உங்களுக்காகவே இருக்கிறேன் : விஷால்
29 ஆக, 2018 - 20:34 IST
பிறந்தநாள், இரும்புத்திரை 100வது நாள், நற்பணியை இயக்கமாக மாற்றுதல் என சென்னை, கலைவாணர் அரங்கில் முப்பெரும் விழாவாக பிரமாண்டமாக கொண்டாடினார் நடிகர் விஷால். இந்த நிகழ்ச்சியின் மக்கள் நல இயக்கம் என்ற புதிய அமைப்பையும், அதற்கான கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார் விஷால். பின்னர் நிகழ்ச்சியில் பேசியதாவது :
உங்களில் ஒருவன்
உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல உங்களுடைய வெற்றி. வீதியில் நடக்கும் சில விஷயங்களை பார்த்து சும்மா இருக்க முடியாது அப்படி இருந்தால் அது பிணத்துக்கு சமம். சமூகசேவை பின்னாளில் அரசியலுக்கு வருவதற்காக பொய்யாக பூசிக்கொள்ளும் சாயம் என்று கூறுகிறார்கள் அப்படி பொய்யாக இருந்தால் உங்களுக்கு தெரிந்துவிடும். இது நிஜ வாழ்கை இதில் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள் பார்வையில் அரசியல்வாதி
நாட்டுக்கு நல்லது செய்ய இத்தனை கட்சிகள் உள்ளன. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கலாம் ஆனால் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். அதை தீர்த்து வைக்கும் பிரதிநிதியே அரசியல்வாதி. ஆனால், நம் பார்வையில் அரசியல்வாதி என்பது சம்பாதிக்கும் பதவியாக சினிமாவிலும், நிஜத்திலும் நாம் நினைக்கிறோம்.
அரசியல் இயக்கம் அல்ல
வெள்ளம் வரும் போது யாருமே செல்லாத பகுதிக்கு என்னுடன் படகில் வந்து எதையும் பொருட்படுத்தாமல் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நீங்கள் ஒரு நல்லது செய்தால் அதை பார்த்து பக்கத்தில் இருப்பவர்கள் நல்லது செய்வார்கள். இந்த மக்கள் நல இயக்கம் அரசியலை நோக்கி செல்லும் இயக்கம் அல்ல. நான் வணங்கும் இரண்டு கடவுள் அன்னை தெரஸாவும், அப்துல் கலாம் அவர்களின் கனவு இளைய தலைமுறையிரால் மட்டுமே நாட்டை முன்னேற்றமடைய செய்ய முடியும்.
உங்களுக்காக இருக்கேன்
என்னை நான் கண்ணாடியில் பார்க்கும் போது துணிவு தான் நியாபகம் வரும். ஆர்.கே.நகரில் விஷால் ஏன் நிற்கிறார் என்று கேட்டார்கள் ஏன் நிற்க கூடாதென்று திருப்பி கேட்டேன் அவர்களிடம் பதில் இல்லை. நல்லது பண்ண வேண்டும் என்று யார் நினைத்தாலும் போட்டியிடலாம். கட்சி தொடங்குவது தப்பில்லை. நான் உங்களை அழைத்தது நான் உங்களுக்காக இருக்கேன், உங்களுக்கு பின்னால் இருக்கேன் என்பதை கூறவே அழைத்தேன்.
சோதனை இன்றி சாதனை இல்லை
நீங்களும் என்னுடன் கை கோர்த்து நல்லது செய்யும் போது எந்த கேள்வியும் வராது. அப்படி செய்யும் போது உங்களை பாராட்டுவார்களோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக வாழ்த்துவார்கள். என் வாழ்வில் நடந்த விஷயங்களை மட்டுமே உங்களிடம் கூறுகிறேன். சோதனை இல்லாமல் சாதனை வராது.
கட்டடம் என் கனவு
நான் மூன்றரை வருடத்திற்கு முன் கூறினேன் கட்டடம் கட்டிய பின்புதான் திருமணம் என்று அதை அவசரத்தில் கூறவில்லை. என் கனவும் அது தான். ஒவ்வொரு நாளும் நான் தூங்கி எழும் போது கட்டடத்தால் தான் 3500 குடும்பம் சந்தோசபடும் என எனக்கு உருத்திக்கொண்டே இருக்கும். 3500 குடும்பங்களின் நிலையை மாற்றுவதே என் குறிக்கோள் அதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் அதை சந்திப்பேன்.
இவ்வாறு விஷால் பேசினார்.