக்கூடாத ஒரு படம். நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, இயக்கம் அனைத்திலும் மைல் கல்லாக விளங்கும் உன்னதப் புதினம்.