அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தற்போது சினிமாவில் பிசியாக இருக்கிறார், உதயநிதி
ஸ்டாலின். இயக்குனர் எழில் இயக்கத்தில் சரவணன் இருக்க பயம் ஏன் என்ற படம், இவர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ளது. இந்த படம் பற்றியும், அரசியல் பற்றியும் அசராமல் பேசுகிறார் உதய்.
படம் பற்றி சொல்லுங்க ?
படத்தில் என் கேரக்டர் பேர் தான் சரவணன். இதற்கு முன், காமெடி படங்களில் அதிக கவனம் செலுத்தினேன்; இது, எழில் சார் ஸ்டைல் படம். இதில் பேய் சம்பந்தமான காட்சிகள் இருந்தாலும், பேய் படம் இல்லை. ஒரு தேசிய கட்சியின் தமிழக தலைவர் சூரி. அந்த பதவி, திடீரென எனக்கு கிடைக்கிறது. இதற்கு பின், எனக்கும், சூரிக்கும் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பாக படமாக்கி உள்ளோம்.
நன்றாக டான்ஸ் ஆடுகிறீர்களே?
டான்ஸ் ஆடும் போது, முன்பு பயமாக இருந்தது; இப்போது அந்த பயம் நீங்கிவிட்டது. அதற்காக, முறையான பயிற்சி எடுக்கிறேன். திரையில் பார்க்கும்போது, அந்த மாற்றம் உங்களுக்கு தெரியும்.
இந்த படத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம்?
இந்த படத்தில், காமெடி நடிகர்கள் அதிகம். என்ன பிரச்னை என்றாலும், இயக்குனர், டென்ஷனாகவே மாட்டார். யோகி பாபு கூட நடிக்கும் போது, பதற்றமாக இருந்தது. இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில், நான், கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், யோகி பாபு, பக்காவாக நடித்து, கைதட்டல் வாங்கி விடுவார்.
உங்களுக்கு அதிகமாக காமெடி படமே அமையுதே?
எனக்கும் எல்லா வகையான படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை உள்ளது. மனிதன் மாதிரி படங்களில் நடிக்க ஆசை தான். மனிதன்-2 எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மக்களுக்கு பிடிக்கின்ற படமாக இருக்கணும், மற்றபடி எனக்கு அமையும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.
எந்த படத்திற்கு பிறகு நாமும் நடிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது.?
மனிதன் படத்துக்கு பிறகு எனக்கு இந்த நம்பிக்கை வந்தது. எந்த சவாலான ரோலும் நம்மால் செய்ய முடியும் என்று நம்பிக்கை பிறந்தது.
நயன்தாரா, ஹன்சிகா ஆகியோருடன் நடித்த அனுபவம்?
நயன்தாரா, அனுபவம் உள்ள நடிகை. நாங்கள் இருவரும் நடித்த படங்களில், எனக்கு ரொம்ப உதவியாக இருந்தார். உடைகள் விஷயத்தில் ரொம்ப கவனம் செலுத்துவார். அவரது உடைகள் மட்டுமல்லாமல், நான் அணிந்திருக்கும் உடைகளும், காட்சிக்கு பொருத்தமாக இருக்கிறதா என, ஆலோசனை கூறுவார்.
ஹன்சிகாவுடன் இரண்டு படங்களில் நடித்தேன். மனிதன் படத்தில், கோர்ட் சீனில் நடிக்கும் போது, எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுவாங்க.
உங்கள் படங்களை பார்த்துவிட்டு, அப்பாவும், அம்மாவும், கருத்து கூறியது உண்டா?
இருவருமே, மனதில் பட்டதை பளிச் என, சொல்லிடுவாங்க. ஓகே ஓகே பார்த்துட்டு, படம் பிடிக்கவில்லை என, இருவருமே கூறினர். தியேட்டரில் வந்து, படம் பார்த்து, ரசிகர்கள் சிரித்து, கைதட்டுவதை பார்த்த பின் தான், படம் நன்றாக வந்திருப்பதாக, இருவரும் கூறினர். மனிதன் படம் பார்த்துவிட்டு, அப்பா ரொம்ப பாராட்டினார்; தங்கையும் பாராட்டினாங்க.
நீங்களே தயாரிப்பாளர் என்பதால் உங்க படத்திற்கு அதிகம் செலவு செய்வீர்களா.?
அப்படி எல்லாம் இல்லை. கதைக்கு என்று ஒரு பட்ஜெட் வைத்துவிடுவோம். பிறகு நடிகர்கள் சம்பளம், எவ்வளவு நாள் படம் எடுக்க போகிறோம், படத்திற்கு என்னென்ன தேவை... இப்படி எல்லாவற்றையும் பார்த்து தான் எடுக்கிறோம். மற்றபடி, என் படத்துக்கு நான் தயாரிப்பாளர் என்பதால் அதிகம் செலவு இழுத்து கொள்ள மாட்டேன்.
அரசியல், நடிப்பு எது ஈஸி என்று நினைக்கிறீர்கள்.?
இரண்டுமே கஷ்டம் தான். என் வீட்டில் கேட்டு பாருங்க சொல்வாங்க.
இப்போது சினிமா எப்படி இருக்கிறது?
படம் எடுப்பதை விட அதை ரிலீஸ் செய்வதில் தான் அதிக கஷ்டம் உள்ளது. வாரத்திற்கு நான்கு படங்கள் ரிலீஸாகிறது, அதேசமயம் ஏகப்பட்ட பிரச்னைகளும் இருக்கிறது.
தயாரிப்பு, வெளியீடு என எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருப்பது ஏன்.?
படங்களை வாங்கி வெளியிடுகிறேன். ஆனால் என் பெயர் போடுவது கிடையாது. என் பெயர் போட்டால் நிறைய பிரச்னை வருகிறது. அதனால் அதை தவிர்த்து விடுகிறேன். இப்போதெல்லாம் தயாரிப்பு என்பது ஹீரோக்களே மொத்த பட்ஜெட்டில் பாதி சம்பளம் போய் விடுகிறது. அதனால் கொஞ்சம் படம் யோசிக்கிறேன். என் படங்களுக்கு என்று ஒரு சின்ன வியாபாரம் இருக்கிறது, அதை வைத்து எனக்கான படத்தை நானே எடுத்துகொள்கிறேன்.
நடிகர் சங்கம் செயல்பாடுகளில் உங்களை அதிகம் பார்க்க முடிவதில்லையே?
விஷால் என் நண்பர், சின்ன வயதில் இருந்தே நல்ல பழக்கம், ஒன்றாகத்தான் படித்தோம். ஆனால் அவர் பதவிக்கு வந்த பிறகு என் நண்பர் இல்லை. எனக்கு என்று எதுவும் அவரிடம் கேட்டதில்லை, பிரச்னை ஏதும் வந்தால் பேசுவேன், அவ்வளவுதான்.
தாத்தாவின் வசனத்தில் நடிக்க வாய்ப்பில்லையா?
எனக்கு அந்த வருத்தம் அதிகமாகவே இருக்கு. அவர் படங்கள், வசனத்துக்கு பெயர் பெற்றவை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
உங்கள் ஆசை?
தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றை, ஒரு ஆவண படமாக எடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு, அவரது பெருமை, சாதனையை சொல்ல ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
எதிர்கால திட்டம் என்ன?
எட்டு ஆண்டுகளுக்கு முன், நடிக்க போறீங்களா என கேட்டிருந்தால், சிரித்திருப்பேன். ஆனால், எதிர்பாராமல் சினிமாவுக்கு வந்துவிட்டேன். எதையுமே, திட்டமிட்டு செய்வது இல்லை. இப்போது, சினிமாவில் இருக்கிறேன்; அவ்வளவு தான். நான் அரசியலுக்கு வர, சினிமா அவசியம் இல்லை. வீட்டில், அப்பாவுடன் நிறைய அரசியல் பேசுவேன். சினிமாவுக்கு வருவதற்கு முன், அரசியலைப் பற்றி எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்திருந்தேன். சினிமாவுக்கு வந்தபின், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டேன். நான் நடித்த படங்களுக்கு, அரசியல் காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டது தான், இதற்கு காரணம். படத்துக்கு வரி பிரச்னை ஏற்பட்டது. சினிமாவில், அரசியல் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.
வரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க.?
தளபதி இயக்கும் பொதுவாக என் மனசு தங்கம் என்ற படத்திலும், கெளரவ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறேன்.