ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1960ம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் பால் வடியும் முகத்துடன் அம்மாவும் நீயே...அப்பாவும்...நீயே என்று பாடிய கமல்ஹாசன் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பெரிய ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறார் என்று அப்போது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே “பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, கண்ணும் கரளும் (மலையாளம்), வானம்பாடி, ஆனந்த ஜோதி” என அந்தக் கால நடிப்பு ஜாம்பவான்களான எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்எஸ்ஆர், சத்யன், எம்.ஆர்.ராதா, அசோகன், சாவித்ரி, சரோஜாதேவி, விஜயகுமாரி, தேவிகா என பலருடனும் நடித்து அப்போதே நல்ல அனுபவத்தைப் பெற்றார்.
அதன் பின் இளம் பவருவத்தில் அரங்கேற்றம் படம் மூலம் பாலசந்தரால் மறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அந்தப் படத்தில் நடித்த பிறகுதான் கமல்ஹாசனுக்கும் ஒரு அடையாளம் கிடைத்தது. தொடர்ந்து சின்ன சின்னக் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படியே தமிழ், மலையாளம் என 20 படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
1975ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் படம் கமல்ஹாசனை ஒரு கதாநாயகனாக தனித்து பார்க்க வைத்தது. இருந்தாலும் தமிழை விட அப்போது அதிகமான மலையாளப் படங்களில் நடித்தார் கமல்ஹாசன். மீண்டும் ஒரு மாற்றத்தை கமல்ஹாசனுக்கு மூன்று முடிச்சு படம் மூலம் கொடுத்தார் இயக்குனர் பாலசந்தர். இருந்தாலும் தமிழ், மலையாளம் மாறி மாறி நடித்த கமல்ஹாசன் ஒரு நாயகனுக்கு உரிய அடையாளத்தை அடையாமல் இருந்தார்.
பாரதிராஜாவால் 16 வயதினிலே படத்தில் அவர் ஏற்று நடித்த சப்பாணி கதாபாத்திரம் கமல்ஹாசனை முற்றிலும் மாற்றியது. அதன் பின் மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகத்தில் தடம் பதிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் மலையாள சினிமா அவரைக் கைவிடுவதாக இல்லை.
பாலசந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த மரோசரித்ரா படத்தின் மாபெரும் வெற்றி கமல்ஹாசனை எங்கேயோ கொண்டு போனது. அடுத்து வந்த அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், தப்புத் தாளங்கள், நீயா, அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும்” ஆகிய படங்கள் அவரை வெற்றிகரமான கதாநாயகனாகவும் மாற்றின. சில படங்களில் ரஜினிகாந்துடன் சேர்ந்தும் நடித்தார். அதன்பின் அவரும் ரஜினிகாந்தும் எடுத்த முடிவின் படி இருவரும் தனித் தனியாக மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தனர்.
80களில் கமல்ஹாசனும் தனி கதாநாயகனாக பல வெற்றிப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். உல்லாசப் பறவைகள், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, ராம் லட்சுமண், ராஜ பார்வை,” என விதவிதமான படங்கள், கதாபாத்திரங்கள்.
1981ல் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ஏக் துஜே கேலியே படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. அவருக்கு ஹிந்தியிலும் பெரிய மார்க்கெட்டை திறந்து கொடுத்தது.
1982ல் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த மூன்றாம் பிறை படம் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து ஹிந்தியில் “சனம் தேரி கசம், சத்மா, சாகர்” என ஹிந்திப் படங்களும் அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தன.
தெலுங்கிலும், “சாகர சங்கமம், சுவாதி முத்யம், இந்துருடு சந்துருடு,” என வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த படங்கள் பெரிய வெற்றியைத் தேடித் தந்தன.
தமிழில் “தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், ஒரு கைதியின் டைரி, காக்கி சட்டை, உயர்ந்த உள்ளம், விக்ரம், புன்னகை மன்னன், காதல் பரிசு, நாயகன், சூரசம்ஹாசன், உன்னால் முடியும் தம்பி, அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா” என 80களில் கமல்ஹாசன் நாயகனாக நடித்து வந்த படங்களில் அவருடைய கதாபாத்திரங்களில் ஒன்றின் சாயல் மற்றொன்றில் இருக்காது. பல காதல் படங்களாலும், இளமையான கதை கொண்ட படங்களாலும் காதல் இளவரசன் என்று கமல்ஹாசன் அழைக்கப்பட்ட காலம் அது. ஒவ்வொன்றும் விதவிதமான கதாபாத்திரங்கள். 80கள்தான் கமல்ஹாசன் படங்களின் பொக்கிஷம் என்று சொல்லலாம்.
90களிலும், “மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் மகன், கலைஞன், மகாநதி, நம்மவர், சதி லீலாவதி, குருதிப்புனல், இந்தியன், அவ்வை சண்முகி, காதலா காதலா” என அவருடைய படங்கள் வேறு ஒரு தளத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தன. 80களில் வந்த கமல்ஹாசன் படங்களுக்கும் 90களில் வந்த கமல்ஹாசன் படங்களுக்கும் நிறையவே வித்தியாசங்களைப் பார்க்கலாம்.
அந்த வித்தியாசம் 2000லும் தொடர்ந்தது. “ஹேராம், தெனாலி, ஆளவந்தான், பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, விஸ்வரூபம், உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம்” என விதவிதமான கதைகள், விதவிதமான கதாபாத்திரங்கள் என வேறு ஒரு உயரத்தில் உலக நாயகன் ஆக அவர் வலம் வந்த காலம்.
அடுத்து விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான், இந்தியன் 2 என காக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக, காதல் இளவரசனாக, உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன், 2017 நவம்பர் 7ம் தேதியான இன்று அவருடைய 64வது பிறந்த நாளைக் கொண்டாடாமல் ஒரு வரலாற்று அறிவிப்புடன் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க உள்ளார். அது அரசியல் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று தமிழ்நாட்டில் உள்ள தமிர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் ஒரு நடிகர் அரசியலுக்குள் வருவதா என சிலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தாலும் கமல்ஹாசனின் அரசியல் களம் பல அதிர்வுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. அவருடைய அரசியல் நுழைவுக்குக் கிடைக்கும் எதிர்ப்புகளே அதற்கு சாட்சி.