ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் அபூர்வமாக சில ஒற்றுமைகள் அமைவது உண்டு. சில வருடங்களுக்கு முன்பு ஒரே ஆங்கிலப் படத்தைப் பார்த்து, வெவ்வேறு விதத்தில், வெவ்வேறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தது. ஒரே சமயத்தில் ஒரே ஆங்கிலப் பட டிவிடியை மூன்று பேர் காப்பியடித்து படங்களை எடுத்ததுதான் 'காப்பியடித்தல்' என்பதில் இதுவரை வந்ததின் உச்சமாக இருக்கிறது. அதை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
பழைய படங்களின் கதைகள், காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைத் தெரியாதது போல, கண்டுபிடிக்க முடியாதது போல அவ்வளவு அழகாகக் காப்பியடிப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். அதைப் பற்றி நாம் சொன்னால் அவர்கள் உடனே கோபப்படுவார்கள். சரி, பழைய காப்பி எதற்கு இப்போது ?, புதிய காப்பி ஒன்று பொங்கலையொட்டி வெளியான படங்களுக்குள் அமைந்திருக்கிறது. அது, யதேச்சையாக அமைந்ததா, அல்லது தெரியாமல் காப்பியடித்ததா என்பதை படம் சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.
பொங்கலையொட்டி ஜன., 12ம் தேதி வெளியான 'குலேபகாவலி, தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச்' ஆகிய படங்களின் நாயகர்கள் மூவருமே குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள். 'குலேபகாவலி' படத்தின் நாயகன் பிரபுதேவா திருடன், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகன் சூர்யா, சிபிஐ ஆபீசர் போல நடித்து கொள்ளை அடிப்பவர், 'ஸ்கெட்ச்' பட நாயகன், வண்டி உரிமையாளர்களுக்கே தெரியாமல் அவர்களது வண்டிகளை திருடிக் கொண்டு வருபவர். ஆக மொத்தம் மூவருமே ஒரு விதத்தில் 'திருடன்(ர்)கள்' தான்.
இதில், இரண்டு பட நாயகிகளுக்குள்ளும் ஒரு ஒற்றுமை உள்ளது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் ஒரு பிராமணப் பெண், அது போல 'ஸ்கெட்ச்' படத்தின் நாயகி தமன்னா கதாபாத்திரமும் ஒரு பிராமணப் பெண். இரண்டு பட நாயகிகளுமே படத்தின் நாயகன்கள் குறுக்கு வழியில் சம்பாதித்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவர்களது வீட்டிற்கே காதலர்களை வரவழைத்து அவர்களைத்தான் திருமணம் செய்து கொள்வோம் எனக் கூறுகிறார்கள்.
அது மட்டுமல்ல, மூன்று படத்தின் நாயகர்களும் அவர்களது திருட்டுத்தனத்தைத் தனியாகச் செய்வதில்லை, கூடவே நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு செய்கிறார்கள். 'குலேபகாவலி'யில் பிரபுதேவாவிற்கு ரேவதி, ஹன்சிகா, முனீஷ்காந்த், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யாவுக்கு ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், சிவசங்கர் மாஸ்டர், 'ஸ்கெட்ச்' படத்தில் விக்ரமுக்கு, விஷ்வந்த், ஸ்ரீமன், கல்லூரி வினோத் என ஒவ்வொரு படத்திலும் ஒரு நண்பர்கள் கூட்டம்.
எப்படி, இப்படி ஒரே நாளில் வெளிவந்த படங்களுக்குள் இப்படிப்பட்ட சில ஒற்றுமைகள்..யார், எதிலிருந்து காப்பியடித்தார்கள் ?.