தினமலர் விமர்சனம்
காதலில் விழுந்தேன் நகுல், நிகிஷா பட்டேல் ஜோடி நடித்து, நாகா வெங்கடேஷ் எழுத்து, இயக்கத்தில் ஒரு வழியாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'நாரதன்".
கதைப்படி, பாண்டிச்சேரி, இண்டர்வியூவுக்குகாக, கோயமுத்தூரில் இருந்து சென்னையில் இருக்கும் மாமா வீட்டிற்கு ரயிலில் வருகிறார் ஹீரோ நகுல். ரயிலில் டிக்கெட் இல்லாமல் அடியாட்களின் துரத்தலுக்கு இடையே பிரயாணிக்கும் நாயகி நிகிஷா பட்டேலுக்கு உதவுகிறார். ரயில், சென்னை வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் ரயிலை விட்டு இறங்கி போகும் நாயகி நிகிஷாவை, மீண்டும் நாயகர் நகுல் சந்தித்தாரா.?, காதலில் விழுந்தாரா..? அல்லது தனக்காக காத்திருக்கும் மாமன் மகள் ஸ்ருதி ராமகிருஷ்ணாவை கரம் பிடித்தாரா.? எனும் கதையை ராதாரவி - வெங்கட் பிரபு - மயில்சாமி காம்பினேஷனில் சினிமாவிற்கு கதை சொல்லும் பாணியில் வித்தியாசமும், விறுவிறுப்பாகவும் கூடவே, காமெடியாகவும் சொல்கிறேன் பேர்வழி... என இயக்குநர் நாகா வெங்கடேஷ் சொதப்பு, சொதப்பென்று சொதப்பியிருக்கிறார். பாவம் படம் பார்க்கும் ரசிகர்கள்.
நகுல் - விஷ்ணுவாக வழக்கம் போலவே விறுவிறு துரு துரு... என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு நடித்திருக்கிறார். அடியாட்களை அடித்திருக்கிறார்.
நிகிஷா பட்டேல், மாயா - ஸ்வேதா என இரு வேறு பெயர்களில் ஒரே மாதிரி ஓடி முடிக்கிறார். பாடல் காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் தவிர்த்து பிற காட்சிகளில், இப்படத்தில் வரும் சைடு ஆர்ட்டிஸ்ட் மதுமிதா அளவிற்கு கூட இவருக்கு நடிக்கவும், உடற்கட்டை காண்பிக்கவும் வாய்ப்பு வழங்கபடாதது ரசிகனுக்கு ஏமாற்றம்.
நகுலின் மாமா மகள் ஸ்ருதி ராமகிருஷ்ணா, இயக்குனர் எனும் பெயரில் படம் முழுக்க இப்படக் கதையையே முன்கூட்டியே சொல்லி கடிக்கும் பிரேம்ஜி அமரன், நகுலுடன் படம் முழுக்க ஓடிக் கொண்டே இருக்கும் நண்பர் அஸ்வின், மாமா - தயாரிப்பாளர் ராதாரவி, விஷ்வா, பவர் ஸ்டார் சீனிவாசன், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, வையாபுரி, கவிதா, பாண்டு, சிசர் மனோகர், நிழல்கள் ரவி, மதுமிதா, மீரா கிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டவர்களில் மயில்சாமி ஆறுதல்!
சுப்ரீம் சுந்தரின் சண்டை பயிற்சியில் ஒன்றிரண்டு சண்டை காட்சிகள் தான் என்றாலும் அவை அதிரடி. சஞ்சய் லோகநாத்தின் ஒளிப்பதிவு பளிச்!
மணிசர்மாவின் இசையில் தடதடதட ட்ரையினுடா.... நம்மை கழட்டி விடுது குயினுடா.... , என் பேரு சந்திரிக்கா...., சாரல் வீசிடும் நேரம் ... உள்ளிட்ட பாடல்கள் ஓ.கே. பின்னணி இசை பழைய பாணி!
நாகா வெங்கடேஷ் எழுத்து, இயக்கத்தில், போஸ்ட் பெய்ட் இருக்கிறப்போ பிரீப்பெய்ட்டுக்கு அலையாதேன்னேன்... உள்ளிட்ட புது மாதிரி டபுள் மீனிங் டயலாக்குகளில் இருக்கும் கிரியேட்டீவிட்டி, காட்சியமைப்புகளில் இல்லாததும், பழைய பாணி கதை சொல்லி காட்சியமைப்புகளும் கடுப்பேற்றுகின்றன.
ஆகவே, இந்த "நாரதன் கலகம் நன்மையில் முடியவில்லை! சாரி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நகுல்!