துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தமிழ் சினிமாவை உலக அரங்கமே திரும்பிப் பார்ப்பதற்கும், திரும்பிப் பார்த்ததற்கும் காரணமானவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் தான். தன் நடிப்பால் உலகையே வியக்க வைத்தவர் சிவாஜி. தனது அழகான சிரிப்பால் தமிழக சிம்மாசனத்தை மட்டுமின்றி தமிழக மக்களின் சிம்மாசனத்தையும் இன்றளவும் ஆட்சி செய்து வருபவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்., தான்.
1917 ஜன., 17ல் இலங்கையின் கண்டியில் பிறந்தார் எம்.ஜி.ராமச்சந்திரன். இவரது பெற்றோர் மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. தந்தையின் வேலை நிமித்தமாக கேரளாவில் குடியேறினார். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன் தமிழகத்தின் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., வருமானத்திற்காக சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார்.
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் சதிலீலாவதி. 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த ராஜகுமாரி படம் தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். அவர் நடித்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம் மூலம் அரசியல்வாதியாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். தி.மு.க.,வின் உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார்.
1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாத்துரையின் மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்.
தனது வாழ்நாளில் மொத்தம் 136 படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு மட்டுமின்றி, நாடோடி மன்னன் திரைப்படத்தை தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டார். வெற்றி பெற்றால் நான் மன்னன் இல்லை நான் நாடோடி என்று சவால் விட்டே அந்த படத்தை அவர் வெளியிட்டு வெற்றியும் பெற்றது இன்றளவும் தமிழக மக்களின் மனதில் மன்னாதி மன்னனாக விளங்குகிறார்.
1977 முதல் 1987 வரை (1984-1985 தவிர்த்து) தமிழக முதல்வராக தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த ஒரே தமிழக முதலமைச்சரும் அவரே. தனது படங்களில் இடம்பெறும் தத்துவ பாடல்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவமே அவரது அரசியல் செல்வாக்கையும் மக்கள் செல்வாக்கையும் அதிகரித்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்தியாவில் முதன்முதலாக நடிகராக இருந்து முதல்வரானவர் இவரே.
இரண்டு முறை பிலிம்பேர் விருது, தேசிய விருது, கவுரவ டாக்டர் பட்டம் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபர், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார்.
சத்யா ஸ்டூடியோ மற்றும் எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் என்பதை நடத்தினார். இதன் சார்பில் பல்வேறு படங்களில் நடித்தார். தாய் என்ற வார இதழையும், அண்ணா என்ற தமிழ் தினசரி நாளிதழையும் நிறுவி, அதன் ஆசிரியராகவும் இருந்தார்.
செத்துப் பிழைத்தவர்
1967 ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆரின், ராமாவரம் தோட்டத்துக்கு, எம்.ஆர்.ராதா, தயாரிப்பாளர் வாசுவுடன் சென்றார். மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென தன் கை துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். இதில் எம்.ஜி.ஆரின் காதில் குண்டு பாய்ந்தது. பின் எம்.ஆர்.ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.ஜி.ஆருக்கு காதில் பாய்ந்த குண்டை அகற்ற ஆப்பரேஷன் நடந்தது. இந்த சம்பவத்தால் அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த பாதிப்பினால் உடைந்து போகாமல் தன்னம்பிக்கையுடன் போராடி பல்வேறு சாதனைகளை படைத்தார்.
ஆயிரத்தில் ஒருவன், அரசகட்டளை, மன்னாதி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைபெண், அன்பே வா என அவர் நடித்த படங்கள் எல்லாமே சினிமா உள்ளவரை அழியாது நிற்கும் அளவிற்கு இன்றும் சின்னத்திரைகளிலும், சில வெள்ளித்திரைகளிலும் ஹவுஸ்புல்லாகி ஓடுவது எம்.ஜி.ஆர் என்ற அந்த ஒற்றை சொல்லுக்கே உரிய மேஜிக்.
எத்தனை நடிகர்கள் வந்தாலும், சென்றாலும் இந்த மன்னாதி மன்னனை போன்று ஓர் நடிகர் பிறப்பது அரிதே...! நூற்றாண்டை கடந்த எம்ஜிஆர்., காலத்தை வென்றவனாய், காவியத் தலைவனாய் இந்த உலகம் உள்ளவரை பேசப்படுவது திண்ணம்!