பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ராகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ஸ்பைடர். என்விஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ் உரிமையை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா அரங்கம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள் மகேஷ்பாபுவின் ரசிகர்கள்.
விழாவில் பேசிய பிரபலங்களின் பேச்சுக்கள்...
நடிகர் விஷால் : மகேஷ்பாபுவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறோம், தமிழ் மக்கள் நிச்சயம் அவரை ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ஸ்பைடர். ரிலீஸ் நேரத்தில் ஆந்திராவே திருவிழாக் கோலத்தில் இருக்கும். கல்லூரி நாட்களில் மகேஷ்பாபுவை பார்த்திருக்கிறேன், கொஞ்சம் குண்டாக இருப்பார். முருகதாஸ் சார் நீங்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை, எங்களை விட்டு தெலுங்கு, இந்திக்கு போகாதீர்கள், தமிழ் சினிமா பக்கம் வாங்க.
இயக்குனர் முருகதாஸ் : 10 வருடங்களுக்கு முன்பு விஜயவாடாவில் ஒக்கடு படத்தை பார்த்தேன், ரிலீஸ் ஆகி 3 வாரம் ஆன படத்தை கூட ஒரு திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர் போக்கிரி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை இயக்க ஆசைப்பட்டு அவரிடம் பேசினேன். பின் துப்பாக்கி படத்தை நானே தயாரித்து அவரை இயக்கி விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதை வீணாக்கி விடக் கூடாது என்று தான் அதை தமிழிலும் எடுத்து அவரை தமிழுக்கு கொண்டு வர ஆசைப்பட்டேன். மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் முழுக்க, ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்தோம். மகேஷ்பாபு எனக்கும், உடன் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார். அமீர் கானுக்கு அப்புறம், படம் முடிந்த பிறகும் ஏதாவது காட்சி எடுக்கணும்னா சொல்லுங்க, தேதி ஒதுக்கி தருகிறேன் என சொன்ன ஹீரோன்னா அது மகேஷ்பாபு தான். இந்த படத்தின் வெற்றி நிச்சயம் மகேஷ்பாபுவுக்கு தான் போய்ச் சேரும்.
ஹாரீஸ் ஜெயராஜ் திரைக்கதை தெரிஞ்ச ஒரு இசையமைப்பாளர். இந்த படத்தின் பின்னணி இசை மிரட்டும். ஹீரோவாக நல்ல வரவேற்பை பெற்றிருந்த எஸ்ஜே சூர்யா, இதில் வில்லனாக நடிக்க கேட்டபோது எந்த தயக்கமும் இன்றி நடிக்க ஓகே சொன்னார். இந்த படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் 2000 பேர் நடிச்சிருக்காங்க. யாருக்கும் எந்த பாதிப்பும் வராத அளவுக்கு அதை வடிவமைத்திருக்கிறார் பீட்டர் ஹெய்ன். மகேஷ்பாபு நானே பயப்படும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து அந்த சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். கலைக்கு மொழி, எல்லை கிடையாது. சமீபத்திய உதாரணம் சீனாவில் 1000 கோடி வசூல் செய்த டங்கல். இப்போ புதுசு புதுசா வர ஹீரோக்கள் கூட ரெண்டே படங்கள்ல ஏதேதோ பட்டத்தை போட்டுகிறாங்க. ஆனால் மகேஷ்பாபுவுக்கு பட்டம் போட்டுக்கிறதில் எல்லாம் ஆர்வம் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்று முகம் படத்தில் மகேஷ்பாபு நடித்தால் சிறப்பாக இருக்கும்.
மகேஷ்பாபு : திரையுலகிற்கு வந்து 18 வருடங்கள் கழித்து, இன்று எனக்கு முதல் படம் நடிப்பது போன்ற உணர்வு கிடைத்துள்ளது. நானும் முருகதாஸும் ஒரு படத்தில் இணைய 10 வருடங்களாக முயற்சித்து வருகிறோம். அது இதுபோல ஒரு பிரமாண்ட படத்தில் நிறைவேறியுள்ளது. 120 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். அதை தயாரிக்க எங்கள் தயாரிப்பளர்கள் முன் வந்தது மிகப்பெரிய விஷயம். இரு மொழிகளில் வெளியானால் தான் முதலீட்டை திரும்ப எடுக்க முடியும். அதனால் தான் தமிழிலும் படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படம் ரொம்பவே கஷ்டமான படம். பின்னணி இசைக்காக அரிதாக தான் படங்கள் பேசப்படும். அந்த வகையில் ஹாரீஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் வல்லவர். எஸ் ஜே சூர்யா 12 வருடங்களுக்கு முன்பு என்னை இயக்கினார். இன்று என்னோடு சேர்ந்து நடித்திருக்கிறார். எனக்கு பெரும்பாலும் ரீமேக் படங்களில் விருப்பமில்லை. ஆனாலும் துப்பாக்கி படத்தை பார்த்து கொஞ்சம் ஆசைப்பட்டேன். இப்போது அதன் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்தது மகிழ்ச்சி.
விழாவில் நடிகர் ரமேஷ்கண்ணா, தயாரிப்பாளர்கள் ஏஎம் ரத்னம், ஆர்பி சௌத்ரி, ஸ்பைடர் தயாரிப்பாளர்கள் மது, பிரசாத், ஐங்கரன் கருணாமூர்த்தி, தென்னிந்திய திரை பட வர்த்தக சபை தலைவர் எல் சுரேஷ், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, தெலுங்கு பாடலாசிரியர் ராம ஜோகைய சாஸ்திரி, சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். மேடையில் பேசிய நாயகி ராகுல் ப்ரீத் சிங், ஒரு ரசிகரை மேடைக்கு அழைத்து அவருடன் ஜோடியாக நடனமாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.