இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் மென்மையான காதல் படங்களுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. அந்த தெய்வீகமான காதல் படங்களை கொடுப்பதற்கு தனித்திறமையும் தேவை. அப்படியொரு மென்மையான, தெய்வீக காதலை எல்லா தரப்பினரும் வரவேற்கும் வகையில் தன் முதல் படத்திலேயே தந்து பாராட்டை குவித்து வருகிறார்... கவிஞர், கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர், இயற்கை ஆர்வலர் என பல முகங்களுக்கு சொந்தக்காரர். இந்த ஆண்டின் அபார
வெற்றிப்படம் '96'ன் இயக்குனர் பிரேம்குமார். முதல் படம் தந்த வெற்றி உற்சாகத்தில் அடுத்த கதை தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் பிரேம்குமாருடன் தினமலர்
சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
* முதல் படமே 'ஹிட்' ஆன உற்சாகம் எப்படி உள்ளது
மற்றவர்களை போலவே எழுத்தாளர் கனவுடன் சினிமாவிற்கு வந்தேன். பெரிய வழிகாட்டுதல் இல்லை. வீட்டில் எல்லோருக்குமே போட்டோகிராபி தெரியும். பிறகு அதில் நுணுக்கங்களை கற்று கேமராமேன் ஆகி சில இயக்குனர்களிடம் உதவியாளராக தொடர்ந்தேன். இருப்பினும் எழுதுவதை நிறுத்தவில்லை. நான் 1996 பிளஸ் 2 பேட்ச். அந்த நினைவுகளை வைத்து தான் இக்கதையை எழுதினேன். எழுதும் போதே விஜய் சேதுபதி, திரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.
விஜய் சேதுபதி எனக்கு நல்ல நண்பர். உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். வித்தியாசமான படங்களை கொடுத்து கொண்டிருப்பவர், இந்த கதையை கேட்டு என்ன செய்ய போகிறாரோ என நினைத்தேன். ஆனால் கதையை கேட்டு விட்டு ஓ.கே. சொன்னார். ரசிகர்கள் அளித்த தீபாவளி பரிசாக இதை கருதுகிறேன்.
* ஒளிப்பதிவாளர் இயக்குனரானது
அதற்கும் விஜய்சேதுபதி தான் காரணம். இந்த கதையை அவரிடம் சொல்லி விட்டு யாராவது நல்ல இயக்குனரை வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். நீங்களே இயக்கி விடுங்கள் என சொல்லி விட்டார்.
* கதையின் பின்னணி
சென்னையில் சினிமாவிற்கு வந்த பிறகு பிளஸ் 2 படித்த நினைவுகள் ஒரு முறை வந்தன. அதன்படி நண்பர்களை தொடர்பு கொண்டு 1996 பேட்ச் நண்பர்கள் சந்திக்க ஏற்பாடு செய்ய கூறினேன். அதன்படி சென்னையில் சந்தித்தனர். ஆனால் நான் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியவில்லை. அதில் கலந்து கொண்டவர்கள் குறித்து நண்பர்களிடம் கேட்ட போது
இருவரது வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை.
மற்றொரு தோழி வெளிநாட்டில் செட்டிலாகியவர். உண்மையில் இவர்களுக்குள் காதல் இல்லை. அதில் சில மாற்றங்களை செய்து '96' கதையை உருவாக்கினேன்.
* படம் வெளியான பிறகு விஜய் சேதுபதி என்ன சொன்னார்
பாராட்டினார். திரிஷா பிரிேஷா கூட பார்க்கவில்லை. படத்தை பார்த்து விட்டு இயக்குனர்கள் சேரன், பார்த்திபன், பாலாஜி தரணிதரன் என பலரும் பாராட்டினர். இந்த படம் ஆட்டோகிராப் போல இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. ஆனால் சேரன் இந்த படம் வித்தியாசமாக இருப்பதாக விளக்கம் அளித்து விட்டு என்னை அழைத்து பாராட்டினார்.
* பிளாஷ்பேக் காட்சிக்கு நடிகர்கள் தேர்வு எப்படி இருந்தது
விஜய் சேதுபதி சிறியவனாக இருந்தால் எப்படி இருப்பார் என யோசித்த போது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யா நினைவுக்கு வந்தார். கவுரி ஜி கிஷண் என் நண்பர் ஒருவரது சகோதரி மகள். இருவருமே நான் எதிர்பார்த்தளவு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியது அருமை.
* '96' இரண்டாம் பாகம் எதிர்பார்க்கலாமா
தற்போது இதுகுறித்து எந்த ஐடியாவும் இல்லை. அப்படியொரு கதை தோன்றவில்லை. ஆனால் எதிர்காலத்தில் எதையும் சொல்ல முடியாது. வரலாம்.
* அடுத்து
மற்றொரு கதை எழுதி வருகிறேன். எழுதுவதை நிறுத்த போவதில்லை. வாய்ப்பு கிடைத்தால் கேமராமேனாகவும் தொடர்வேன்.
* இன்றைய சினிமா உலகம்...
'96' படத்தில் சண்டையில்லை. காதலையும் மென்மையாக தெரியப்படுத்தியுள்ளோம். தரமான வித்தியாசமான கதைகளை ரசிகர்கள் வரவேற்பர் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
* வனவிலங்குகளை படமெடுத்த அனுபவம்
பிரபல கலைஞர் அல்போன்ஸ் ராயிடம் உதவியாளராக இருந்த போது ராஜநாகம் குட்டியிடுவதை படமெடுத்தேன். ஒவ்வொரு முட்டை உடைந்து குட்டி வெளிவருவதை படமெடுத்தது வித்தியாசமான அனுபவம்.
வாழ்த்த premredearth@gmail.com