டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்று ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழின் பெருமையை, தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை இந்த உலகம் முழுவதும் பரவ பலரும் பலவிதமான செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சிலர் திரைப்படங்கள் மூலமாக தவறான வார்த்தைகளை, தமிழுடன் கலந்து பாடலாக்கி வியாபாரம் செய்து வருகிறார்கள். அப்படி ஒரு வியாபாரப் பாடலாக நேற்று 'கருத்தவன்லாம் கலீஜாம்...' என்ற ஒரு பாடலை 'வேலைக்காரன்' படத்தின் முதல் சிங்கிள் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
கருப்பாக இருப்பவர்களை, குப்பத்து மக்களை குறை சொல்பவர்களை எதிர்க்கும் பாடல் இது. அதை இப்படி ஒரு சென்னைத் தமிழ்ப் பாடலாகத்தான் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்று நினைத்தவர்களுக்கு யார் கொட்டு வைப்பது ?.
அஜித் வழியைப் பின்பற்றுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் சிவகார்த்திகேயன் 'வேதாளம்' படத்தில் இடம் பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடல் போலவே ஒரு பாடல் வேண்டும் என அவரது நண்பர் இசையமைப்பாளர் அனிருத்திடம் கேட்டிருப்பார் போலிருக்கிறது. நண்பனின் வேண்டுகோளை மீற முடியாமல் அனிருத்தும் இந்த 'கலீஜு' பாடலைப் போட்டுக் கொடுத்திருக்கலாம்.
இந்தப் பாடலில் 'கலீஜு, கொய்யால, தக்காளி' ஆகிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடலுக்கு சென்னையைத் தாண்டியுள்ள மக்களுக்கு அர்த்தம் தெரிய வாய்ப்பில்லை. அதிலும் 'கலீஜு' என்பதைக் கூட விட்டுவிடலாம். ஆனால், 'கொய்யால, தக்காளி' வார்த்தைகள் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். இப்படி அர்த்தமுள்ள பாடலை எழுதியிருப்பவர் விவேகா.
ஏற்கெனவே 'பீப் பாடல்' விவகாரத்தில் சிம்புவுடன் சேர்ந்து அனிருத்தின் பெயரும் கெட்டுப் போனது. அதன் பிறகுதான் தனுஷ் கூட அனிருத்துடன் சேர்ந்து படம் செய்வதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார். இப்போது இந்த 'கலீஜு' பாடலை இசையமைத்துப் பாடியிருக்கிறார் அனிருத்.
இப்பாடல் உருவாகக் காரணமாக இருந்த படக் குழுவினர் இந்தப் பாடலை அவர்களது வீட்டுப் பெண்கள், குழந்தைகள் அடிக்கடி பாட அனுமதிப்பார்களா ?. அப்படி அவர்கள் பாடலை ரசித்துக் கேட்டு 'கொய்யால, தக்காளி' ஆகியவற்றிற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் உண்மை பேசுவார்களா ?.
இந்தப் படம் சென்சாருக்கு வரும் போது மேற்கண்ட கெட்ட வார்த்தைகளை சென்சார் குழுவினர் அனுமதிப்பார்களா ?.