இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் பக்கா கமர்ஷியல் இயக்குனர்களாகவும், விருது படங்களின் இயக்குனர்களாவும் இரு பாதையில் பயணம் செய்தவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் சிவகுமார் வரை பல நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் தான். இவர்களை பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு ஆவணப் படத்தை தயாரித்துள்ளார். அது நேற்று வெளியிடப்பட்டது.
அந்த ஆவணப்படத்தில் கிருஷ்ணன்-பஞ்சு பற்றிய ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை சினிமாவுக்குள் கொண்டு வந்தது சதிலீலாவதி படத்தில் துணை இயக்குனர்களாக பணியாற்றிய கிருஷ்ணன்-பஞ்சு தான். பராசக்தி படத்தில் சிவாஜியை அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான். ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில முக்கியமான வரலாற்று பதிவுகள் வருமாறு:
இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு இணை, தமிழ் - தெலுங்கு - இந்தி - கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றதன் மூலம், பிற தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகளும் அவர்களைப் பின்பற்ற வழியமைத்துக் கொடுத்தனர். கிருஷ்ணன் படத்தின் திரைக்கதையில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார், பஞ்சு படப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றை கவனித்துக்கொள்வார். மூன்று இந்திய மொழிகளில், நாற்பது ஆண்டு கால அளவுக்குள் ஐம்பத்தாறு திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர் இணை இவர்கள் மட்டுமே.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அறிமுகமான 'சதிலீலாவதி' (1936) படத்தின்போது தொடங்கிய இந்த (கிருஷ்ணன் பஞ்சு) கூட்டணி, 1952-இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் அறிமுகம் செய்தது. பின்னர் இந்த இரு திலகங்களுடனும் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிலேயே எவரும் செய்யாத சாதனையைச் செய்தது. மேலும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பானுமதி, சாரதா, எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, மைனாவதி, 'குலதெய்வம்' ராஜகோபால், மு.க.முத்து உட்படத் திறமையான கலைஞர்கள் பலரை அறிமுகம் செய்தவர்களும் இவர்கள்தான். 'ரத்தக்கண்ணீர்' படம் மூலம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவை சினிமாவுக்கு மீண்டும் அழைத்து வந்ததும் இவர்கள்தான்.
கே.ஆர்.ராமசாமி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக உருவானதற்கும், நகைச்சுவை நடிகர்களான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், 'குலதெய்வம்' ராஜகோபால், டி.ஆர்.ராமச்சந்திரன், 'தேங்காய்' சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாகத் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கும் இவர்களே காரண கர்த்தாக்கள். 'மார்க்கண்டேய' நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், திரையுலகில் வெற்றி பெற்றதும் இவர்களால்தான்.
அண்ணாதுரை, கருணாநிதி, திருவாரூர் தங்கராசு ஆகியோர் திரைப்பட வசனகர்த்தாக்களாகப் புகழ்வெளிச்சம் பெற்றதும் இவர்களால்தான். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கவிஞர் வாலி ஆகியோரை திரைக்கதை வசனகர்த்தாக்களாக அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாகப் புகழ்பெற்ற ஏ.பீம்சிங், எஸ்பி.முத்துராமன், ஆர்.விட்டல், பட்டு என்கிற பட்டாபிராமன், திருமலை மகாலிங்கம் ஆகியோரது வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர்களும் இவர்கள்தான். திரையுலகில் பின்னாளில் புகழ்பெற்ற கே.பாலசந்தர், ஜே.மகேந்திரன், ஆரூர்தாஸ் ஆகியோருடனும் பணியாற்றியுள்ளனர்.
கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் மொத்தம் இயக்கியுள்ள படங்கள் 56. தமிழில் இவர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 41. இந்தியில் 11 படங்களையும், தெலுங்கில் 3 படங்களையும், கன்னடத்தில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளனர். இத்துடன் ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளனர். இவற்றில் இந்திப்படமான 'பாபி' 50 வாரங்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. 'பராசக்தி' (தமிழ்), 'லேத மனசுலு' (தெலுங்கு), 'தோ கலியான்' (இந்தி) ஆகியவை 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடின. மீதமுள்ளவற்றில் 21 படங்கள் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன. 31 படங்கள் 50 முதல் 75 நாட்கள் வரை ஓடியுள்ளன.
தமிழ்நாட்டின் நான்கு முதல்வர்களான அண்ணாதுரை ('நல்லதம்பி'), கருணாநிதி ('பராசக்தி', 'பிள்ளையோ பிள்ளை' உட்பட 3 படங்கள்), எம்.ஜி.ஆர். ('பெற்றால்தான் பிள்ளையா', 'இதயவீணை', 'எங்கள் தங்கம்'), ஜெ.ஜெயலலிதா ('எங்கள் தங்கம்', 'அனாதை ஆனந்தன்', 'அக்கா தம்முடு') ஆகியோருடன் பணியாற்றியுள்ளனர்.
இவர்கள் இயக்கிய 'குலதெய்வம்', 'தெய்வப்பிறவி', 'அன்னை', 'சர்வர் சுந்தரம்', 'குழந்தையும் தெய்வமும்' ஆகியவை தேசிய விருது பெற்றன. 'உயர்ந்த மனிதன்', 'எங்கள் தங்கம்' ஆகியவை தமிழக அரசின் பரிசுகளையும் பெற்றுள்ளன. இவை தவிர இவர்கள் பல்வேறு விதமான அங்கிகாரங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவை 40 ஆண்டுகள் ஆண்ட இரட்டை மன்னர்கள் இவர்கள் என்றால் அது மிகையில்லை.