வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
குக்கூ படத்தை இயக்கிய ராஜூமுருகன், அதன்பிறகு இயக்கிய படம் ஜோக்கர். குருசோமசுந்தரம் நாயகனாக நடித்த அந்த படத்தில் என்னங்க சார் உங்க சட்டம், ஜாஸ்மின் ஆகிய இரண்டு பாடல்களை பாடியவர் தர்மபுரியைச் சேர்ந்த பாடகர் சுந்தரய்யர். சினிமாவில் பாடிய முதல் பாட்டுக்கே தேசிய விருது பெற்ற அவர் அந்த நொடிகளில் இருந்து இன்னும் தான் வானத்தில் பறந்து கொண்டேயிருப்பதாக சொல்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், நானெல்லாம் சினிமாவில் பாடுவேன், தேசிய விருது வாங்குவேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. கிராமப்புறங்களில் தெருக்களில் பாடி வந்த தெருப்பாடகன் நான். மைக் கூட இல்லாமல் கத்தி பாடுவேன். என் ஊரில் இருப்பவர்களுக்கு என்னை பிடிக்காது. அதனால் ஊரை விட்டு வெளியே வந்து குடிசை வீடு கட்டி வாழ்ந்து வந்தேன்.
ஜோக்கர் படத்திற்கான லொகேசன் பார்க்க தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, டைரக்டர் ராஜூமுருகன் உள்ளிட்டோர் தர்மபுரிக்கு வந்திருந்தனர். அப்போது வித்தியாசமான குரல் வளம் கொண்ட அந்த ஏரியா பாடகர்களை தேடுவதாக கேள்விப்பட்டு அவர்களை சென்று பார்த்தேன். என் குரலையும் பதிவு செய்து கொண்டார்கள். அதையடுத்து சென்னை வந்தவர்கள் ஒருநாள் என்னை அழைத்தனர். அப்போது சென்னைக்கு செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் என் மனைவியின் காதுகளில் இருந்த தோடை விற்று அந்த பணத்தில் சென்னை வந்து பாடினேன். முதன்முதலாக ரெக்கார்டிங் தியேட்டர், வட்டமான மைக்கைப்பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.
எனக்கு ரெக்கார்டிங் தியேட்டர்களில் பாடிய அனுபவம் இல்லாததால் என்னை கஷ்டப்பட்டு பாட வைத்தார் இசையமைப்பாளர். ஜோக்கர் படத்தில் இடம் பெற்ற ஜாஸ்மின் என்ற பாடலைத்தான் முதலில் பாடினேன். அதன்பிறகு என்னங்க சார் உங்க சட்டம் -என்ற பாடல். இதில் ஜாஸ்மின் பாடல் பாடியதற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. நானெல்லாம் படத்தில் பாடியதே பெரிய விசயம். ஆனால் பாடிய முதல் பாட்டுக்கே தேசிய விருதே கிடைத்து விட்டது. அதோடு அந்த பாடலை விருது வாங்க சென்றபோது ஜனாதிபதி முன்பும் பாடினேன். நான் கனவில்கூட நினைத்து பார்க்காத விசயங்கள் நடந்துள்ளது. விருது வாங்குவதற்காக முதன்முதலாக விமானத்தில் பறந்து சென்ற நான், இன்னும் அதிலிருந்து இறங்காமல் தொடர்ந்து பறந்து கொண்டே தான் இருக்கிறேன் என்கிறார் பாடகர் சுந்தரய்யர்.