டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்திய சினிமாவின் பிரமாண்டமாய் உயர்ந்த நிற்கிறது பாகுபலி. உலக முழுவதும் வெளியிடப்பட்டு ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. பாகுபலியின் சாதனையை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாகுபலியின் பாட்டன் சந்திரலேகாவை நினைவு கூற வேண்டும். அன்றைக்கு இருந்த தொழில்நுட்பம். அன்றைக்குள்ள பண பதிப்பை ஒப்பிட்டு பார்க்கும்போது பாகுபலிக்கும் சற்றும் குறைவில்லாத படம் சந்திரலேகா.
பிரமாண்ட ஹாலிவுட் படங்கள் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசனுக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோன்ற ஒரு படத்தை நாம் ஏன் எடுக்க கூடாது என்று முடிவு செய்தார். அன்றைக்கு ஒரு பெரிய படத்தின் தயாரிப்புச் செலவு ஒன்று முதல் இரண்டு லட்சம். சிறிய படங்கள் 50 ஆயிரத்தில் எடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தனது படத்தின் பட்ஜெட் 30 லட்சம் என்ற முடிவு செய்தார் வாசன்.
பிரபாஸ், ராணா மாதிரி அன்றைக்கு ஆக்ஷன் ஹீரோக்களாக இருந்த எம்.கே.ராதாவை ஹீரோவாகவும், ரஞ்சனை வில்லனாகவும் தேர்வு செய்தார். பிரமாண்ட டிரம்ஸ் நடனமும், சர்க்கஸ் சண்டை காட்சியும் படத்தில் இடம்பெற வேண்டும் என்று அதற்கேற்ப கதையை உருவாக்கினார். ஜெமினியின் கதை இலாகா ஒரு வருடம் திட்டமிட்டு சந்திரலேகா கதையை உருவாக்கியது. எஸ்.ராஜேஷ்வரராவ் இசை அமைத்தார், கமால்கோஷ் ஒளிப்பதிவு செய்தார், ஆர்ட் டைரக்டர் ஏ.கே.சேகர். ஆரம்பத்தில் அன்றைய பிரமாண்ட இயக்குனர் ஆச்சார்யா இயக்குவதாக இருந்தது. சில கருத்து வேறுபாடுகளால் வாசனே இயக்குனர் பொறுப்பையும் ஏற்றார்.
ஒரு வருடத்திற்குள் படத்தை முடிக்க திட்டமிட்டார். ஆனால் இரண்டு வருடங்கள் ஆனது. படத்துக்காக ஒரு சர்க்கஸ் கம்பெனியை ஒரு மாதத்திற்க வாடகைக்கு எடுத்து படமாக்கினார். அந்த சர்க்கஸ் கம்பெனி பிற்காலத்தில் ஜெமினி சர்க்கஸ் என்றே பெயரை மாற்றிக் கொண்டது. பாகுபலியின் போர் காட்சிகள் ஏசி கிராபிக்ஸ் ஸ்டூடியோக்களில் உருவாக்கப்பட்டது. ஆனால் சந்திரலேகாவின் போர் காட்சிகளுக்காக 50 யானைகள், 500 குதிரைகள், ஆயிரம் நடிகர்கள் ஒரு மாதம் வரை படப்பிடிப்பில் ஈடுபட்டுத்தப்பட்டனர். வீடு வாசல், சொத்துக்கள் அத்தனையும் அடமானம் வைத்து படத்தை எடுத்தார். அவரின் அசராத முயற்சிக்கு பலரும் கைகொடுக்க படத்தை எடுத்து முடித்தார்.
1948ம் ஆண்டு ஏப்ரல் 9ந் தேதி சந்திரலேகா வெளிவந்தது. ஒரு படம் 10 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட காலகட்டத்தில் 120 தியேட்டர்களில் படத்தை வெளியிட்டார். சுமார் 20 படங்களின் பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்தார். அப்படியென்றால் வசூலும் 20 மடங்கு உயரவேண்டும் என்பதற்காக அத்தனை தியேட்டர்களில் வெளியிட்டார்.
அதன் பிறகு படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அப்படியே வைத்துக் கொண்டு இந்தி நடிகர்களை கொண்டு வசன காட்சிகளை படமாக்கி இந்தியில் நேரடி படமாக சந்திரலேகாவை வெளியிட்டார். பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம், ராட்சத விளம்பர போர்ட்டுகள், சுவரொட்டிகள் என வடமாநிலத்தை கலக்கினார். படம் சக்கைபோடு போட்டது. இதன் மூலம் ரஞ்சன் இந்தியில் பெரிய நடிகர் ஆனார். மூன்றரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தை இரண்டரை மணி நேரமாக குறைத்து ஆங்கிலத்தில் டப் செய்து உலக நாடுகளில் வெளியிட்டார். அங்கும் பெரிய வரவேற்பை பெற்றது. சுமார் 40 லட்சத்தில் தயாரான படம் 5 கோடி வசூலித்ததாக கூறுவார்கள். பாகுபலியின் பாட்டன் சந்திரலேகா என்பது சரிதானே.