தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமா கவிஞர் நா.காமராசன் உடல் நல குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். இவர் கலைமாமணி, பாரதிதாசன் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
தேனி மாவட்டம், போடியில் உள்ள மீனாட்சிபுரத்தில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நாச்சிமுத்து காமராசன் என்ற நா.காமராசன். போடியை சேர்ந்த புலவர் கான் முகமது என்பவர் தான் காமராசனின் கவிதை இலக்கண ஆசிரியராக இருந்தார். தேவதாஸ், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களால் ஈர்க்கப்பட்டு இவரும் கவிதை எழுத தொடங்கினார்.
மதுரை, தியாகராஜர் கல்லூரியில் பட்டப்பிடிப்பை படித்தார். அப்போது அவர் எழுதிய கவிதை, கவிஞர் சுரதாவால் பாராட்டை பெற்றது. மாணவ பருவத்திலேயே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். படித்த தியாகராஜர் கல்லூரி, உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பின் சென்னை தலைமை செயலகத்தில் வேலை கிடைத்தது.
எம்ஜிஆரின் பல்லாண்டு வாழ்க படத்தின் மூலம் 1975-ம் ஆண்டில், சினிமா பாடலாசிரியராக அறிமுகமானார். இந்தப்படத்தில் இவர் எழுதிய முதல் பாடல் "போய்வா நதி அலையே...". தொடர்ந்து எம்ஜிஆர்., தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். புதுக்கவிதைக்கு வித்திட்டவர் காமராசன். எம்.எஸ்.வி., கேவி.மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா உள்ளிட்ட பல ஜாம்பவான் இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அரசின் முக்கியமான பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.
இவர் எழுதிய கருப்பு மலர்கள் என்ற கவிதை தொகுப்பிற்கு யுனஸ்கோ விருது கிடைத்தது. எம்ஜிஆர்., திமுக,விலிருந்து விலகியதும், இவரும் அதிமுக.,வில் எம்ஜிஆர்., உடன் இணைந்து கொண்டார்.
கருப்பு மலர்கள், ஆப்பிள் கனவு, சூரிய காந்தி, தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும், சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
நா.காமராசனின் இறுதிச்சடங்கு நாளை, அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், போடியில் உள்ள மீனாட்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது.
காமராசன் எழுதிய பிரபல பாடல்கள்....
பல்லாண்டு வாழ்க - போய்வா நதி அலையே...
இதயக்கனி - தொட்ட இடமெல்லாம்...
ஊருக்கு உழைப்பவன் - இரவு பாடகன் ஒருவன் வந்தான்...
நீதிக்கு தலைவணங்கு - கனவுகளே ஆயிரம் கனவுகளே...
இன்று போல் என்றும் வாழ்க - இதயத்தில் இருந்து இதழ்கள் வரை...
வெள்ளை ரோஜா - ஓ மானே மானே...
முந்தானை முடிச்சு - வெளக்கு வச்ச நேரத்தில...
கை கொடுக்கும் கை - கண்ணுக்குள்ளே யாரோ...
அன்புள்ள ரஜினிகாந்த் - முத்துமணி சுடரே வா...
நல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு...
நான் பாடும் பாடல் - பாடும் வானம் பாடி...
இங்கேயும் ஒரு கங்கை - தெற்கு தெரு மச்சானே...
அந்த ஒரு நிமிடம் - தேவை இந்த பாவை...
அந்த ஒரு நிமிடம் - பச்சோந்தியே கேளடா...
உதயகீதம் - மானே தேனே கட்டிப்பிடி...
மந்திர புன்னகை - மந்திர புன்னகையோ...
இரட்டை வால் குருவி - கண்ணன் வந்து பாடுகிறான்...
ஊர்க்காவலன் - பட்டுச்சட்டைக்கார...
காதல் பரிசு - கானலுக்குள் நீர் எடுத்து...
நான் சொன்னதே சட்டம் - ஒரு தேவதை வந்தது...
பெரிய வீட்டு பண்ணக்காரன் - மல்லிகையே மல்லிகையே...
என் அருகில் நீ இருந்தால் - ஓ உன்னாலே நான்...