கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
காவிரி நதி நீர் விஷயத்தில், கர்நாடகாவுக்கு எதிராக பேசியதாக கூறி, 'காலா' திரைப்படத்தை, கர்நாடகாவில் திரையிடுவதற்கு, கன்னட திரைப்பட வர்த்தக சபை தடை விதித்திருந்தது.
இந்நிலையில், ரஜினி மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர், திரைப்படம் வெளியிடுவதற்கு அனுமதிக்குமாறும், அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டுமென்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற அறை எண் 16 ல், நீதிபதி ஜி.நரேந்திரா விசாரித்தார்.
'பத்மாவத்' திரைப்படம் வெளியான போது, திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, 'காலா' திரைப்படத்துக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
இத்திரைப்படத்துக்கு, மாநில அரசு தடை விதிக்காததால், நாங்கள் தலையிட முடியாது. படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு, தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி, உள்துறை அமைச்சகம், மாநில போலீஸ் டி.ஜி.பி., நகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இதற்கிடையில், கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த், பெங்களூரு முதல்வர் அலுவலக இல்லத்தில், முதல்வர் குமாரசாமியை சந்தித்து, காலா திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு மனு அளித்தார்.
பின், குமாரசாமி அளித்த பேட்டி : நீதிமன்ற தீர்ப்பு நகல் எனக்கு கிடைக்கவில்லை. காலா திரைப்படத்துக்கு, கன்னட அமைப்புகளும், கன்னட திரைப்பட வர்த்தக சபையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே, கர்நாடகாவில் படத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது என்று ஒரு கன்னடராக கூறுகிறேன். ஒரு வேளை வெளியிட்டு, ஏதாவது நடந்தால், தயாரிப்பாளர்களே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சா.ரா.கோவிந்த் கூறுகையில், காவிரி நதி நீர் விஷயத்தில், ரஜினி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், படம் வெளியிடுவதற்கு தடை விதித்திருக்க மாட்டோம். கன்னட சங்கங்கள் நடத்தும் போராட்டத்துக்கு, நானும் ஆதரவு தெரிவிக்கிறேன். திரைப்படத்தை யார் விநியோகிப்பார்கள் என்று பார்ப்போம்.