இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெயா டி.வி. தொடங்கி 14வது வருட விழாவை இந்த வருடம் சிறப்பாக கொண்டாட உள்ளனர். அதற்காக இந்த விழாவில் ஒரு மாபெரும் இசை மேதையை பாராட்ட இருக்கின்றனர். அவர் தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 700க்கும் அதிகமான திரைப்படங்கள், 6000க்கும் அதிகமான பாடல்கள், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள், 60 வருட திரை இசை அனுபவங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மெல்லிசை மன்னரின் இசை பயணத்தில் ஜெயா டி.வி. பங்கு கொள்ள இருக்கிறது.
ரசிகர்களின் மனதில் தனக்கென நிரந்தர இடம் பிடித்த இசைமேதை எம்.எஸ்.வி., 1928ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி கேரளாவில் உள்ள பாலக்காடு எழப்புல்லி கிராமத்தில் சுப்பிரமணியன் நாராயண குட்டி என்பவருக்கு மகனாக பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு இசை மீது அலாதி பிரியம். இசை மீது பிரியம் கொண்ட இவருக்கு மானசீக குருவாக திரு நீலகண்ட பாகவதர் கிடைத்தார்.
ஆரம்பகாலத்தில் இவர் ஒரு நடிகராகவே சினிமாவில் வர விரும்பினார். இதற்காக திரைப்பட தயாரிப்பு அலுவலங்களிலும், படப்பிடிப்பு தளங்களிலும் சாதாரண ஊழியராக பணிபுரிந்தார். பின்னர் கே.வி.மகாதேவன் அவர்களின் இசைக்குழுவில் பின்னணி குரல் கொடுக்கும் பாடகராக அறிமுகமானார். 1950-ம் ஆண்டு ஜெனோவா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1952-ல் பிரபல இசையமைப்பாளர் சுப்புராமன் அவர்களின் திடீர் மறைவுக்கு பின்னர் தேவதாஸ் மற்றும் காதல் திரைப்படங்களின் இசையை முடித்து கொடுக்கும் வாய்ப்பு எம்.எஸ்.வி. மற்றும் ராமமூர்த்தி அவர்களுக்கு கிடைத்தது. அதிலிருந்து இந்த இரட்டையர்களின் இசைப்பயணம் ஆரம்பமானது. இவர்களின் முதல் வெற்றி திரைப்படமாக என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய பணம் படம் வெளிவந்தது. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இவர்களுக்கு 1963-ம் ஆண்டு ஒரு திரைப்பட விழாவில் சிவாஜி அவர்களால் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இன்று நம் அனைவராலும் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.வி., அவர்கள் தான். தமிழ் படங்கள் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இவரின் மகத்தான பங்களிப்பை பாராட்டி தமிழ்நாடு அரசும், அரசுசார நிறுவனங்களும், ரசிகர்களும் அளித்த விருதுகளும் வாழ்த்துக்களும் ஏராளம். இருந்தும் இவருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள் எதுவும் இன்றளவும் கிடைக்காமல் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. இந்நிலையில், இப்போது ஜெயா டி.வி. சார்பில் எம்.எஸ்.வி., அவர்களுக்கு பொதுமக்கள் தேர்வு செய்த உயரிய பட்டம் ஒன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்காக வருகிற 22ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், நினைத்தாலே இனிக்கும் என்ற தலைப்பில் ஒரு பிரம்மாண்ட இசை விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது ஜெயா டி.வி.
முன்னதாக கடந்தாண்டு இசைஞானி இளையராஜாவுக்கு, "என்றென்றும் ராஜா" என்ற தலைப்பில் ஒரு பிரம்மாண்ட விழாவை ஜெயா டி.வி., எடுத்தது குறிப்பிடத்தக்கது.