ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
ஒரு படம் பெரிய படமா சிறிய படமா என்பது படம் வெளிவந்த பிறகே தீர்மானிக்கப்படுகிறது. பெரிய ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் முன்னணி ஹீரோக்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் கூட சமயங்களில் தோல்விப் படங்களாகிவிடுகிறது. புதுமுகங்கள் நடித்த படங்கள் கூட நல்ல கதையுடன் அருமையாக எடுக்கப்பட்டதால் வெற்றிப் படங்களாகிவிடுகிறது.
ஒரு படிக்கட்டில் இருந்து விழுந்தால் அவ்வளவாக அடிபடாது என்றுதான் சிறிய படங்கள் தோல்வியடையும் போது சொல்லிக் கொள்வார்கள். அதே பெரிய ஹீரோக்களின் படங்கள் தோல்வியடைந்தால், உயரத்தில் இருந்து விழுந்தால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும்.
ஹீரோக்களின் சம்பளம் 30 கோடி, அந்தப் படங்களை இயக்கும் இயக்குனர்களின் சம்பளம் 10 கோடி, படத் தயாரிப்பு குறைந்தது ஒரு 40 கோடி என சுமார் 80 கோடி வரை தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களுக்கான பட்ஜெட் ஆகிவிடுகிறது. சுமார் 100 கோடியாவது வசூலானால்தான் அந்தப் படங்கள் அசல் தொகையையாவது வசூலிக்கும். படம் நன்றாக இல்லாமல் போய் விட்டால் அவ்வளவுதான் நஷ்டத் தொகையைச் சமாளிக்க தயாரிப்பாளர் பெரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்.
பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பது என்பது முள்ளின் மீதும், கம்பியின் மீதும் நடப்பதற்கு சமம். படம் நன்றாக இருந்தால் மட்டுமே அந்தப் படங்கள் லாபத்தைக் கொடுக்கும். அப்படி லாபத்தைத் தராமல் போனால் ஹீரோக்களின் சம்பளம் மட்டும் குறையாது, மாறாக தயாரிப்பாளர் மட்டுமே காணாமல் போய்விடுவார்.
அதனால்தான் பலரும் ஹீரோக்களின் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், யாரும் அது பற்றி காதில் போட்டுக் கொள்வதேயில்லை.
ஹீரோக்கள் அவர்களாகவே சம்பளத்தைக் குறைத்தால்தான் உண்டு. அவர்களின் படங்கள் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்திக்கும் போதுதான் அவர்கள் அதை அதிகம் உணர்வார்கள் என அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்.
கடந்த சில வருடங்களில் பெரிய ஹீரோக்கள் என்று சொல்லக் கூடிய சிலரின் எதிர்பார்ப்பையும் மீறி ஃபிளாப் படங்கள் ஆகின. அவற்றைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டன. அப்படிப் பேசப்பட்ட படங்கள் அஞ்சான், லிங்கா, புலி, 10 எண்றதுக்குள்ள. இந்த வரிசையில் விவேகம் படமும் சேரும் என்பதுதான் திரையுலகத்தினரின் கருத்தாகவும் உள்ளது.
அஞ்சான்
யு டியூபில் படத்தின் டிரைலர் 20 லட்சம் தாண்டியதற்கு ஒரு விழா எடுத்து ரொம்பவே ஓவராகச் செய்தார்கள். டிவி பேட்டியிலும் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருக்கிறேன் என வாய் கூசாமல் சொன்னார். பாட்ஷா படத்தையே கொஞ்சம் மாற்றி எடுத்துவிட்டு இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முன்பே அவர்கள் போட்ட ஆட்டத்திற்கு ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்தார்கள். 20 லட்சம் பேர் டீசரைப் பார்த்தார்கள் என்றார்கள், கடைசியில் படத்தை 20 லட்சம் பேராவது பார்த்தார்களா என்ற கணக்கை கடைசி வரையில் அவர்கள் சொல்லவேயில்லை. அஞ்சான் படத்தின் படு தோல்வி இயக்குனர் லிங்குசாமியை இரண்டு வருடங்களாக அடுத்த படத்தை இயக்காமல் செய்துவிட்டது.
லிங்கா
அஞ்சான் அடியை ரசிகர்கள் தாங்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு 100 கோடி ரூபாய் நஷ்டத்துடன் போயிருக்கும். ஆனால், பெரிய எதிர்பார்ப்புடன் ரஜினிகாந்த் நடித்து அடுத்த சில மாதங்களில் வெளிவந்த லிங்காபடம், படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இன்று வரை அவர்கள் அந்த நஷ்டத் தொகையை முழுவதுமாக வாங்கிவிட்டார்களா என்பதை சொல்லவில்லை. படம் நஷ்டம் அடைந்ததும் படம் வெளியான இரண்டு நாட்களிலேயே மைக் பிடித்து பேட்டி கொடுத்தார்கள். ரஜினிக்கென்று இருந்த இமேஜை ஒரேயடியாக கெடுத்த படமாக லிங்கா படம் அமைந்தது. ரஜினி படம் பெரிய அளவில் லாபம் சம்பாதித்துவிடலாம் என பேராசைபட்ட சிலர் அதிக விலை கொடுத்து படத்தை வாங்கியதுதான் அவர்களின் நஷ்டத்திற்குக் காரணம். இன்று வரை அப்படிப்பட்ட பேராசை சிலருக்குத் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
உத்தம வில்லன்
கமல்ஹாசன் நடித்து வெளிவரும் படங்கள் தோல்வி அடைந்தால் அவற்றைப் பற்றி பெரிய அளவில் பரபரப்பாகப் பேச மாட்டார்கள். அவர் ஏதோ நினைத்து எடுத்திருக்கிறார், படத்தைப் பார்ப்பவர்களுக்குத்தான் அது புரியவில்லை என சிலர் சொல்வார்கள். வேறு சிலரோ, அவர் சில படங்களை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எடுக்க மாட்டார், அவருக்காக மட்டுமே எடுத்துக் கொள்வார் என்று சொல்வார்கள். இதில் உத்தம வில்லன் படம் இரண்டாவது வகை. கமல்ஹாசன் எதற்காக இந்தப் படத்தை எடுத்தார் என்பது அவருக்காவது தெரியுமா என்பது சந்தேகம்தான். ஏற்கெனவே அஞ்சான் படத்தின் தோல்வியிலிருந்து மீளாமல் இருந்த இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம், கமல்ஹாசன் படம் என்றதும் வசூலில் பாய்ந்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், பாதாளத்தில் பாய்ந்ததுதான் மிச்சம். இப்படத்தின் நினைவு கூறத்தக்க விஷயம் என்று பார்த்தால் ஒன்றே ஒன்றுதான். கமல்ஹாசனின் குரு பாலசந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம், அதுவும் அவரது கடைசிப் படமாக அமைந்தது வருத்தத்திற்குரியது.
புலி
இந்தப் படம் அமைதியாக வந்திருந்தால் கூட நன்றாக ஓடியிருந்திருக்கும். இசை விழா ஒன்றை நடத்தி அதில் டி.ராஜேந்தரை பேசவிட்டு, அவரும் ஊரில் இருக்கும் அனைத்துப் புலிகளுடனும் இந்தப் புலியை ஒப்பிட்டுப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது மீம்ஸ் போட ஆரம்பித்தவர்கள் இன்று வரை புலி மீம்சை மட்டும் மறக்காமல் அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்கள். தியேட்டரில் படத்தைப் பார்க்காமல் விட்டவர்கள் கூட டிவியில் படத்தைப் பார்த்த பின் ஓரளவிற்கு நன்றாகத்தானே இருக்கிறது, ஏன் இந்தப் படம் ஓடவில்லை என கேள்வியை எழுப்பினார்கள். அதற்கெல்லாம் முழு காரணமாக அமைந்தது டி.ஆரின் ஓவர் டோஸ் பேச்சுதான். பாராட்ட வேண்டியதுதான் அதற்காக இப்படியா பாராட்டுவது. அந்த ஓவர் டோஸ் பேச்சு மெர்சல் படத்தின் இசை வெளியீட்டிலும் பார்த்திபன் மூலமாக நடந்தது. இருந்தாலும் புலிக்கு ஏற்பட்ட ரிசல்ட் மெர்சல் படத்திற்கு வராது என்று நம்புவோமாக.
10 எண்றதுக்குள்ள
புலி படத்தின் பாதிப்பிலிருந்து ரசிகர்கள் மீளாமல் இருந்த நேரத்தில் விக்ரம் நடித்த 10 எண்றதுக்குள்ள படம் புலி வந்த மூன்று வாரங்களுக்குள் வெளிவந்தது. 50 வயதைக் கடந்தாலும் என்றும் இளமையாக இருக்கும் வரம் தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை ரஜினிகாந்துக்கு மட்டுமே இருக்கிறது. அவரே அனுஷ்காவுடனும், சோனாக்ஷி சின்ஹாவுடனும் டூயட் பாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் லிங்கா படத்தை படு தோல்விப் படமாக ஆக்கினார்கள். அப்படியிருக்க, விக்ரம் அவர் மகள் வயதான சமந்தாவுடன் ஜாலியாக ஊர் சுற்றி ஆடிப் பாடியதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல, ஒரு 25 வயது ஹீரோ ஆடிப்பாட வேண்டிய விர்ரும்..விர்ரும்.. என்ற பாடலை விக்ரமிற்கு போட்டுக் கொடுத்த இசையமைப்பாளர் இமானையும் சொல்ல வேண்டும். யார் ஹீரோ எனக் கேட்காமலேயே அவர் இசையமைத்த பாடலாக இருக்குமோ என்னமோ ?. கோலி சோடா என கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய் மில்டனை வரவேற்ற ரசிகர்கள் அவர் ஹீரோ விக்ரம் பின்னாடி போனதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.
மேற்கண்ட பெரிய ஹீரோக்களின் படங்களின் வரிசையில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் விவேகம் படமும் சேரும் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் எந்த அளவிற்கு லாபத்தைக் கொடுக்கும் அல்லது எத்தகைய நஷ்டத்தைக் கொடுக்கும் என்பது வார இறுதியில்தான் தெரிய வரும்.
சில ஏரியாக்களில் லாபத்தையும், சில ஏரியாக்களில் நஷ்டத்தையும் கொடுக்கும் என்கிறார்கள் சிலர். ஆனாலும், 100 கோடி ரூபாயைக் கடந்த ஒரு படம் என்ற பெருமை விவேகம் படத்திற்கு உண்டு. படத்தின் வியாபாரத் தொகை மட்டும் நியாயமாக இருந்திருந்தால் அனைவருக்கும் லாபம் வந்திருக்கும் என்கிறார்கள். அடுத்த படத்திலாவது அஜித் அவருடைய சம்பளத்தைக் குறைத்தால், அல்லது தயாரிப்பாளர்கள் அதிகம் செலவு செய்யாமல் நியாயமான பட்ஜெட்டில் படத்தை எடுத்தால் நிச்சயம் லாபத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இது அஜித்துக்கு மட்டுமானதல்ல, இதற்கு முன் தோல்வியைக் கொடுத்த அனைவருக்கும் பொருந்தும்.