கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சினிமா என்பது சூதாட்டம் கிடையாது, அது ஒரு கலை. சினிமா டிக்கெட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யை மத்திய அரசு குறைக்க வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சினிமா டிக்கெட்டிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதை குறைக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இதுதொடர்பாக மத்திய அரசு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் ஜிஎஸ்டி.,யை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
12 அல்லது 18ஆக குறையுங்கள்
இதுகுறித்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இதன் தலைவர் எல்.சுரேஷ், நடிகர் கமல், அபிராமி ராமநாதன் உள்ளிட்டவர்கள்... அப்போது பேசிய தலைவர் சுரேஷ், 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யால் சினிமா துறை மிகவும் பாதிக்கும். இதை 12 அல்லது 18 சதவீதமாக குறைக்க வேண்டும், இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேச உள்ளோம் என்றார்.
சினிமா சூதாட்டம் அல்ல, கலை
தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், "சினிமாத்துறை என்பது செய்தியை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் ஒரு ஊடகம். எனக்கு நினைவு தெரிந்தது முதல் சினிமா பார்த்து வருகிறேன். நான் பேச கற்று கொண்டதே சினிமாவில் தான். சினிமா என்பது சூதாட்டம் கிடையாது அது ஒரு கலை. சினிமாவை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் உள்ளார்கள். அதை இந்த உலகம் கண்டிருக்கிறது.
பாவப்பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ஜிஎஸ்டி., நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிக வரி விதித்து சினிமா துறையை பாவப்பட்டியலில் சேர்த்து விடாதீர்கள். 28 சதவீதம் வரியால் சினிமா துறையில் கருப்பு பணபுழக்கம் தான் அதிகமாகும். 28 சதவீதம் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் எழுந்துள்ளது.
சினிமாவை விட்டே விலகுவேன்
இந்தியாவிற்கு உலகளவில் பெருமை சேர்ப்பது பிராந்திய மொழி படங்கள் தான். ஆகவே இதை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி.,யை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து, சினிமா துறையினரின் நியாயமான கோரிக்கையை ஏற்க வேண்டும். ஒருவேளை ஹிந்தி துறையினர் ஏற்று கொண்டாலும் நாங்கள் இதை ஏற்று கொள்ள மாட்டோம். மத்திய அரசு ஜிஎஸ்டி., வரியை குறைக்காவிட்டால் சினிமா துறையை விட்டே நான் விலகுவேன். இதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
இவ்வாறு கமல் பேசினார்.