ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"ரசிகர்களால் நான் பச்சை தமிழன் ஆகிவிட்டேன். தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை. போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்" என்று சமீபத்தில் ரஜினி ரசிகர்கள் சந்திப்பில் பேசினார். இது ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவதவற்கான அறிகுறி என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். "இந்த நிலையில் விருந்தாளியாக வந்தவர்கள் எல்லாம் நாட்டை ஆள முடியாது மண்ணின் மைந்தர்கள் தான் ஆள்வார்கள்" என்ற பாரதிராஜா கூறியுள்ளார்.
இயக்குனர் பேரரசு எழுதிய என்னைப் பிரம்மிக்கவைத்த பிரபலங்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கே.பாக்யராஜ் வெளியிட டி.ராஜேந்தர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பாரதிராஜா பேசியதாவது:
தமிழ்நாட்டை போன்ற அற்புதமான நாடு எதுவும் கிடையாது. இழிச்சவாயன் நாடும் எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இங்கே வந்து அரசியல் செய்யலாம். தமிழன் எங்காவது போய் அரசியல் பேச முடியுமா? எல்லோரும் இங்கு வந்து தொழில் செய்யலாம். தமிழன் எங்காவது போய் தொழில் செய்ய முடியுமா. வந்தாரை வாழ வைக்கும் நாடு என்று சொல்லி சொல்லியே தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கும் தேசப் பற்று உண்டு. ஆனால் தாய்ப்பாலுக்கு பிறகுதான் தேசிய பால், உலகபால் எல்லாம். முன்பு நிகழ்ச்சி தொடங்கும் முன் தமிழ்தாய் வாழ்த்துப் பாடுவார்கள். இப்போது தேசிய கீதம் பாட வேண்டும் என்கிறார்கள். இது தமிழ் தாய் வாழ்த்தை அழிக்கிற செயல். நாம் நம் மொழியை கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். இதற்காக நாம் மீண்டும் ஒன்று கூட வேண்டும். தமிழ் கலாச்சாரம் காணாமல் போய்விடுமோ என்ற பயமாக இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் இங்கு வரட்டும், வாழட்டும், அரசியல் கூட செய்யட்டும். ஆனால் இந்த நாட்டை இந்த மண்ணின் மைந்தர்கள் தான் ஆள வேண்டும். தலைமை பொறுப்பு இந்த மண்ணின் மைந்தனுக்கே. யார் வேண்டுமானாலும் வீட்டுக்கு வாருங்கள், விருந்து சாப்பிடுங்கள். திண்ணையில் படுத்து உறங்குங்கள் ஆனால் எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.