'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காசு... பணம்... துட்டு... மணி.. மணி... என்ற பாடல் வரிகளை முணுமுணுக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். சூது கவ்வும் படத்தில் அனைவரையும் கவர்ந்த அந்த கானா பாடலைப் பாடியும் ஆடியும் அசத்தியவர், கானா பாலா. மரபு கவிதைகளில் இருந்து விலகி, எதையும், எப்படியும் எழுதலாம் என்ற ஹைகூ கவிதை போல, இலக்கண இம்சைகளின்றி, சாமானியர்களின் அடித்தள விஷயங்களை கருவாக கொண்டு பிறப்பவை இந்த கானா வகைப் பாடல்கள். இதில் விற்பன்னர் இவர். சென்னையின் மொழி அடையாளங்களில் கானாவும் ஒன்றென்றால், கானா காட்டும் கலைஞர்களில் இவர் இன்றைய அடையாளம். திண்டுக்கலுக்கு இசை நிகழ்ச்சிக்கு வந்தவர் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தார். இதோ:
முகவரி ?
பிறந்து வளர்ந்தது சென்னை. பாலமுருகன், 47. என்ற பெயர் சினிமாவிற்கு கானா பாலாவாக மாறியது. எம்.எஸ்சி., பி.எல்., படித்துள்ளேன். மனைவி நதியா, மகள் அபிமன்யா, மகன் அபிமன்யூ.
திரையுலகம் எப்படி?
2007ல் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தாலும் 2012ல் பாடிய பாடல்கள் தான் பிரபலமானது. இயக்குனர் ரஞ்சித் இயக்கிய அட்டக் கத்தி படத்தில், ஆடி போனா ஆவணி மற்றும் நடுக்கடலில் கப்பல இறங்கி என்ற பாடல்கள் பிரபலமானது.
ஏன், கானா மட்டுமே?
இது சென்னை மொழிக்கான பாடல். இதனை ரசிகர்கள் விரும்புகின்றனர். அதனால் பல பாடல்களை நானே எழுதி, டியூன், கம்போசிங் செய்து பாடுகிறேன். சிலவற்றில் இசை கலைஞர்களின் டியூனுக்கு நான் பாடியுள்ளேன்.
இது வரை பாடியது
நான்கு ஆண்டில் 500 பாடல்கள். பெரிய, சிறிய நடிகர் என நடிகர்களுக்கு ஏற்ப பாடுவதில்லை. இசைக்கு ஏற்ப பாடுகிறேன். வழக்கறிஞர் தொழிலில் கிடைக்காத புகழ், நிம்மதி சினிமாவில் கிடைத்துள்ளது. தேவையான அளவு சம்பாதித்து விட்டேன்.
இலக்கு?
அடுத்தாண்டு ஜூன் 20, எனது பிறந்த நாள். அதோடு சினிமாவில் பாடுவதை நிறுத்த உள்ளேன். அதற்குள் அட்வான்ஸ் வாங்கிய படங்களுக்கான பாடல்களை முடித்து கொடுத்து விடுவேன்.
ஏன் இந்த திடீர் முடிவு?
சினிமா என்ற ரயிலில் பயணிக்கிறேன். எனது ஸ்டாப் வரும் போது இறங்கி கொள்வது போல் சினிமாவிலும் விடைபெற உள்ளேன். அடுத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமல்லவா? அடுத்து வருவோர் என்னை விட நன்றாக பாட வேண்டும்.
எதிர்காலத்தில்?
சமூக விழிப்புணர்வு பாடல்கள் பாடுவேன். இசை நிகழ்ச்சிகள் நடத்துவேன். வாழ்த்த 98400 - 20125.
-சிவரவி