ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷால் அணியில் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆர்யா. சற்று இடைவெளிக்கு பின், அவர் நடிப்பில், கடம்பன் படம் வெளியாகவுள்ளதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும், ஆர்யா அளித்த பேட்டி:
தயாரிப்பாளர் சங்கத்தில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விஷயம் என்ன?
திருட்டு, விசிடி பிரச்னை தான், இங்கே, பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இந்த பிரச்னை இல்லை. இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் கூட, படங்கள் வெளியாகின்றன. இதை தடுப்பதற்கு, தைரியமாக யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.இப்போது, நிலைமை மாறிவிட்டது. திருட்டு, விசிடியை ஒழிக்க, அதிரடி நடவடிக்கை எடுப்போம். அப்புறம் படத்துக்கு அத்தியாவசியமான செலவு எது என்பதை உணர்ந்து, திட்டமிட்டு படம் எடுத்தால், தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.
விஷால், அரசியலுக்கு வருவதற்காக தான், இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக...?
தயாரிப்பாளர் சங்க தேர்தலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ரொம்ப நெருக்கத்தில் வந்துவிட்டன. கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால், ஆர்.கே.நகரிலும், ஒரு கூட்டணி போட்டு, ஜெயிச்சிருப்போம். விஷாலிடம், மச்சான், கொஞ்சம் நேரம் கிடைத்தால், ஆர்.கே.நகருக்கும் போயிடலாமா என, கிண்டலடிப்பேன். யாரும், இதைத் தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறை எதுவும் இல்லையே.
விஷால், நடிக்க வரும் போது, நடிகர் சங்கத்துக்கு வருவார் என, யாரும் யோசிக்கவில்லை. போகப் போக, சூழ்நிலை புரிந்து, செயல்பட்டோம். கையில் ஒரு பதவி இருந்தால் தான், எதையும் செய்ய முடியும்; சும்மா இருந்தால், எந்த காரியமும் செய்ய முடியாது.
காட்டு வாழ்க்கையை பேசும், கடம்பன் படம் பற்றி?
கார்ப்பரேட் நிறுவனங்களால், நம் உயிருக்கும் மேலான காட்டு வளம் அழிக்கப்படுவதை, இப்படத்தில் பதிவு செய்திருக்கோம். காட்டின் வளர்ச்சி தான், நாட்டின் வளர்ச்சி என, கூறுவது உண்டு. அப்படிப்பட்ட காட்டை அழித்து கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகள் என்னென்ன என்பதை தெளிவாக, கடம்பன் படம் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராகவா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு இது. இந்த படத்தில், என்னுடன், 60 யானைகளும் நடித்துள்ளன.
படத்துக்காக, உங்க மெனக்கெடல் எந்த அளவு இருந்தது?
இந்த படத்தோட கதையை கேட்டதுமே, ஒரு, எமோஷனல் கிடைத்தது. நாட்டை பற்றி யோசிக்க வைத்தது; இந்த கதைக்கு, என்ன தேவை என்பதை புரிந்து, என்னை முடிந்தவரை மாற்றி காட்டியிருக்கேன். 96 கிலோ வரை, எடை கூடினேன்; அப்புறம், அதற்கு பின் வரும் காட்சிகளுக்காக, 82 கிலோவாக குறைத்தேன். இதற்கே, ஆறு மாதங்கள் ஆனது. காட்டில், செருப்பு இல்லாமல், கால் சதை கிழிந்து போய் விட்டது. ஆனாலும், தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.
ஆர்யா பற்றி, சில நாட்களாக கிசுகிசுக்கள் வரவே இல்லையே?
காட்டுக்குள்ளே, கம்யூனிகேஷனே இல்லை; அப்புறம் எங்கிருந்து, கிசுகிசு வரும்? காட்டுக்கு உள்ள போனால், வெளியில் வர முடியாது; என்னை பற்றி கிசுகிசு வராதது, எனக்கே வெறுப்பா இருக்கு; நீங்களாவது, எதையாவது எழுதுங்க. தினமும் பேப்பரை பார்த்து, நம்ம நியூஸ் இல்லையே என, கவலைப்படுகிறேன்.
விஷால் திருமணம் முடிந்ததும், உங்க திருமணம் என, ஏற்கனவே கூறினீர்களே?
என்னைப் பொறுத்தவரை, எனக்கான பொண்ணு, இன்னும் பிறக்கவே இல்லைன்னு நினைக்கிறேன்.அந்த அழகான தேவதைக்காக தான், காத்திருக்கிறேன். இப்பதான், நடிகர் சங்கம் கட்டட வேலை துவங்கியுள்ளது. அடுத்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கும், சொந்த கட்டடம் இல்லை என்று பேசிக்கிறாங்க; இந்த கட்டடமும் கட்டி முடிக்கட்டும் என, விஷால் சொல்வானோ என, பயப்படுகிறேன்.
உங்க தோழி, நயன்தாரா நடித்த டோரா படம் பார்த்தீங்களா?
அய்யோ... எனக்கு பேய் என்றால் பயம்; சாதாரணமாக பேய் என்ற வார்த்தையை கேட்டாலே பயப்படுவேன். காஞ்சனா, யாமிருக்க பயம் ஏன் போன்ற படங்களை கூட, பார்க்கவில்லை; மற்றபடி, நயன்தாராவின் டோரா போஸ்டரை பார்த்தேன்; நன்றாக இருந்தது.