தினமலர் விமர்சனம்
வழக்கம் போலவே இரண்டு சாதிகளுக்கு இடையே சிக்கி சின்னாபின்னமாகும் ஒரு உண்மை காதலை, ஓங்கி உலகிற்கு உரைக்க வந்திருக்கும் மற்றுமொரு படம் தான் இந்த பரஞ்சோதி!
சாரதியும், அன்சிபாவும் வெவ்வேறு சாதியை சேர்ந்த ஒரே கிராமத்து காதலர்கள்! வாழ்ந்தால் காதலித்தவரோடு... இல்லையேல் காலனோடு... என மனதளவில் ஈருயிர் ஓர் உடலாக வாழும் இவர்களது காதல், ஒருநாள் ஊருக்கு தெரிய வருகிறது. இரு சாதியாலும் ஊர் இரண்டுபடகிறது. ஆனாலும், உறுதியோடு, ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒதுங்கி(ஒதுக்கப்பட்டு) உடலாலும், ஈருயிர் ஓர் உடலாகி தங்களது காதல் சின்னமாக நாயகி, வயிற்றிலும் ஒரு வாரிசு சுமந்தபடி வாழும் காதலர்களை, குருதியோடு மண்ணில் சாய்க்க சிறையில் இருந்து ஒரு கொலைக்கைதி ஜாதி வெறியுடன் வௌியில் வருகிறான். அவன் யார்.? அவனுக்கும், காதலர்களுக்குமான சம்பந்தம் என்ன.? இறுதியில் வென்றது யார்.? காதலர்களா.? சிறைக்கைதியா.? சாதியா...? என்பதை உருக்கமாகவும், ரசிகனுக்கு நெருக்கமாகவும் சொல்ல முற்பட்டிருக்கும் படம் தான் பரஞ்சோதி!
அறிமுக நாயகர் சாரதி, அன்சிபா இருவருடனும் கஞ்சா கருப்பு, விஜயகுமார், கீதா, மயில்சாமி, சிங்கமுத்து, முத்துக்காளை, ஷகிலா, சங்கர் குரு ராஜா, மீரா கிருஷ்ணன், போஸ் வெங்கட், பாலாசிங், சண்முக சுந்தரம்... என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கிறது, நிறையவே நடித்தும் இருக்கிறது! அதிலும் சிங்கமுத்து, பெண் வேடத்தில் காமெடி(காமநெடியும்...) பண்ணுகிறேன் பேர்வழி என... கடித்து குதறுவது கொடுமை!
சபேஷ் - முரளியின் இசை, எஸ்.சந்திரசேகரனின் ஔிப்பதிவு, சுதாகரின் படத்தொகுப்பு எல்லாம் ப்ளஸாக இருந்தும் கோபு பாலாஜியின் எழுத்து இயக்கத்தில் பரஞ்ஜோதி, இந்த 21ம் நூற்றாண்டிலும் ரொம்பவே ஜாதி வெறியை போட்டு புரட்டி எடுத்திருப்பதால் சற்றே போராடிக்கிறது.
மொத்தத்தில், பரஞ்சோதி - பேசுகிறது சாதிவெறி!