Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

நேற்று இன்று

நேற்று இன்று,Netru Indru
  • நேற்று இன்று
  • விமல்
  • பிற நடிகர்கள்: பிரசன்னா,
  • நந்தகி
  • பிற நடிகைகள்: அருந்ததி
  • இயக்குனர்: பத்மாமகன்
23 ஜூன், 2014 - 15:23 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நேற்று இன்று

தினமலர் விமர்சனம்


சந்தனக் கடத்தல் வீரப்பனை வைத்து இன்னும் எத்தனை படங்கள்தான் வருமோ தெரியவில்லை. அவரவர் விருப்பத்திற்கு படமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவை உண்மைக்குப் பக்கத்தில் வரவில்லையென்றாலும் பரவாயில்லை, உண்மைக்கு வெகு தூரத்தில் இருப்பதுதான் உண்மையான விஷயம். இந்த படமும் அப்படிப்பட்ட ஒரு படம்தான்.


'பல்லவன், அம்முவாகிய நான்' படங்களை இயக்கிய பத்மா மகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அப்படி ஒன்றும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அளவிற்கு இந்த படத்தில் இயக்குனரின் வேலை இல்லை. ஒரு சில காட்சிகளில் நாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப் படம்தானா அல்லது மலையாளப் படமா, 'நாம் சொல்வது ('அந்த மாதிரியான' மலையாளப் படம் ) என ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தில் இரண்டே இரண்டு பெண் கதாபாத்திரங்கள்தான் வருகின்றன. படத்தில் இவர்களிருவருக்கும் ஆடை செலவு என்பதே இல்லை. மொத்தமாக இருவரும் இரண்டே இரண்டு ஆடைகளைத்தான் படம் முழுவதும் அணிந்திருக்கிறார்கள். அதிலும் ஒருவருக்கு குட்டைப் பாவாடை, மற்றொருவருக்கு ஒரே ஒரு ஆண்கள் அணியும் பனியன் மட்டுமே. அந்த அளவிற்கு படத்தில் அவர்களுக்கான ஆடைகள் செலவு 500 ரூபாயைக் கூடத் தாண்டியிருக்காது.


காட்டில் கடத்தல் தொழில் புரியும் வீராவை, காவல் துறையினர் சுட்டுக் கொன்றாலும், முன்னாள் டிஎஸ்பியான பிரசன்னா காட்டில் மறைந்து கொண்டு காவல் துறையினருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவரை கண்டுபிடித்து சுட்டு கொல்ல ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று செல்கிறது. இதனிடையே காட்டுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்காக நந்தகி, கார் மெக்கானிக்கான விமலுடன் பயணமாகிறார். ஐந்து பேர் குழு பிரசன்னாவைக் கண்டுபிடித்தார்களா, நந்தகி எதற்காக காட்டுப் பகுதிக்குச் செல்கிறார், ஆகிய இரண்டு விஷயங்களும் 'நேற்று இன்று' என மாறி மாறி சொல்லப்படுகின்றன.


படத்தில் இவர்தான் ஹீரோ என யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஐந்து பேர் குழுவில் ஜெமினி பாலாஜிதான் குழுவின் தலைவர். ரிச்சர்ட், ஹரீஷ், நிதிஷ், பரணி மற்ற நால்வரும் அந்த குழுவில் உள்ளவர்கள். இவர்கள்தான் பிரசன்னாவைத் தேடிப் போகிறவர்கள். யாருக்குமே நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை. மற்றவர்கள் எல்லாம் பெண்ணுக்கும், பணத்துக்கும் ஆசைப்படுபவர்களாக இருக்க, ரிச்சர்ட் மட்டும் நல்லவராக இருக்கிறார். ஒரு அதிரடிப்படைக்குரிய இலக்கணத்தில் ரிச்சர்ட்டைத் தவிர, ஒருவர் கூட இல்லை என்பது நட்சத்திரத் தேர்வில் சறுக்கியுள்ள ஒரு விஷயம்.


படம் முழுவதும் குடித்துக் கொண்டேயிருக்கிறார் விமல். வளர்ந்து வரும் நேரத்தில் சில பல வருடங்களுக்கு முன் விமல் நடிக்க சம்மதித்திருக்கும் படமாக இருக்குமோ என்னமோ. இவரிடம் வந்து உதவி கேட்டுப் பயணிக்கும் நந்தகியிடும் 'படுக்கைக்கு வா' என அழைப்பதெல்லாம் சமீபத்திய தமிழ் சினிமாவில் பார்த்த ஒரு மோசமான காட்சி. அதிலும் அவர் சொல்வதையெல்லாம் செய்தால் நந்தகி தர வேண்டிய பணத்தில் குறைத்துக் கொள்வாராம். தமிழ் சினிமா எங்கே போகிறது….?


அருந்ததி, காட்டில் வசிக்கும் பெண்ணாக அறிமுகமாகிறார். ஐந்து பேர் குழுவினரிடம் மாட்டிக் கொண்டு அவர்களுக்கு உதவியாக இருக்கிறார். ஆனால், பழகிய கொஞ்ச நேரத்திலேயே இவரை ஒரு விபச்சாரி என பரணி அடையாளம் கண்டு கொள்கிறாராம். அதன் பின் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து…நான்கு பேர்….சாரி…இதுக்கு மேல நமக்கு எழுத வரலை…..அதிலும் அருந்ததி கட்டிப் பிடிக்கும் போது இன்னொரு முறை கட்டிப் பிடிங்க என ஹரீஷ் கேட்கிறார். அதற்கு அருந்ததி ஏன் எனக் கேட்க, ஹரீஷ் 'எங்க அம்மா ஞாபகம் வந்தது,” என்கிறார். என்ன ஒரு அர்த்தமான வசனம்…ஒரு அம்மாவை இதைவிடக் கேவலப்படுத்த முடியாது. கடைசியில் அருந்ததி யார் எனத் தெரிவது எவ்வளவு பெரிய ட்விஸ்ட்…அடடடடடா…..


நந்தகி, கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு காட்டுப் பகுதியில் விமலுடன் காரில் பயணிக்கிறார். வழியிலெல்லாம் விமலின் காமப் பார்வையில் சிக்கத் தவிக்கிறார். என்னதான் மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் காட்டு வழியில் பயணிக்கும் போது, குட்டைப் பாவாடையுடனும், கவர்ச்சியான மேலாடையுடனும் ஒரு இளம் பெண் பயணிப்பாரா என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.


பிரசன்னா, நேர்மையான காவல் துறை அதிகாரியாக வந்து அதன் பின் காவல் துறையாலேயே கண்டுபிடித்து சுடப்படுகிறார். அந்த அளவிற்கு காவல்துறையினர் புலனாய்வில் தேர்ச்சி இல்லாதவர்களா என்ற கேள்வி எழுதுகிறது.


ஒரு படம் உருவாவதற்கு மட்டும் என்ற விதத்தில் படத்தில் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் இருக்கிறது.


'பத்மா மகன்' என பெண்ணின் பெயரை தனது பெயரின் முதல் எழுத்தாக வைத்துக் கொண்டிருக்கும் இயக்குனரிடமிருந்து பெண்மையைக் கேவலப்படுத்தி வந்துள்ள ஒரு படம். இன்னும் சில மாதங்கள் கழித்து 'நேற்று இன்று' என்ற பெயருடனேயே மோசமான புகைப்படங்களுடன் 'வேற மாதிரியான' படமாக திரும்பவும் வெளிவர வாய்ப்புண்டு.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in