இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கியூப் நிறுவனங்களை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என ஒரு வேலை நிறுத்தம் செய்தனர். அதற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
தியேட்டர்காரர்களும் தயாரிப்பாளர்களின் முடிவிற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல், மறைமுகமாக அவர்களும் தியேட்டர்களை மூடுவோம் என பதிலுக்கு ஒரு வாரம் மட்டுமே மூடினர். பின்னர் அரசின் தலையீட்டில் அவர்களாகவே தியேட்டர்களைத் திறந்தனர். இருப்பினும் தயாரிப்பாளர்கள் சங்கம் அவர்களது முடிவில் உறுதியாக இருந்தது.
பின்னர் தமிழக அரசு, தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்கள், கியூப் நிறுவனங்கள் ஆகியவை பங்கேற்ற பேச்சு வார்த்தை நடந்து ஒரு முடிவு எட்டப்பட்டு, தயாரிப்பாளர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு ஏப்ரல் 20 முதல் படங்கள் வெளிவந்தன. இருப்பினும் பேச்சு வார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம். இந்தப் பிரச்சினை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
தமிழ்ப் புத்தாண்டுக்கு எந்தப் படமும் வெளிவராமல் ஏப்ரல் 20ம் தேதி முதலே படங்கள் வெளியாகின. அன்று மெர்க்குரி, முந்தல் ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் மெர்க்குரி வசனங்களே இல்லாத படமாக வந்தது. ஆனால், ரசிகர்களைப் பெரிதாகச் சென்று சேரவில்லை.
ஏப்ரல் 27ம் தேதி தியா, பாடம், பக்கா ஆகிய படங்கள் வெளிவந்தன. சாய் பல்லவி தமிழுக்கு தியா படம் மூலம் அறிமுகமானார் என்ற ஒன்றைத் தவிர விஜய் இயக்கிய தியா படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. விக்ரம் பிரபு இதுவரை நடித்த படங்களிலேயே மிகவும் மோசனமா படம் என்ற பெருமையைப் பெற்றது பக்கா.
ஸ்டிரைக் முடிந்தும் அடுத்த இரண்டு வாரங்களில் வந்த படங்கள் எதுவும் வெற்றி பெறாமல் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தன.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நீடித்த வேலை நிறுத்தத்தால் பல படங்கள் வெளியீட்டிற்கு வரிசை கட்டி நின்றன. இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கம் ஒரு குழுவை நியமித்து, ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வர வேண்டும் என ஒரு வரைமுறையை ஏற்படுத்தியது சிறப்பாக நடைமுறைக்கு வந்தது.
அதன்படி மே 4ம் தேதி “அலைபேசி, இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆபாசமான ஒரு படமாக வெளிவந்தது. பத்திரிகையாளர்களுக்கு படத்தைக் காட்டினால் அவர்கள் படத்தைக் கிழித்துத் தொங்கவிட்டுவிடுவார்கள் என நினைத்து அந்தக் காட்சியைக் கூடப் போடவில்லை. இருப்பினும் படத்தில் இடம் பெற்ற ஆபாசக் காட்சிகளை ரசிப்பதற்கென்று ஒரு கூட்டம் படத்தைப் பார்க்கச் சென்று அந்தப் படத்தை நல்ல வசூல் படமாக்கி, தமிழ் சினிமாவில் தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.
மே 11ம் தேதியன்று இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் இரும்புத்திரை வித்தியாசமான படமாக அமைந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் படம் 40 கோடி வசூலைத் தாண்டியது.
தெலுங்கிலும் அபிமன்யுடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு 12 கோடி வசூலைத் தாண்டி வெற்றிப் படமாக அமைந்தது. இரவுக்கு ஆயிரம் கண்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
மே 17ம் தேதி பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளிவந்தது. தனி ஒருவன் படத்தில் வில்லனாக வெற்றிகரமான ரீஎன்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி இந்தப் படத்தில் தனி நாயகனாக நடித்தார். மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து வெளிவந்த இந்தப் படம் அங்கு பெற்ற சுமாரான வரவேற்பைக் கூட இங்கு பெறவில்லை.
மே 18ம் தேதி “18-05-2009, காளி, காதலர்கள் வாலிபர் சங்கம், செயல்” ஆகிய படங்கள் வெளிவந்தன. பிச்சைக்காரன் படத்தில் கிடைத்த வெற்றியை அதற்குப் பிறகு வந்த படங்களில் தக்க வைத்துக் கொள்ளாத விஜய் ஆண்டனி, அதே தவறை காளியிலும் செய்தார். சரியான கதைகளைத் தேர்வு செய்யாததால் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறார். வரும் படங்களிலாவது அதை மாற்றிக் கொண்டால்தான் கஷ்டப்பட்டுக் கிடைத்த இடத்தை அவர் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
மே 25ம் தேதி அபியும் அனுவும், ஒரு குப்பைக் கதை, காலக் கூத்து, பேய் இருக்கா இல்லையா, புதிய ப்ரூஸ்லீ, செம ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஒரு குப்பைக் கதை படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. செம படம் ஜிவி பிரகாஷ்குமாருக்கு தொடர் தோல்வியை மீண்டும் கொடுத்துள்ளது.
ஆக, கோடையில் வந்த படங்களில் தரமான வெற்றி என்று சொன்னால் அது இரும்புத்திரை படத்திற்குக் கிடைத்த வெற்றி மட்டுமே. இந்தப் படம்தான் லாபமாக சில பல கோடிகளை அனைவருக்கும் கொடுத்துள்ளது. கோடிகளை சம்பாதிக்க இப்படியும் படத்தைக் கொடுக்கலாமா என கேள்வியை எழுப்பியது இருட்டு அறையில் முரட்டு குத்து.
2018 கோடையில் வந்த 20க்கும் மேற்பட்ட படங்களில் இரண்டே இரண்டு படங்கள்தான் லாபகரமான படங்களாக அமைந்தன. சுமாரான வெற்றியில் இரவுக்கு ஆயிரம் கண்கள் இடம் பிடித்தது. மற்ற படங்கள் மூலம் பல கோடிகள் நஷ்டம் என்பதே உண்மை.
மற்ற படங்களில் பல படங்கள் வந்த அடையாளம் கூடத் தெரியாமல் தியேட்டரை விட்டு ஓடிய படங்களாகவே இருந்தன. கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே தவிர தரமான படங்களின் வருகை என்பது கோடையில் காணப்படும் கானல் நீராகவே உள்ளது.
2018 கோடையில் வெளிவந்த படங்கள்...
ஏப்ரல் 20 : மெர்க்குரி, முந்தல்
ஏப்ரல் 27 : தியா, பாடம், பக்கா
மே 4 : அலைபேசி, இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல்
மே 11 : இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை
மே 18 : 18-05-2009, காளி, காதலர்கள் வாலிபர் சங்கம், செயல்
மே 25 : அபியும் அனுவும், ஒரு குப்பைக் கதை, காலக் கூத்து, பேய் இருக்கா இல்லையா, புதிய ப்ரூஸ்லீ, செம