சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர்தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர்தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமாக இருப்பவர். அவரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிகர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத்தோடு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்து விட்டதைகூட நம்பாத முதியவர்கள் இப்போதும் உண்டு. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரும், அவரது வாழ்க்கை ஸ்டைலும் இன்றைக்கு பலபேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் புகழ்பாடுவதாக நினைத்துக் கொண்டு அவரையே கேலிக்கூத்தாக்குகிற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் தயாராகி உள்ள படம்.
சினிமாவில் அதிக தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இன்றைக்கு வெளிவரும் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்களுக்கு அதுதான் பிள்ளையார் சுழி போட்ட படம். இப்போதும் தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் போட்டாலும் ஒருவாரம் கலெக்ஷனை அள்ளிக் கொடுக்கிற படம். அந்தப் படம் எத்தனை இடையூறுகளை சந்தித்து வெளிவந்தது. அது எத்தனை பெரிய வெற்றி பெற்றது என்பது அந்தக் காலத்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ஜனரஞ்சக சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதனை பாடமாகவே வைக்கலாம். அப்படிப்பட்ட அற்புதமான படத்தை உல்டா செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் சிவா என்பவர் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கிறார். தாடி வைத்தவன் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? மொட்டை அடித்து கண்ணாடி போட்டவன் எல்லாம் காந்தி ஆகிவிட முடியுமா? தொப்பி வைத்து கூலிங் கிளாஸ் போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. அப்படித்தான் முயற்சித்திருக்கிறார் சிவா. எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடையில் ஆடட்டும் பாடட்டும், அதனால் சிறு வருமானம் கிடைத்து பிழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவரையே கேலிப்பொருளாக்கி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதை எப்படி சகித்துக் கொள்வான் எம்.ஜி.ஆர் ரசிகன்.
வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் சிவா எம்.ஜி.ஆர் போலவே நடக்கிறர். அவர் பல படங்களில் செய்த ஸ்டைலை இவர் ஒரே படத்தில் செய்கிறார். டூயட்டில் எம்.ஜி.ஆர் போலவே ஆடுகிறார். எம்.ஜி-.ஆரின் ஒவ்வொரு அசைவும் ஒரு ஸ்டைல் அதைப் பார்த்து பார்த்து ரசித்து வாழ்ந்தவன் அவரது ரசிகன். ஆனால் இந்தப் படத்தில் அதையே ஒரு வரைமுறையின்றி செய்து எம்.ஜி.ஆரின் ஸ்டைல், மேனரிசங்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்.
கதையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் உல்டாதான். தொற்று நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார் ஒருவர். வில்லன் கூட்டம் அந்த மருந்தின் ரகசியத்தை அழிக்க நினைக்கிறது. இதனால் வில்லன்கள் நடத்தும் தாக்குதலில் குடும்பம் பிரிகிறது. ஒரு மகன் தாயுடனும், இன்னொரு மகன் வேலைக்காரனுடனும், மகள் தந்தையுடனும் செல்கிறார்கள். பிற்காலத்தில் மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை.