ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை துாக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா, வயது 17, நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததால், ப்ளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்தும், சீட் கிடைக்காத விரக்தியில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நேற்று இரவு அனிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அனிதாவின் மறைவுக்கு நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன்
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம், பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். சாதி, கட்சி பாகுபாடின்றி நியாயத்திற்காக அனைவரும் போராட வேண்டும். நீட் விவகாரத்தில் இன்று வருகிறது நல்ல செய்தி என கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். கனவுடன் வாழ்ந்த பெண்ணை, மண்ணோடு மண்ணாக்கி விட்டோம். அனிதா எனக்கும் மகள் தான். ஒரு நல்ல டாக்டரை இழந்து விட்டோம்.
ரஜினிகாந்த்
அனிதாவிற்கு நிகழ்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அனிதா பட்ட வலியையும், வேதனையும் என்னால் உணர முடிகிறது. அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்.
விஷால்
“தங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்தேன். மிகுந்த மன வேதனை அடைந்தேன். அனிதா, தான் பாதிக்கப்பட்டது போல பிற மாணவ மாணவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நீதிமன்ற படிகளில் ஏறி போராடியவர். நேற்று ஒரு வார இதழில் அனிதா பற்றி எழுதியிருந்ததை படித்து மிகுந்த பெருமைப்பட்டவனை இன்று வேதனைக்குள்ளாக்கி விட்டாள் அனிதா.
196.5 கட் ஆஃப் மார்க் பெற்றும் கூட அனிதா மருத்துவ படிப்புக்கு தகுதியடையவில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்.
இனி தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் பாதிக்காத வகையில் எங்களுக்காக ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும். இப்படி நீட் தேர்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட, அனிதாவைப் போன்ற தம்பி தங்கைகளுக்கு ஒரு கோரிக்கை. தயவுசெய்து இதுபோன்ற தவறான முடிவு எடுக்காமல் என்னை போன்றவர்களை ஒரு சகோதரனாக நினைத்து அணுகினால் படிப்புக்குண்டான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம்.
ஜி.வி. பிரகாஷ்குமார்
கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா - இன்று இல்லை.. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதான் மரணம், அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் இன்று வரையிலும் தமிழர்களே. எந்தத் தேர்விலும் வெற்றி பெறும் அறிவும் திறமையும் எம் மாணவர்களுக்கு உண்டு. பயிற்சி எடுக்கும் முன்னரே பரீட்சை வைத்து தோல்வியை ஏற்படுத்தியது வெட்கக்கேடான செயல். மருத்துவர் அனிதா மறைவுக்கு காரணமான அனைவருக்கும் எம் மாணவர்கள் தண்டனையை வழங்குவார்கள்.
ராகவா லாரன்ஸ்
அனிதாவின் மரணச் செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு துயரமான முடிவை அவர் எடுக்க அவருக்கு ஏற்பட்ட சூழ்நிலையைப் பற்றி யோசிக்கவே வலிக்கிறது.
சிவகார்த்திகேயன்
இந்த தேசம் 'தகுதி'யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது...என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.
விவேக்
உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்?. இதற்கு மேல் என்ன படிக்க ? ஒரு அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது.
ஆர்ஜே. பாலாஜி
வெட்கமற்ற, தகுதியற்ற, ஊழல் தலைவர்களின் பொறுப்பற்ற செயல்களால் ஏழை மாணவர்கள் அவர்கள் கனவுகளைத் தியாகம் செய்வது மட்டுமல்லாமல் இப்போது வாழ்க்கையயைம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.
சூரி
படிப்பை இழந்தது நீயல்ல... இந்த தேசம் தான் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது. கண்ணீர் அஞ்சலி தங்கையே...
ஸ்ரீப்ரியா
அன்பு அனிதா... உன் கனவை பலியிட மனமில்லாது உன்னையே பலியிட்டாயோ?. சிந்திக்க தவறினாயோ மகளே சித்தம் கலங்கும் உன் பெற்றோருக்கென்று... லட்சங்கள் வரலாம் நிதி-உன்லட்சியத்திற்கு வருமா நீதி, சிறு விரல் கூட அதை தீண்டினால் உன் பெரும் தியாகம் சிதைந்து போகும்.
கஸ்தூரி
இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறீர்கள்?. 1176/1200 எடுத்தவள் வாழ்க்கை 0/18 பதினெட்டில் சூனியம் ஆகிவிட்டது. எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது.
நிக்கி கல்ரானி
எதற்கும் தற்கொலை மட்டும் தீர்வு அல்ல. ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கை இப்படி முடிவுக்கு வந்தது மிகவும் வருத்தமானது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.
சாய் தன்ஷிகா
இறந்தது அனிதா மட்டுமல்ல, அவருடைய நம்பிக்கை, அறிவு, அத்தனையும் கொன்றுவிட்டது.
ரித்திகா சிங்
அனிதாவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் மிகுந்த வருத்தமடைந்தேன். மாணவர்கள் மீது நமது கல்விமுறை தரும் அழுத்தத்திற்கு மற்றுமொரு உதாரணம். உங்கள் மதிப்பெண்கள், உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்பதை இளைஞர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும். சில புத்திசாலித்தனமான, பணக்காரர்கள் தோல்வியடைந்தவர்கள்தான். இது அவர்களை மட்டும் தடுத்து நிறுத்தாது என்றால், உங்களையும் கண்டிப்பாகத் தடுத்து நிறுத்தாது. தேர்வுகள் முக்கியமானவதைதான், ஆனால், உங்களது வாழ்க்கையை விட வேறு எதுவும் முக்கியமானதல்ல. அனிதா, 17 வயது மதிப்புள்ள பெண். அவளுக்கான மொத்த வாழ்க்கையும் அவள் முன்னால் இருந்தது. அவளுடைய முடிவு என் இதயத்தை உடைத்துவிட்டது.
இயக்குனர், நடிகர் - பார்த்திபன்
“அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் ...
அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும்.
இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே.
வாழவே துவங்காத ஒரு இளம் பெண் தன் இன்னுயிரை மாய்த்துக் கொ(ல்)ள்ளும் முன் என்னவெல்லாம் யோசித்திருக்கலாம் ?. அதில் NEET தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதே பிரதம கோரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அந்த நீள் கனவோடே அவரின் மீளா கண்ணடைத்தல் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
ஏழைகளின் ஓலத்திற்கும் ஒப்பாரிக்கும் Gst போட்டு விசும்பலாக்க நடுவன் அரசு நன்கு அறிந்திருக்கிறது . தானே... செய்து கொண்டால்தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும் ?.
நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர்.
அம்மருத்துவரையே கொல்வது ? பெருந்துயர் ! இனி மறு துயர்- மறு தவற் நிகழுமுன் தடுக்க, இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும்
இயக்குனர் தங்கர்பச்சான்
*அனிதா கேட்கிறார்!*
மாணவர்களின் குற்றமா ?
ஆட்சியாளர்களின் குற்றமா ?
தண்டிக்க வேண்டியது ஆட்சியாளர்களையா ?
மாணவர்களையா ?
நீதியைத் தரப் போவது யார்?
இயக்குனர் மோகன் ராஜா
இன்று கருப்பு நாள். அவர் உயிரோடு இருந்திருந்தால் பலரின் உடல்நலத்தை சீராக்கியிருப்பார். இப்போது அவருடைய மரணம் பலரின் மன நோயை சீர் செய்யும்.
இயக்குனர் சீனு ராமசாமி
டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி.
இயக்குனர் பாண்டிராஜ்
Rip போடுற வயசா இது? வேதனைப்பட வேண்டிய விசயம் இல்லை. வெக்கப்பட வேண்டிய விசயம். எப்போ கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு.
இயக்குனர் பா. ரஞ்சித்
ஒரு தலைமுறையின் பெருங்கனவை சிதைத்த சமுக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும்.
இயக்குனர் ராம்
நீட் ஒரு அரசபயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்.
வைரமுத்து
'அடி பாவி மகளே' என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.
ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மொத்தம் மரணம் மூன்று வகை.
இயல்பான மரணம் - அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு,
இன்னொன்று கொலை - அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு,
மூன்றாவது தற்கொலை - அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.
அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது?
தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?
தற்கொலை தீர்வல்ல, வாழ்வுதான் தீர்வு.
பாடலாசிரியை தாமரை
பல உயிர்களை காப்பாற்றியிருக்க வேண்டிய சகோதரி, இன்று தன் உயிரை மாய்த்துக்கொண்டார். எவ்வளவு கனவுகள் நசுக்கப்பட்டிருக்கும்.
பாடலாசிரியர் விவேக்
மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவுடா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு?.