'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
வருகிற 27-ந் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கலாம் சலாம் என்ற இசை ஆல்பத்தை திரைத்துறையினர் உருவாக்கி உள்ளனர். வைரமுத்து பாடல் எழுத, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், சித் ஸ்ரீராம் பாடியுள்ளார், வசந்த் இயக்கி உள்ளார். சுவர்ணபூமி அகாடமி இன்ஸ்ட்டிடியூட் தலைவர் ஜி.ஆர்கே.ரெட்டி தயாரித்துள்ளார். இதன் வெளியீட்டு விழா நடந்தது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொண்டார். விழாவில் வைரமுத்து பேசியதாவது:
அப்துல் கலாம், காலம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவு கூறப்பட வேண்டியவர். இந்த இசைத்தட்டை வெளியிட வேண்டிய அவசியம் நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளத் தான். அவர் இறந்த போது இந்தியாவில் இருக்கும் எல்லா சட்டமன்றங்களும் ஒரு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின. அதில் எனக்கு பிடித்தது 19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் விவேகானந்தர், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் காந்தி, 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அப்துல் கலாம் என்ற ஆந்திர அரசு நிறைவேற்றிய தீர்மானம் தான்.
எல்லா துறைகளிலும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து ஒரு சிறந்த மனிதர் இவர் தான். அவரை விட சிறந்த விஞ்ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர் குடியரசு தலைவர் என்பதற்காகவோ, விஞ்ஞானி என்பதற்காகவோ அவர் நினைக்கப்படவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாத மனிதர் என்பதற்காக தான் அவர் நினைக்கப்படுகிறார். நாட்டில் தண்ணீர், உணவு பஞ்சங்களை விட நல்ல தலைவர்கள் பஞ்சம் அதிகம். இந்த பஞ்சத்தில் முளைத்த ஒரு கற்பக விருட்சம் தான் தன்னலமற்ற அப்துல் கலாம். இந்தியாவில் உயரிய குடியரசு தலைவர் பீடத்தில் ஒரு தமிழர் கோலோச்சியிருக்கிறார்.
அவரை பார்க்க அங்கு போனபோது மனிதர்களுக்காக தான் மரபே தவிர, மரபுக்காக மனிதர்கள் இல்லை. ஒரு சிலர் பதவிக்கு போனவுடன் தனிமனித கூட்டத்தில் இருந்து தங்களை துண்டித்துக் கொள்கிறார்கள். பதவி என்பது உதவி செய்யும் ஒரு துணைக்கருவி தான். பதவி வந்தவுடன் யார் ஒருவர் தூங்காமல் இருக்கிறாரோ அவர் தான் தலைவர். அப்துல் கலாம் தன்னை குடியரசு தலைவராக நினைத்துக் கொண்டதில்லை. ராமேஸ்வரத்தில் பத்திரிக்கை வினியோகித்த ஒரு சிறுவன் அதே பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக மாறுவார் என்று நினைத்து பார்த்திருப்பாரா?. வாழ்க்கையில் உண்மையாய் இரு உன்னதம் பெறுவாய், உழைத்து கொண்டு இரு உயரம் பெறுவாய் என்பதை நம்பியவர்.
அறிவு என்பது முயற்சியால் வருவது, ஆற்றல் என்பது பயிற்சியால் வருவது. அறிவாளி ஆவது எளிது, மனிதன் ஆவது தான் கஷ்டம். எவன் ஒருவன் தான் கற்றதை மண்ணுக்கு அளிக்கிறானோ அவன் நினைக்கப்படுகிறான். இந்த நூற்றாண்டில் கலாமினால் விண்ணில் ஒரு புரட்சியும், எம்.எஸ்.சுவாமிநாதனால் மண்ணில் புரட்சியும் அரங்கேறி இருக்கின்றன. கலாமுக்கு சலாம் என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.