'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காற்றின் திசைகளை எல்லாம், தன் இசையால் நிரப்பியவர். உலகமெங்கும் தன் தனித்துவமான இசையால் அனைவரையும் வியக்க வைத்தவர், ஆஸ்கர் நாயகன், ஏ.ஆர்.ரஹ்மான். வெளிச்சம் அகன்று, சப்தங்கள் மறைந்த ஒரு நிசப்தமான இரவில், ரஹ்மான், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ஒன் ஹார்ட் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளது பற்றி...
முழுக்க முழுக்க இசை பற்றிய ஒரு தொகுப்பு தான், இந்த படம். ஒரு இசைக் கலைஞனை பற்றியது. அமெரிக்காவில், 18 முக்கியமான அம்சங்களுடன், ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினேன். அதில் சிறந்த சில விஷயங்களை தேர்வு செய்து, இந்த படத்தை தயாரித்துள்ளோம். மேலும், என் பேட்டிகள், பயணங்கள் பற்றிய விஷயங்களும் இருக்கும். ஒன்றரை மணி நேரம், ஓடக் கூடியதாக இந்த படம் இருக்கும்.
ஒன் ஹார்ட் உருவாக காரணம்?
நலிந்த இசை கலைஞர்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பு சார்பில், இந்த படத்தை எடுத்துள்ளோம். இதில் கிடைக்கும் வருவாய் அனைத்தும் அந்த அமைப்புக்கு போகும். இசை கலைஞர்களுக்காக, ஒய்.எம்.எஸ்., மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். இதில், இசை சம்பந்தப்பட்ட படங்களை மட்டுமே தயாரிப்பேன். வெளிநாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. நம் நாட்டில், முதல் முறையாக நான் முயற்சித்துள்ளேன்.
இனி உங்கள் இயக்கத்தில் நிறைய படங்கள் எதிர்பார்க்கலாமா?
ஒன் ஹார்ட் படத்தை தவிர, ஹிந்தியில், 99 என்ற படத்தை இயக்குகிறேன்; இதுவும், இசை சம்பந்தப்பட்டது தான். அடுத்ததாக, லா மாஸ்க் என்ற படத்தை இயக்குகிறேன். இது, அதி நவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த படத்தை, மற்ற படங்கள் போல், சாதாரணமாக திரையில் பார்க்க முடியாது. தலையில், மாஸ்க் அணிந்து தான் பார்க்க வேண்டும்; அப்படி ஒரு புது கான்செப்ட்; 360 டிகிரி கோணத்தில் இந்த படத்தை பார்க்க முடியும்.
உங்க வளர்ச்சிக்கு காரணமான சிலரைப் பற்றி கூற முடியுமா?
என் அம்மா, இயக்குனர் மணிரத்னம், அப்புறம் தமிழ் மக்களோட அன்பு தான், என் வளர்ச்சிக்கு காரணம்.
நடிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு வந்ததா?
நடிக்கும்படி சிலர் கேட்டது உண்டு; ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஒரு நடிகராக இருக்க வேண்டுமானால், அதற்கு பெரிய முகமூடி போட வேண்டிஇருக்கும். தொப்பி, கண்ணாடி எல்லாம் போட்டு, என்னை முழுமையாக மறைத்து விட்டுத் தான் வெளியில் போகிறேன். நடிகரானால், கேட்கவே வேண்டாம்; வெளியில் தலைகாட்டவே முடியாது. எனக்கு, நடிப்பதில் ஆர்வமும் இல்லை.
ஆஸ்கர் வாங்கி, எங்களை பெருமைப் படுத்தினீர்கள்; மீண்டும் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
ஆஸ்கரை விட, ஒன் ஹார்ட் மாதிரி, இசை தொடர்பான படங்களில் வேலை பார்ப்பதில் தான் ஆர்வம் அதிகம் உள்ளது.
மணிரத்னம் படங்கள் தோல்வி அடைவது குறித்து...
மணி சார் படம், மக்களுக்கு சில சமயங்களில் புரிய மாட்டேங்குது; அதற்கு, அவரை குற்றம் சொல்ல முடியாது. அவர் இப்போது இயக்கும் படம், அடுத்த தலைமுறையினருக்கு தான் புரியும். உயிரே படம் வந்தபோது, புரியவில்லை என, பலரும் கூறினர். ஆனால், இப்போது, அந்த படத்தை பலமுறை பார்த்ததாக பலரும் கூறுகின்றனர்.
புது இசை அமைப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
முதலில், அவங்க, என்னைப் பற்றி என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கனும் என நினைக்கிறேன். அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை கூறும் அளவுக்கு, எனக்கு இன்னும் வயதாகவில்லை. அவங்க, எனக்கு அறிவுரை கூறினால், கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். (பலமாக சிரிக்கிறார்).
இசை பொதுவாக உருவாகிறதா? உருவாக்கப்படுகிறதா?
இசை என்பது சவுண்ட், ராகம். தாளம் எல்லாம் நாம் முன்பே கேட்டதுதான். அதை வரிகள் சேர்த்து புது பரிமாணத்தில் கொடுக்கும்போது வேறு ஒரு கலர் கிடைக்கும். அதனால் இசை உருவாக்கப்படுகிறது என்பதே என் கருத்து.
உங்களின் முதல் படமான ரோஜாவின் இசையை முதலில் யாருக்கு போட்டு காட்டினீர்கள்?
என் அம்மாவிற்குதான் முதலில் போட்டு காட்டினேன். ‛இது நீ செய்யல... கடவுள் ஆசீர்வாதத்தில் இந்த இசை வந்திருக்கு என்று சொன்னாங்க. மிகவும் சந்தோஷபட்டாங்க.
அப்பா, அம்மா வாங்கி கொடுத்த இசை கருவிகளை பத்திரப்படுத்தி வச்சிருக்கீங்களா?
அப்படி பத்திரப்படுத்தும் மனப்பான்மையும் எனக்கு இல்லை. நாம் போகும்போது எதையும் கொண்டு போக போவதில்லை. அன்பு, நாம் செய்த நல்ல காரியங்கள்... இதுதான் கூட வரும் என நினைக்கிறேன்.
மணிரத்தினம் உங்களுக்கு குருவா?
அவரை குருவாக நினைப்பது அவருக்கு பிடிக்காது. அவர் ஒரு நண்பரை போலத்தான் பழகுவார். நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா?
ஒன் ஹார்ட் மாதிரியான என் படங்கள் வெற்றி பெற்றால்தான் நான் சாதித்ததாக நினைக்க முடியும். மக்கள் ஆதரவு இல்லாமல் எதுவும் சாதிக்க முடியாது.
சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசை அமைப்பீர்களா?
சின்ன படம், பெரிய படம் என்ற பாரபட்சமெல்லாம் எனக்கு கிடையாது. ஸ்லம்டாக் மில்லினர் படம், சிறிய பட்ஜெட்டில் தயாரானது தான். ஆனால், அந்த ஐடியா தான் பெரியது. என்னை கேட்டால், பட்ஜெட்டை விட, ஐடியாவுக்கு தான், முன்னுரிமை கொடுப்பேன்.
உங்களையும், சச்சினையும், ரசிகர்கள் கடவுளாக பார்க்கின்றனர்; இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்னை, நான், நாயாகத் தான் பார்க்கிறேன். (மீண்டும் சிரிக்கிறார்). கடவுள் என்பவர், அழிக்க முடியாதவர்; அவருக்கு இறப்பே கிடையாது. அதனால், என்னைப் போன்ற மனிதர்கள், ஒருபோதும் கடவுளாக முடியாது.
சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டதால் ஏற்பட்ட வறுமை தான், உங்களை இந்த உயரத்துக்கு கொண்டு போக காரணமாக இருந்ததா?
அப்படி கூட சொல்லலாம். என் தந்தையின் நிறைவேறாத கனவுகள் அதிகம் உண்டு. அவர், கால நேரம் பார்க்காமல், குடும்பத்துக்காக, ஓடி ஓடி உழைத்தார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் தான், அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்து விட்டது. நான், அந்த தவறை செய்ய மாட்டேன்.