பட்டும் படாமல் நடந்தால்... : வைரமுத்துவிடம் சிக்காத பாடகியின் மனக்குமுறல்
23 அக், 2018 - 12:36 IST
நீ பட்டும் படாமல் நடந்து கொண்டால், உன் வாழ்க்கை செட்டில் ஆகும் என, கவிஞர் வைரமுத்து பாலியல் மிரட்டல் விடுத்ததாக, பாடகி புவனா சேஷன் என்பவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பின்னணி பாடகி, சின்மயி, மீ டூ ஹேஷ்டேக்கில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, மேலும் பல பெண்கள், தங்கள் உள்ளக் குமுறல்களை வெளியிட்டனர்.
தவறாகவே பேசவில்லை
இந்நிலையில், பாடகி புவனா சேஷன் என்பவர், பேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சின்மயி விவகாரம், இப்போது ஆராயப்பட்டு வருகிறது. எனக்கும், வைரமுத்துவுடன் ஒரு கேவலமான அனுபவம் ஏற்பட்டது. 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயத்தை, இப்போது நினைத்தாலும், வலி என்னை தாக்குகிறது. இந்த விஷயத்தில் உண்மை வெல்ல வேண்டும் என, என்னை ஊக்குவித்த மகனுக்கு நன்றி. எனக்கு துாண்டுகோலாக இருந்த சின்மயிக்கு நன்றி.
22 ஆண்டுகளுக்கு பின், இப்போது ஏன் குற்றம் சாட்டுகிறேன் எனக் கேட்கலாம். சின்மயிடமும் இப்படித்தான் கேட்கின்றனர். இது, கடந்த கால நினைவை, என் கண்முன் கொண்டு வந்தது. 22 ஆண்டுகளுக்கு முன், திருச்சி சாரதாஸ் நிறுவனத்திற்காக, ஒரு விளம்பர பாடல் பாட, எனக்கு அழைப்பு வந்தது. சென்னை, ரங்கராஜபுரத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில், பாடல் பதிவு நடந்தது. அங்கு வைரமுத்து, உங்க குரல் இனிமை, தமிழ் உச்சரிப்பு பிரமாதம். பாடி முடித்து வாருங்கள்; நாம் பேசலாம் என்றார். அந்த அறிமுகத்துக்கு பின், போன் எண்களை பரிமாறி கொண்டோம்.
ஒருமுறை, உங்கள், டெமோ சிடி வேண்டும். ஏ.ஆர். ரஹ்மானிடம் கொடுத்து, வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்றார். மறுநாளே, சிடி கொடுத்தேன். பின், அவரே எனக்கு போன் செய்ய ஆரம்பித்தார். பாரதியார் துவங்கி, இளையராஜா வரை, பலரை பற்றி பேசினோம். அவர் தவறாகவே பேசவில்லை.
கலக்கம்திடீரென்று ஒரு நாள், ரொம்ப நாளா அறிவுப்பூர்வமான ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறேன். என் தேடல், உன்னில் முடிந்து விடுமோ என்றார். சங்கடம் தொற்றிக் கொள்ள, இது வேண்டாமே என்றேன். அடுத்த நாள், என்னை அழைத்து, உன் கண்கள் என்ன கூர்வாளா... என் கவிதையே துண்டு துண்டாகி உன் காலில் கிடக்கிறதே என்றார். என் சங்கடத்தை எப்படி தெரிவிப்பது என கலக்கம். ஏதோ சொல்லி, போனை, கட் செய்தேன்.
பட்டும் படாமல் நடந்து கொள்மறுநாள் என்னை அழைத்து, மலேஷியாவில் விருது வழங்கும் நிகழ்ச்சி இருக்கிறது. நீ வர்றியா என்றார். உடனே நான், பாடவா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவா எனக் கேட்டேன். ரெண்டும் இல்ல என்றார். எனக்கு புரிந்தாலும், புரியலையே சார் என்றேன். இது கூட புரியாத சின்னப் பெண்ணா நீ... பட்டும் படாமல் நடந்து கொண்டால், உன் வாழ்க்கை செட்டில் ஆகும் என்றார். ரஹ்மானிடம் என் குரலை கொண்டு சேர்ப்பதாகவும், உன் வாழ்க்கையே மாறும் எனவும் கூறினார். நான் மறுத்து, எனக்கு உடன்பாடில்லை என கூறினேன்.
மிரட்டல்கள் துவங்கினஒரு வாரம் அமைதி. எந்த போன் காலும் வரவில்லை. திடீரென ஒரு நாள் அழைத்தார். மலேஷியாவுக்கு டிக்கெட் போடுகிறேன். கடைசியாக கேட்கிறேன். நீ வரியா இல்லையா என்றார். கடைசியா என்ன சார்... முதலிலேயே சொன்னேனே, எனக்கு இஷ்டம் இல்லை என்றேன். அப்போது தான் துவங்கியது, அவரது மிரட்டல்கள். என் செல்வாக்கு, என்னவென்று உனக்குத் தெரியுமா. நீ இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி விடுவேன். எல்லாக் கதவையும் சாத்தி விடுவேன் என்றார். நான், பரவாயில்லை சார். இந்த பாதையில் நடந்து தான், நான் பாடகியாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றேன். மீண்டும் மிரட்டினார். என் நிம்மதி கெடும் என்றார். இதற்கு மேல் என்னைத் தொடர்பு கொள்ளாதீர்கள் என, திட்டவட்டமாக சொல்லி போனை வைத்தேன்.
சொன்னபடி உண்மையாகவே கதவுகளை சாத்தினார். தொடர்ந்து, மூன்று வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் என்னை ரத்து செய்தார். ஒரே ஒரு மேனேஜர் மட்டும், புரிஞ்சுக்கோ புவனா... மேலிடத்து பிரஷர் என, முணுமுணுத்தது இன்றும் என் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. ஒரு வாரம் அழுதேன். பின், அடுத்த வேலையை பார்க்க முற்பட்டேன். இந்த துறையில், எல்லாருமே அப்படி இல்லை. அவர் தான் என் வாழ்வை நாசமாக்குவேன் என மிரட்டினார். என் கனவை தகர்த்தவர்களில் முதலிடம், வைரமுத்துக்குத்தான். எங்கு சென்றாலும், அவரை நான் நினைக்கும் வகையில், கதவை மூடினார். அன்றிலிருந்து முயற்சிகளை கைவிட்டு, மேடை கச்சேரிகளில் பாடத் துவங்கினேன். வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், மன உளைச்சல் போகவில்லை.
சின்மயி பதிவுகளை படிக்க படிக்க, என் மனக்குமுறல் அதிகமானது. யாரிடமாவது கொட்டி தீர்க்க வேண்டும் என தோன்றியது. என் மகன் தான் என்னை ஊக்குவித்தான். தைரியமாக பேசு; உண்மை வெல்ல வேண்டும் என்றான். அடுத்த தலைமுறை பெண்களுக்கு ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாக வேண்டும். அதேபோல், தவறான குற்றச்சாட்டுகளும் தடுக்கப்பட வேண்டும். இதை பகிர்ந்தாலாவது சின்மயிக்கும், இன்னும் சில உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நியாயம் கிடைக்கும் என முடிவு செய்து, உங்கள் காலடியில் சமர்ப்பித்து விட்டேன். இதைப் படித்தாலாவது, என் சுற்றத்தார், நான் ஏன் தோற்றேன் என புரிந்து கொள்ளட்டும். தோல்வி அடைந்தவள் என்ற பட்டமும், வைரமுத்துவின் மிரட்டல்களும் என்றுமே என்னை விட்டுப் போகாது. இனி, எனக்கு வரும் மேடை கச்சேரி வாய்ப்புகளும் வராமல் போகலாம். ஆனால் சின்மயி, நான் தனியாக இல்லை.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.