தினமலர் விமர்சனம்
சார்லஸ் ஷபீக் கார்த்திகா எனும் தலைப்பிலேயே எம்மதமும் சம்மதம்...எனும் பழமையான விஷயத்தை பறைசாற்றியிருக்கும் இயக்குநர் கதையில் மட்டும் என்ன? புதுசாக யோசித்திருக்க போகிறார்..? என இப்படத்திற்கு போனால், டைட்டிலில் மும்மதமும் சம்மதத்தை சற்றே புதுசாக சொன்னது மாதிரி கதையிலும், காட்சியமைப்பிலும் சில பல புதுமைகளை கண்டுணர முடிகிறது. அதேநேரம் அந்த புதுமை ஓவர் புதுமையாகி பொறுமையை சோதிப்பது தான் சி.எஸ்.கே. படத்தின் பலம், பலவீனமெல்லாம்!
கதைப்படி., சார்லஸூக்கு கிரிக்கெட் பிளேயராக ஆக வேண்டுமென்பது லட்சியம். காதலி கார்த்திகாவிற்காக அந்த லட்சியத்தை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார். இவர்கள் காதல் கைகூட மதம் தடையாக இருக்கிறது.
இந்நிலையில், சொந்த ஊருக்கு போய், பஸ்ஸில் சென்னை வர காத்திருக்கும் கார்த்திகாவிடம், அம்மணியின் குடும்ப நண்பர் ஷபீக், ஒரு சின்ன பெட்டியை கொடுத்து பத்திரம் என்று சொல்லி போகிறார். குடும்ப வறுமைக்காக முதன்முதலாக வைர கடத்தலில் ஈடுபடும் ஷபீக்கை துரத்தும் போலீசிடமிருந்து தப்பிக்க, அவர் இவ்வாறு வைர டப்பாவை கைமாற்றிவிட்டு வகையாக வைர கடத்தல் தலைவனிடம் சிக்குகிறார். அதன்பின் சென்னை வந்து வழக்கம்போல அலுவலகம் போகும் கார்த்திகாவிடம், வைர கடத்தல் தலைவனின் டார்ச்சர் பொறுக்கமாட்டாமல் நான் உன்னைத்தேடி தான் சென்னை வருகிறேன். வந்து அந்த டப்பாவை வாங்கி கொள்கிறேன் என்கிறார் ஷபீக்!
டப்பாவில் இருப்பது வைரம் என்பது தெரிந்ததும் வைர பிசினஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கும் கார்த்திகா அதிர்ச்சி ஆகிறார். ஏற்கனவே காதலன் சார்லஸ் உடனான ஊடல், அவரது விடாத துரத்தல்...வருத்தத்தில் இருக்கும் கார்த்திகா., எதிர்பாராமல் அலுவலக பாத்ரூமில் வழுக்கி விழுந்து மூர்ச்சை ஆகிறார். எல்லோரும் அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட., அம்போ என விடப்படும் கார்த்திகா, இரவு முழுவதும் அங்கே எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் சி.எஸ்.கே. படத்தின் திக் திக் மொத்த கதையும் இந்த கதையுடன் சார்லஸின் காதலி தேடலையும், ஷபீக்கின் இக்கட்டான நிலையையும் கலந்துகட்டி கலவரப்படுத்தியிருக்கிறார்கள்!
சார்லஸாக சரண்குமார், ஷபீக்காக மிஷல் நாசர், கார்த்திகாவாக ஜெய்குஹேனி, சஞ்சயாக நரேன், சந்துருவாக விமல் ஆதித்யா, ஆசிப்பாக கார்த்திக் வெங்கட்ராமன், சுப்புவாக மதுபிரகாஷ், கிருஷ்ணா விஸ்வநாதன், சி.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட முயன்றிருக்கின்றனர். சார்லஸாக வரும் சரண் கிரிக்கெட் பிளேயர் ஆவது லட்சியம் என சொல்லிவிட்டு பிட்சு பக்கமே போகாமல் இருப்பது ஏன்? என்பதும் ஷபீக்காக, முதன்முதலாக வைரம் கடத்திவரும் மிஷல் நாசர் கேமராவை பார்த்து பயப்படுகிறாரா? போலீசைப் பார்த்து பயப்படுகிறாரா? என்பதும் புரியாத புதிர். கார்த்திகாவாக வரும் ஜெய் குஹேனி நடிப்பில் தெரியும் முதிர்ச்சி, அவரது உடம்பிலும் தெரிவது பலவீனம்! அவர் பாத்ரூமிற்குள் மூர்ச்சை ஆவதை அவரது அலுவலகத்தில் யாரும் கண்டுகொள்ளாது போவது காதில் பூ சுற்றும் கதை!.
வில்லனகள் நரேன், விமல் ஆதித்யா இருவரும் மிரட்டல்!.
ஸ்ரீசரவணன் ஜி. மனோகரனின் ஒளிப்பதிவு ஓ.கே!. சித்தார்த்தா மோகனின் இசையும், கோவி.லெனின் வசன வரிகளும் படத்திற்கு பக்கபலம்! அதேநேரம், சத்தியமூர்த்தி சரவணனின் இயக்கத்தில் ஒரே பூட்டிய, இருட்டிய கட்டிடத்திற்குள்ளேயே, பெரும்பகுதி படமும் இழுவையாக இறுதிவரை செல்வதும் திரும்ப திரும்ப பார்த்த காட்சிகளே அடிக்கடி ரிபீட் ஆவதும், சி.எஸ்.கே.வை ஓ.கே. எனும் அளவிலேயே சொல்லவைக்கிறது!.
"சி.எஸ்.கே - ஓ.கே.!!"