டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
படத்திற்கு படம் வித்தியாசமாகவும், சமூக கருத்துக்களை சொல்லும் விதமான படங்களை கொடுத்து வரும் அக்ஷ்ய் குமார், பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் தொடர்பான பேட் மேன் படத்தில் நடித்திருக்கிறார். தமிழரான அருணாச்சலம் முருகானந்தம், குறைந்த விலையில் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்துக் கொடுத்து சிறந்த சமூக ஆர்வலராக இருப்பவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அக்ஷ்ய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் மற்றும் பலர் நடிக்க பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள பேட் மேன் படம் பற்றி அக்ஷ்ய் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
பாலிவுட்டில் நிறைய பெரிய நடிகர்கள் உள்ளார்கள், நீங்கள் மட்டும் தான் சமூகம் சார்ந்த படங்களாக நடிக்கிறீர்கள், மற்றவர்கள் நடிப்பதில்லையே ஏன்?
அதுப்பற்றி எனக்கு தெரியாது. கதை பிடித்திருந்தால் அதுபோன்ற படங்களில் நான் நடிக்கிறேன். முன்பு டாய்லட் தொடர்பான படத்தில் நடித்தேன், இப்போது சானிட்டரி நாப்கின் தொடர்பான படத்தில் நடித்திருக்கிறேன். ஹாலிவுட்டில் கூட இந்த சப்ஜெக்ட்டை வைத்து படம் வெளியாகவில்லை. காண்டம், விந்தணுக்கள் வைத்து கூட ஹாலிவுட்டில் படம் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த விஷயத்தை யாரும் செய்யவில்லை, நாங்கள் செய்துள்ளோம். நம் நாட்டில் 82 சதவீதம் பெண்கள் நாப்கினை பயன்படுத்துவது கிடையாது. ஒன்று அவர்களுக்கு பொருளாதார ரீதியிலான சிக்கல் இருக்கும், இல்லையென்றால் அதுப்பற்றிய விபரம் தெரிந்திருக்காது. என்னைப் பொறுத்தமட்டில், ஒரு பெண், தன் தந்தையிடம் வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது நாப்கின் வாங்கிவிட்டு வாங்க அப்பா என்று சொல்ல வேண்டும். அந்தநாளுக்காக காத்திருக்கிறேன்.
இந்தப்படத்தில் பால்கியை தேர்வு செய்தது ஏன்?
அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சிறந்து விளங்க கூடியவர் இயக்குநர் பால்கி. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க இவரை போன்றவரால் தான் முடியும் என நான் விரும்பினேன். அவரின் பல படங்களை பார்த்திருக்கிறேன், அனைத்து சிறப்பான படைப்புகள். படத்திற்கு தேவையான காட்சிகளையும் அவர் சிறப்பாக இயக்கி உள்ளார். பால்கியால் தான் இந்தப்படம் சாத்தியம்.
சானிட்டரி நாப்கினை பற்றி நீங்கள் எப்போது முதன்முதலில் தெரிந்து கொண்டீர்கள்?
எனக்கு 15வயது இருக்கும் போது அதுப்பற்றி அறிந்து கொண்டேன். இதுதொடர்பாக என் மனைவி நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நிலைத்திருப்பது எப்படி?
சினிமாவில் நிலைக்க வேண்டுமென்றால் உங்களின் நடிப்பு திறனை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பகாலத்தில் என்னை ஆக்ஷ்ன் ஹீரோவாக பார்த்தார்கள். அதனால் தொடர்ந்து ஆக்ஷ்ன் படங்களாக பண்ணினேன். ஆக்ஷ்ன் தவிர வேறு எதுவும் தெரியாது என்று இருந்த என்னை, பிரியதர்ஷன் தான் ஹேரா பெரி படம் மூலம் என்னால் காமெடியும் செய்ய முடியும் என்று நிரூபித்தார். அதன்பின் சில நெகட்டிவ் கலந்த கேரக்டரில் நடித்தேன். பிறகு, தட்கன், ஏக் ரிஷ்தா போன்ற காதல் படங்களில் நடித்தன் மூலம் என்னால் எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க முடியும் என்று ரசிகர்கள் உணர்ந்தார்கள். ஒரே மாதிரியாக நடிக்காமல், ஒரேமாதிரியான படங்களை கொடுக்காமல், உங்களை வெவ்வேறு விதமாக மாற்றி காட்ட வேண்டும், அப்போது தான் சினிமாவில் தாக்குபிடிக்க முடியும்.
அனுபவம் வாய்ந்த இயக்குநர்களை விட புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள், அதுப்பற்றி உங்கள் கருத்து?
நீங்கள் சொல்வது உண்மை தான். என் சினிமா பயணத்தில் அதிகமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளேன். புதியவர்களுடன் பணியாற்றும்போது ஒருவித புது அனுபவம் கிடைக்கும். புதியவர்கள் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நிறைய உழைப்பார்கள். அது எனக்கு பிடிக்கும். நான் நடித்த பல வெற்றி படங்கள், அனுபவம் வாய்ந்த இயக்குநர்களை விட புதியவர்களின் படங்களாக தான் இருக்கும்.
நாப்கின் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?
பெண்களுக்கான சானிட்டரி நாப்கினை, அரசாங்கம் இலவசமாக வழங்க வேண்டும். குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு இது மிகவும் முக்கிய தேவையாக உள்ளது. அரசாங்கம் ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.400 செலவு செய்ய வேண்டும். இதன்மூலம் நாப்கின் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அக்ஷ்ய் குமார் கூறினார்.