இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
குமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்கள் நிறைந்த, திற்பரப்பு அருகே, திருவரம்பு கிராமத்தை சேர்ந்தவர். மத்திய அரசு பணி, இடையூறாக இருந்ததால் அதற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர நவீன எழுத்தாளராக களம் இறங்கியவர். "தமிழ் நாவல்களுக்கு புதுவடிவம் கொடுத்தவர், என இலக்கிய வட்டங்களில் பேசப்படும் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன்.
எழுத்தாளர் சுந்தரராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை, ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி புத்தகங்களால், கவரப்பட்டு எழுத்தாளாக மாறி, 67 புத்தகங்களை எழுதியுள்ளார். "ரப்பர் இவரது முதல் நாவல், "கொற்றவை, "விஷ்ணுபுரம், "பின் தொடரும் நிழலின் குரல் இவரது முக்கிய படைப்புகள். இலக்கியத்தில் இருந்து திரைப்பட வசனகர்த்தாவாக கால்பதித்து, இங்கும் தனக்கான தனித்துவ அடையாளங்களை ஏற்படுத்த, இக் கனவுத்துறையில் நிஜக்கதைகளோடு நிற்கும் இவரோடு மதுரையில் ஒரு சந்திப்பு...
* சினிமாவை பிடிக்காத இலக்கியவாதிகளும், ஏன் அத்துறைக்கு செல்கிறார்கள்?
தமிழில் நான் எழுதவந்த போது, சுஜாதா, பாலகுமாரன் என ஒரு பெரும் போக்கு இருந்தது. நாங்கள் சிறியவர்கள். இதன் அடையாளங்களை தக்க வைத்துக் கொள்வதில் தான் எங்கள் கவனம் இருந்தது. சினிமா, வணிக பத்திரிகைகளுக்கு போகக் கூடாது என்ற கொள்கை இருந்தது. 1990ல் நிலமை மாறத்துவங்கியது. சினிமா நடிகர்களை விட பிரபலமாக இருந்த, தொடர் கதை எழுத்தாளர்களின் வணிக எழுத்து இல்லாமல் போனது. புத்தக பிரசுரத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அப்போது ஆண்டிற்கு 400 புத்தகங்கள் தான் வெளிவந்தன. ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் 30 ஆயிரம் புத்தகங்கள் வெளிவந்து உள்ளன. இது தான் காரணம்.
* வற்புறுத்தலினால் தான் சினிமாவிற்கு வந்தீர்களா?
மலையாள சினிமா இயக்குனர் லோகிததாஸ் நன்கு அறிமுகமானவர். 2004ல் மலையாளத்தில், "கஸ்தூரிமான் படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு கொடுத்தார். தமிழிலும் படம் வெளியானது. யாருடைய கட்டாயத்தினாலும் இத்துறைக்கு வரவில்லை. இந்த படத்தை பார்த்த பின் "சுகா என்னை பாலாவிடம் அறிமுகப்படுத்தினார். அவரது "நான் கடவுள் படத்திற்கு எழுதினேன். பிரபலமாக பேசப்பட்டது.
* எப்படிப்பட்ட படங்களை தேர்வு செய்கிறீர்கள்?
வெறும் வணிக ரீதியான படங்களாக இல்லாமல் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியில் உள்ள உண்மைகள் குறித்து பேசும் படங்களாக இருக்க வேண்டும், என்பதில் கவனமாக உள்ளேன். "அங்காடித்தெரு, "நீர்ப்பறவை படங்கள் இந்த வகையில் தான் இருந்தது. ஓரளவாவது யதார்த்த வாழ்க்கை இருக்க வேண்டும்.
* வசன கர்த்தா நிலையில் இருந்து எப்போது இயக்குனராக மாறுவீர்கள்?
சினிமாவை தீர்மானிக்கும் நிலையில் எழுத்தாளன் இல்லை. என்னாலும் படம் இயக்க முடியும். இதற்கு அதிக உடல் உழைப்பு தேவை. இயக்குனர் மணிரத்தினம் என்னிடம் சொல்வார்... "நீங்களும் இயக்க வந்து விடுவீர்கள் என்று. ஆண்டிற்கு 10 புத்தகங்கள், கதைகள், கட்டுரைகள், விரிவான ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். திரைப்படம் இயக்க ஓர் ஆண்டாவது தேவை. அதனால் இப்போது இயக்கத்திற்கு நான் தயாராக இல்லை.
* எந்தப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளீர்கள்?
கஸ்தூரிமான், நான் கடவுள், அங்காடித்தெரு படங்கள் மாநில, தேசிய விருதுகள் பெற்றுள்ளன. இது போன்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவர உள்ள "கடல் மற்றும் "6 படங்கள் மீதும் வைத்துள்ளேன். "கடல் எனது கதை தான். மற்ற படங்களை விட இப்படத்தில் எனது பங்களிப்பு அதிகம்.
* படங்களுக்கு பாடல் எழுதும் ஆசை இல்லையா?
எனது நாவல்களில் பாடல்கள் எழுதுகிறேன். தமிழ் சினிமாவில் எழுதவில்லை. ஏ.ஆர்., ரகுமான் இசையில் "கடல் படத்தில் வாய்ப்பு வந்து, போனது. மலையாளத்தில் மதுபால் இயக்கத்தில் வெளிவந்த விவாகரத்து குறித்த "ஒளிமுறிவு படத்தில் "டைட்டில் பாட்டு மற்றும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளேன். விருது பெற்றுள்ளது.
சினிமா, இலக்கியம் எதற்கு முக்கியத்துவம்? கடும் விமர்சனங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
எப்போதும் இலக்கியத்திற்குத்தான் முக்கியத்துவம். சினிமாவை ஒரு தொழிலாகவே பார்க்கிறேன். விமர்சனங்கள் என்பது எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும். ஜெயகாந்தனுக்கே விமர்சனம் இருந்தது என்றால் ஜெயமோகனுக்கு இருக்காதா என்ன?