இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் ஹீரோக்களைக் கொண்டாட ரசிகர்கள் கூட்டம் இருப்பது போல ஹீரோயின்களைக் கொண்டாடவும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். ரசிகர் மன்றங்கள் தான் இல்லையே தவிர பல ஹீரோயின்களை நமது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காலத்திற்கேற்ப தங்களது அபிமான ஹீரோயின்களையும் மாற்றிக் கொள்வதும் அவர்களுக்கு வாடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால், இப்போதைய சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயின்களுக்கு கொஞ்சம் பஞ்சம் வந்துவிட்டது போலத்தான் தெரிகிறது.
முன்னணி ஹீரோயின்களாக இதுவரை இருந்து வந்தர்கள் முப்பது வயதைக் கடந்துவிட்டதால் நமது ரசிகர்கள் அடுத்த 'செட்' ஹீரோயின்களை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள்.
த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், அனுஷ்கா, சமந்தா, ஸ்ருதிஹாசன் இன்னமும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் 30ஐக் கடந்த சீனியர் ஹீரோயின்களாகிவிட்டார்கள்.
30ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் தமன்னா உள்ளிட்ட சிலர் இருக்கிறார்கள். ஹன்சிகா போன்றவர்களுக்கு தமிழில் படங்களே இல்லை. தமன்னா தமிழுக்கு வருவதும் போவதுமாகவே இருக்கிறார். அதனால் வேறு வழியில்லாமல் இப்போது 'லைம்-லைட்'டில் இருக்கும் நடிகைகள் யார் யார் என்று பார்க்க வேண்டியதாகிவிட்டது. அந்த விதத்தில் நம்மைக் கவர்ந்துள்ள சில நடிகைகள்தான் அடுத்த 'கனவுக் கன்னி' போட்டிக்குத் தயாராகி வருபவர்கள் என்று தாராளமாகச் சொல்லலாம்.
அந்த விதத்தில் தற்போது போட்டியிலிருப்பவர்கள் கீர்த்தி சுரேஷ், நிக்கி கல்ரானி, ரெஜினா, கேத்தரின் தெரேசா, நிவேதா பெத்துராஜ், சாயிஷா, அமலா பால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரைச் சொல்லலாம்.
கீர்த்தி சுரேஷ்
'இது என்ன மாயம்' என்ற தோல்விப் படம் மூலம் அறிமுகமானாலும் அடுத்து வந்த 'ரஜினி முருகன்' படம் கீர்த்தி சுரேஷைக் காப்பாற்றிவிட்டது. தொடர்ந்து 'தொடரி' ஏமாற்றினாலும் 'ரெமோ' கொஞ்சம் காப்பாற்றிவிட்டது. இந்த வருடத்தில் கொஞ்சம் உயர்வு பெற்று விஜய்யுடன் 'பைரவா' படத்தில் ஜோடி சேர்ந்துவிட்டார். அடுத்து சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார். இதைத் தவிர தமிழில் வேறு படங்கள் இல்லாதது ஆச்சரியம்தான். கிளாமர் காட்டாத ஒரு குடும்ப குத்து விளக்காகவே இருக்கிறார். அதனால், 'கனவுக் கன்னி' பட்டத்திற்குப் பொருத்தமானவரா என்பதை இவரது அடுத்தடுத்த படங்களைப் பார்த்துதான் சொல்ல வேண்டும்.
ரெஜினா கசன்ட்ரா
'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா. அடுத்து சில சிறிய பட்ஜெட் படங்களில் கதாநாயகியாக நடித்தார். 2013ல் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்த போது கவனிக்கப்பட்டார். தெலுங்கில் சென்றவர் அங்கே கிளாமரில் அசத்தி அவரைப் பற்றிப் பேச வைத்தார். அதன் பின் இப்போது மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். 'மாநகரம், சரவணன் இருக்க பயமேன்' என இந்த ஆண்டில் இரண்டு சுமாரான வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். நேற்று வெளிவந்த 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இன்னமும் முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் ஜோடி சேராதது இவருக்கு இருக்கும் பெரிய குறை.
கேத்தரின் தெரேசா
பெங்களூரூவில் வளர்ந்த கேரளத்துக் குயில் கேத்தரின். தெலுங்கில் சில படங்களில் நடித்த பின் 2014ல் கார்த்தி ஜோடியாக 'மெட்ராஸ்' படத்தில் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து விஷால் ஜோடியாக 'கதகளி', அதர்வா ஜோடியாக 'கணிதன்' ஆகிய படங்களில் நடித்தார். இந்த ஆண்டில் ஆர்யா ஜோடியாக 'கடம்பன்' படத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. கிளாமர் காட்டுவதில் துளியும் தயங்காதவர். அதே சமயம் இயல்பாக நடிப்பதிலும் பெயர் பெற்றவர். தற்போதைக்கு தமிழில் 'கதாநாயகன்' படத்தை மட்டுமே கைவசம் வைத்திருப்பவர். முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தால் தமிழில் முன்னுக்கு வரலாம்.
நிக்கி கல்ராணி
மலையாளம், கன்னடப் படங்களில் நடித்த பின் 2015ல் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக அறிமுகமான 'டார்லிங்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ரானி. தொடர்ந்து 'யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களில் நடித்தார். இந்த ஆண்டில் சுமாரான வெற்றி பெற்ற 'மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம்' ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து தமிழில், 'நெருப்புடா, கீ, ஹரஹர மகாதேவகி, பக்கா' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கிளாமருக்கும் பொருத்தமானவர், ஹோம்லி கேரக்டருக்கும் பொருத்தமானவர் எனப் பெயரெடுத்தவர்.
ரகுல் ப்ரீத் சிங்
கன்னடம், தெலுங்குப் படங்களில் அறிமுகமாகிவிட்டு தமிழில் 2012ம் ஆண்டில் 'தடையறத் தாக்க' படத்தில் அறிமுகமானவர். அடுத்து 'புத்தகம், என்னமோ ஏதோ' என இரண்டு படங்களில் நடித்தார். ஆனால், அந்த இரண்டு படங்களும் ஓடாததால் தமிழ் சினிமா இவரைக் கண்டு கொள்ளவேயில்லை. தெலுங்கில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தவர், அங்கு உடனே முன்னணி ஹீரோயினாக உயர்ந்துவிட்டார். முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அவருக்குக் கிடைத்ததே அதற்குக் காரணம். தமிழில் மீண்டும் 'ஸ்பைடர்' படம் மூலம் வருகிறார். கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலும் நாயகியாக நடிக்கிறார். 'ஸ்பைடர்' படம் வரவேற்பு பெறும் பட்சத்தில் தமிழில் அதிகம் கவனிக்கப்படும் நாயகியாக உயரலாம். தெலுங்கில் கிளாமருக்காகவும் பேசப்பட்டவர் தமிழிலும் பேசப்படுவார் என எதிர்பார்க்கலாம்.
நிவேதா பெத்துராஜ்
2016ம் ஆண்டு வெளிவந்த 'ஒரு நாள் கூத்து' படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். உதயநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' படம் விரைவில் வெளிவர உள்ளது. கண்களில் ஒரு வசீகரத்துடன் இருக்கும் நடிகை. முதல் படத்திலேயே யார் இவர் எனக் கேட்க வைத்தவர். ஜெயம் ரவியுடன் 'டிக் டிக் டிக்' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 'பார்ட்டி' படத்திலும் நடிக்க உள்ளார். தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இவரிடம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
சாயிஷா
இந்த ஆண்டில் இதுவரை அறிமுகமான நாயகிகளில் அதிகம் கவனிக்கப்பட்டவர் சாயிஷா. 'வனமகன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். படம் சுமாராக ஓடினாலும், உடனே 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. 'வனமகன்' படத்தில் இவருடைய நடனமும், நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தது. கிளாமருடன் நடிக்கவும் தெரிந்த ஒரு புதுமுகம் தமிழுக்குக் கிடைத்துள்ளார் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த படங்கள் இவரை கனவுக் கன்னி பட்டத்திற்குக் கொண்டு செல்லுமா என்று பார்க்க வேண்டும்.
மேலே இடம் பெற்ற நடிகைகள் சமீப காலங்களில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இடம் பெற்றுள்ளது. மேலும் சில புதுமுக நடிகைகள் அறிமுகமாகியிருந்தாலும் அவர்கள் அதிகம் பேசப்படவில்லை.
'கனவுக் கன்னி' என்று சொல்லும் போதே அவர்களிடம் ஒரு வசீகரம் இருக்க வேண்டும். அதற்கு கிளாமர் மட்டுமே ஒரு அளவீடு அல்ல. சிம்ரன் போன்றவர்கள் அதிக கிளாமராக நடிக்கவில்லை என்றாலும் பெரும்பான்மையான ரசிகர்களால் நேசிக்கப்பட்டவர்கள்.
நயன்தாராவும் அந்த வரிசையில் வந்தவர்தான். அதிக கிளாமராக நடிப்பவர்களையும் நமது ரசிகர்கள் சீக்கிரமே ஒதுக்கி விடுவார்கள்.
கொஞ்சம் கிளாமர், சிறந்த நடிப்பு, சில குட்டி, குட்டி முகபாவங்கள் என ரசிகர்களை வசீகரிக்கும் நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.
சரோஜாதேவி, ஜெயலலிதா, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, குஷ்பு, சிம்ரன், ஜோதிகா, அசின், நயன்தாரா என பலரை அதற்கு முன்னுதாரணமாகச் சொல்லலாம். அவர்களது வரிசையில் அடுத்து இடம் பிடிக்கப் போகும் 'கனவுக் கன்னி' யார் என்பது இந்த வருட இறுதிக்குள் தெரிந்துவிடும்.