தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினிக்கு முன்பே, தமிழ் சினிமாவில், ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண். வாழ்க்கையிலும், திரையுலகிலும், வெற்றி, தோல்விகளை சந்தித்தவர். 'ஒரு படம் நடித்தாலும், மனதுக்கும், சமுதாயத்திற்கும் நிறைவு தரும் படமாக அது இருக்க வேண்டும்' என்பதில், உறுதியாக இருக்கிறார். அவர், ப.பாண்டி படம் பற்றியும், தன்னைப் பற்றியும் இங்கே பேசுகிறார்.
தந்தை கஸ்துாரி ராஜா, மகன் தனுஷ் ஆகிய இரண்டு பேர் இயக்கத்திலும் நடித்த அனுபவம்?
கஸ்துாரி ராஜா இயக்கத்தில், 27 ஆண்டுகளுக்கு முன், என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்தேன். தற்போது, அவரது மகன் தனுஷ் இயக்கத்தில், ப.பாண்டியில் நடிக்கிறேன். இப்படி ஒரு அனுபவம், இந்திய திரை உலகில், வேறு எவருக்குமே கிடைக்காது என, நினைக்கிறேன்.என் ராசாவின் மனசிலே படத்தில், குடியினால் ஏற்படும் தீங்கு குறித்தும், அதனால், ஒரு குடும்பம் வீணாவதை பற்றியும் கூறினோம். ப.பாண்டியில், இளைஞர் சமுதாயம், முதியவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பதையும், அவர்களை ஒதுக்கி வைக்காமல், அவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதையும் கூறுகிறோம்.
படத்தில் உங்க ரோல்?
இந்த படத்தில், ஒரு முக்கியமான கருத்தை, என் மூலமாக சொல்லியிருக்கிறார், தனுஷ்; இதை, ரஜினி சார் கூட செய்ய முடியும். ஆனால், தனுஷ், என்னை தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. என்னை, இந்த படத்தில், 'ஸ்டன்ட் மாஸ்டர்' ரோலில் நடிக்க வைத்துள்ளார்.
உங்களுக்கு, 68 வயதாகிவிட்டது. இந்த வயதில், ஜீன்ஸ் பேன்ட், சட்டை என, உங்களின் உடைகள், அலப்பறையாக இருக்கிறதே?
இந்த கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை எல்லாம், தனுஷ் எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார். என்னை, அவரிடம் முழுமையாக ஒப்படைத்தேன். அவர் கூறியதை முழுமையாக செய்திருக்கிறேன். ஒரு காட்சியில், நானும், ரேவதியும் சந்திக்கும்போது, ஒரு வசனம் வரும்; அந்த வசனம், என் கேரக்டரையே, டேமேஜ் செய்வது போல் இருக்கும். இது போன்ற வசனங்கள், மற்ற படங்களில் இருந்திருந்தால், தவிர்த்திருப்பேன். ஆனால், இந்த படத்துக்கு, அந்த வசனம் இருந்தால் தான், திருப்பமாக இருக்கும். அதனால், அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டேன்.
ராசாவின் மனசிலே இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக கூறினீர்களே?
அவ்ளோ சீக்கிரம், கதைகளில் நான் திருப்தி அடைய மாட்டேன். நிறைய வெற்றிப் படங்களை கொடுத்த பின், மறுபடியும், ஒரு சாதாரணமான படத்தை என்னால் கொடுக்க முடியாது. இடையில், இரண்டு கதை தயார் செய்து, அது திருப்தியாக இல்லை; அதனால், இப்போது வேறு கதையை தயார் செய்கிறேன்; அதுதான், ராசாவின் மனசிலே இரண்டாம் பாகம். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.