தினமலர் விமர்சனம்
பிரபல படத்தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த வாரிசும், பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் சகோதரருமான உதயா, தன்னை இளம் நாயகராக தக்க வைத்து கொள்ள இன்றைய தமிழ் சினிமா டிரெண்டுக்கு ஏற்றபடி ஆவியை நம்பி நடித்திருக்கும் படம் தான் ஆவிகுமார்.
கதைப்படி, ஆவிகளுடன் பேசுவதையே தொழிலாக கொண்ட இளைஞர் ஆவிகுமார் எனும் நாயகர் உதயா. திருமண வயதை நெருங்கும் அவருக்கு பல இடங்களிலும் குடும்பத்தார் பெண் பார்க்கின்றனர். ஆவிகளுடன் பேசுவது அடுத்த வீட்டுக்காரர் என்றால் ஓ.கே., பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். என் வீட்டுக்காரர் தான் ஆவிகளுடன் பேசுபவர்... என்று எப்படி.? வௌியில் சொல்வது...? என பயந்து நடுங்கும் இளம் பெண்கள், ஆவிகுமாரை கட்டிக்கொள்ள மறுக்கின்றனர்.
இதில் வெறுத்து போகும் ஆவிகுமார் - உதயா, ஒரு மலேசிய டிவி சேனலின் லைவ்ஷோவிற்காக மலேசியா போகிறார். அங்கு ஆவிகளுடன் உதயா பேசுவதை நேரடியாக பார்க்கும் மலேசிய போலீஸ் அதிகாரி நாசர், நிகழ்ச்சி நன்றாக இருந்தது, ஆனால் ஆவி, பேய் என்பதெல்லாம் சுத்த ஹம்பக்! வெறும் கட்டக்கதை எனக்கூற இதில் கடுப்பாகும் உதயா, நாசர் விடும் சவாலை ஏற்றுக் கொண்டு ஏற்கனவே மலேசியாவில் நிகழ்ந்த ஒரு மருத்துவர் கொலையில், கொலையான மருத்துவரின் ஆவி உதவியுடன் இவர் தான் கொலையாளி... என ஒருவரது பெயரை அறிவிக்கிறார். ஆனால் நாசர் மறுக்கிறார். அந்த வழக்கில் இன்னொருவர் சிறை தண்டனை அனுபவிப்பதாக கூறி, அவர் தான் கொலையாளி, மலேசியா போலீஸ் சும்மா கிடையாது... என வாக்குவாதம் செய்கிறார். விஷயம் விபரீதம் ஆகிறது. உண்மையான குற்றவாளியும், அவனது ஆட்களும் உதயாவை தீர்த்து கட்ட களம் இறங்குகின்றனர். அதேநேரம் மீண்டும் தோண்டப்பட்ட அந்த வழக்கு முடியும் வரை உதயா மலேசியாவிலேயே இருக்க வேண்டிய சூழல். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குகிறார் உதயா. அங்கு கதாநாயகி கனிகா திவாரி அழகான ஆன்மாவாக ஆவியாக அலைகிறார்.
கோமா ஸ்டேஜில் மருத்துவமனையில் இருக்கும் கனிகா, அந்த வீட்டில் ஆன்மாவாக ஆவியாக அலைவதற்கும், உதயாவால் புதிதாய் துப்பு துலங்க இருக்கும் அந்த கொலை கேஸூக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது என்ன சம்பந்தம்.? கனிகாவுக்கும், உதயாவிற்கும் என்ன சம்பந்தம்.? கோமாஸ்டேஜில் உயிரோடு இருக்கும் கனிகாவின் ஆன்மா எனும் ஆவி அவரது உடம்பை விட்டு பிரிந்தது எப்படி, பிரிந்த ஆன்மா மீண்டும் உடலோடு இணைந்ததா.? இல்லையா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் அளிக்க முயன்றிருக்கிறது ஆவிகுமார் படத்தின் மீதிக்கதை!
ஆவி குமாராக உதயா, ஆவியையே காதலிப்பது சுவாரஸ்யம். கனிகா ஆவிக்காக வில்லன்களுடன் மோதுவதும், ஆவியின் பிரிவை எண்ணி வருந்துவதும் சுவாரஸ்யமான கற்பனை என்றாலும் நம்ப முடிவது கஷ்டமாக இருக்கிறது.
கனிகா திவாரி, வசீகரமான சிரிப்பில் ரசிகர்களை வாரி சுருட்டுகிறார். ஆவி என்றாலும், பாடல் காட்சிகளில் போதை ஏற்றுகிறார். போலீஸ் அதிகாரியாக நாசர், மிடுக்கு! ஜெகன், முனீஸ்காந்த், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் அவர்களது காமெடியும் ஓவர் டோஸ்!
தாய் முத்து செல்வனின் கதை, திரைக்கதை, வசனம், விஜய் ஆண்டனி - ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி மற்றும் பாடல்கள் இசை, ராஜேஷ் கே.நாராயணனின் ஔிப்பதிவு உள்ளிட்டவை ஆவிகுமார் படத்திற்கு பெரும் பலம்.
கனிகா திவாரியை வில்லன் கோஷ்டி சீனியர் டாக்டரை கொன்ற போதே, கொல்ல முயற்சித்து கோமாஸ்டேஜில் தள்ளுகிறது. சரி! அதன்பின் அவர் உடம்பில் இருந்து வௌியில் வரும் கனிகாவின் ஆன்மா, ஆவி ஆவது எப்படி.? அது, மீண்டும் தன் கோமா ஸ்டேஜ் உடம்பிற்குள் பலமுறை புக முயன்றும் முடியாமல் க்ளைமாக்ஸில் மட்டும் புக முடிவது எப்படி..? எனும் கேள்விகளுக்கு விடை சொல்லியிருந்தால், கே. காண்டிபனின் இயக்கத்தில் ஆவிகுமார் இன்னும் அம்சமாக இருந்திருக்கும்.
அவ்வாறு இல்லாதது ஆவிகுமாரை, கொஞ்சமே கொஞ்சம் அப்பாவிகுமாராக காட்டுகிறது. ஆனாலும், தற்போதைய தமிழ் சினிமாக்களின் அடப்பாவி ஆவி, பேய், பிசாசு... கதைகளுக்கு மத்தியில் ''ஆவிகுமார்'' - ''அப்பாவி குமார்''-ஆக இருப்பது ஆறுதல்!!