பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
2016-ம் ஆண்டின் கடைசி திரைப்பட வெளியீட்டு நாளான இன்று(30.12.16) 7 படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்களையும் சேர்த்தால் 2016ம் ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் 200-ஐ கடந்து சாதனை புரிந்துள்ளது.
பல வெற்றிகள், சில சுமாரான வெற்றிகள், சில தோல்விகள், பல படுதோல்விகள் என வழக்கம் போலவே இந்த ஆண்டும் ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய ஆண்டாகவே இருந்தது. எந்தப் படம் வெற்றி பெறும், எந்தப் படம் தோல்வியைச் சந்திக்கும் என்பதை யாராலும் கணித்துக் கூற முடியாத நிலை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்டு, மேலும் சிலபல கோடிகள் செலவு செய்து விளம்பரப்படுத்தப்பட்ட பெரிய நடிகர்களின் படங்கள் கூட வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதே உண்மை நிலை. இருந்தாலும் சிலர் அந்தப் படங்களையும் வெற்றிப் படங்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். சில பெரிய நடிகர்களின் படங்களுக்கான விளம்பரச் செலவில் மட்டுமே எடுக்கப்பட்ட சில சிறிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
கபாலி
ஒரு படத்தின் வெற்றி என்பது தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரையரங்கினர் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தைக் கொடுத்தால் மட்டுமே முழுமையான வெற்றிப் படமாக அமையும். அந்த விதத்தில் பார்த்தால் கபாலி படத்தைக் கூட முழுமையான வெற்றிப் படங்களின் பட்டியலில் சேர்க்க முடியாது என்று திரையுலகினரே தெரிவிக்கிறார்கள்.
இருந்தாலும் ஒரு படத்தை வியாபாரப்படுத்துவதில், மார்க்கெட்டிங் செய்வதில் கபாலி படம் பல புதிய முறைகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் முழுமையான லாபம் கிடைத்ததோ இல்லையோ, தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்தது என்கிறார்கள். இந்த ஆண்டில் வியாபார ரீதியாகப் பரபரப்பாகப் பேசப்பட்டதில் கபாலி படத்திற்குத்தான் முதலிடம் உண்டு.
யு டியூபில் டீசர், பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பே தயாரிப்பாளருக்கு சில லட்சங்களைப் பெற்றுத் தந்திருக்கும். வசூலித்த தொகை, தயாரிப்பாளருக்குக் கிடைத்த லாபம், படத்தை பிராண்ட் செய்தததில் கிடைத்த லாபம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் கபாலி படம் இல்லாமல் இந்த ஆண்டின் 2016ம் ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியல் முழுமை பெறாது.
தெறி
விஜய் நடிக்கும் படங்களுக்கென்று எப்போதுமே தனி வியாபாரமும், ஓபனிங்கும் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. கமர்ஷியல் ரீதியிலான படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வரும் விஜய்க்கு தெறி படம் அவருடைய ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தும் படமாக அமைந்தது.
சென்னை முதல் வெளியான சிறிய ஊர்கள் வரை இந்தப் படம் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்தது என்றே சொல்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் விஜய்யின் மார்க்கெட் நிலவரம் இன்னும் அதிகமாகியுள்ளது. அவருடைய முந்தைய படங்களின் வியாபாரத்தையும், வசூலையும் தெறி முறியடித்தது என்பதும் திரையுலகினரின் தகவலாக உள்ளது.
ரஜினி முருகன்
2015ம் ஆண்டிலேயே வெளிவந்திருக்க வேண்டிய படம். ஆனால், தயாரிப்பாளருக்கு இருந்த நெருக்கடியால் இரண்டு முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு கடைசியாக இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான படம் ரஜினி முருகன். இந்தப் படத்தின் இயக்குனர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் இணைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியால் இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ரஜினி முருகன் படமும் நிறைவேற்றியது.
தமிழ்த் திரையுலக சென்டிமென்டைப் பொறுத்தவரையில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிப் போய் வெளியான படங்கள் வெற்றி பெற்றதில்லை என்பதே வரலாறு. ஆனால், அந்த சென்டிமென்டை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ரஜினி முருகன் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பிற்கு லாபமில்லை என்று ஒரு தகவல் உலவி வந்தது. ஆனால், அது உண்மையில்லை, இந்தப் படத்தின் லாபமாக தயாரிப்பாளர்களுக்கு சென்று சேர வேண்டிய தொகை, அவர்கள் பட்ட கடன் தொகைக்கு சரிக்கட்டப்பட்டது என்பதே திரையுலகினர் தரும் உண்மைத் தகவல்.
இறுதிச் சுற்று
தமிழ், ஹிந்தியில் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த படம். ஆனால், ஹிந்தியை விட தமிழில் எதிர்பாராத வெற்றியை இந்தப் படம் பெற்றது. படத்தில் நாயகனாக நடித்த மாதவன், நாயகியாக நடித்த ரித்திகா சிங் ஆகியோரது நடிப்புதான் அதற்குக் காரணம். மேல் தட்டு மக்களின் வாழ்க்கை முறையில் இந்தப் படம் படமாக்கப்பட்டு இருந்தால் ஒரு வேளை வரவேற்பைப் பெறாமல் போயிருக்கலாம். ஆனால், அடித்தட்டு மக்களில் இருந்து ஒரு பெண், விளையாட்டில் பேரையும், புகழையும் பெறுகிறாள் என்பதைக் கதையாக வைத்ததால் அனைத்துத் தரப்பினரின் வரவேற்பைப் பெற்றது.
சில வருடங்கள் தமிழில் நடிக்காமல், இந்தப் படம் மூலம் மீண்டும் வந்த மாதவன் கையில் தற்போது நான்கந்து படங்கள், உண்மையிலேயே பாக்சிங் வீரரான ரித்திகா சிங் இப்போது முழு நேர நடிகையாகிவிட்டார்.
பிச்சைக்காரன்
பிச்சைக்காரன் என்ற தலைப்பைப் பார்த்ததுமே பலருக்கும் ஒரு யோசனை வந்திருக்கும். ஒரு படத்திற்கு இப்படியெல்லாம் டைட்டில் வைத்துள்ளார்களே என திரையுலகிலேயே பேசிக் கொண்டார்கள். ஆனால், படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிப் பாராட்டிப் பேசியவர்கள் அதிகம். தமிழ் சினிமாவுக்கே உரிய அம்மா சென்டிமென்டை புதிய கோணத்தில் காட்டி, சென்டிமென்டை பிழிந்து தள்ளி பெரிய வெற்றியைப் பெற்றார்கள்.
இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் இந்த அளவிற்கு வெற்றி பெறுமா என்று எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத படம் இது. தமிழிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் பெரிய வசூலைப் பெற்றது. வேறு எந்த தமிழ்ப் படமும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு இந்த ஆண்டில் இவ்வளவு வசூலைப் பெற்றதில்லை என்ற பெருமையப் பெற்ற படம் இது.
இருமுகன்
விக்ரம் - நயன்தாரா முதன் முறை ஜோடி சேர்ந்துள்ளார்கள் என்ற போதே ஒரு பரபரப்பை ஏற்படுத்திய படம். நயன்தாரா நடிக்க வந்து இத்தனை வருடங்களில் விக்ரமுடன் நடிப்பதை மட்டும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். அதற்கு சிலபல காரணங்களும் இருந்தது. அதையும் மீறி எப்படியாவது நயன்தாராவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்து நடிக்க வைத்தார்கள். அது படத்திற்கும் பிளஸ் ஆகவே அமைந்தது.
ஒரு ஆக்ஷன் த்ரில்லரை பரபரப்பாகவே கொடுத்திருந்தார்கள். விக்ரமின் இரு வேட நடிப்பு வழக்கம் போல் வித்தியாசமாக அமைந்தது. கமர்ஷியல் ரீதியாக தன்னுடைய மார்க்கெட்டை கொஞ்சம் இழந்திருந்த விக்ரம் இந்தப் படத்தின் மூலம் அதை மீட்டெடுத்தார். அடுத்த படங்களில் தன்னுடைய சம்பளத்தையும் கூட்டி விட்டார் என்று கோலிவுட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ரெமோ
ஒரு படத்தை விளம்பரத்தால் மட்டுமே வெற்றி பெற வைக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பிய படம். சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு வியாபாரம் உள்ளது, வசூல் உள்ளது. அதையும் மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தில் பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள், பிரம்மாண்ட செலவு, அதிகப்படியான விளம்பரம் என அளவுக்கதிகமாகவே செலவு செய்தார்கள் என்ற பேச்சு எழுந்தது. படத்தை விளம்பரப்படுத்திய அளவிற்கும், செலவழித்த அளவிற்கும் படத்தில் அழுத்தமான கதை இல்லை என்பது பலரின் விமர்சனமாக இருந்தது.
ஆனால், அவற்றையும் மீறி தொடர்ச்சியான விளம்பரத்தால் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். ஒரே ஆண்டில் சிவகார்த்திகேயன் நடித்த இரண்டு படங்கள் வியாபார ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியையும், வசூலையும் பெற்றுள்ளது என தியேட்டர்காரர்களே தங்களுடைய அதிக வசூல் படங்களில் பட்டியல் இடுகிறார்கள்.
சென்னை 28 - இரண்டாவது இன்னிங்ஸ்
விளையாட்டை மையமாக வைத்து விளையாட்டாக எடுக்கப்பட்டு 2007ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் சென்னை 28. அதன் பின் 9 வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்து ஏறக்குறைய அந்தப் படத்தில் நடித்த பல நடிகர்கள் மீண்டும் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பது சிறப்பு.
தனது முந்தைய தோல்விப் படங்களை சரிக்கட்டும் விதத்தில் இந்த இரண்டாம் பாகத்தின் மூலம் இழந்த தன்னுடைய பெயரை மீட்டு எடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அதற்காக தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் இறங்கி, தயாரிப்பாளர் ஆகவும் வெற்றி பெற்றுவிட்டார். முன்னணி நடிகர்களே இல்லாமல் ஒரு படத்தை எடுத்து வழக்கம் போலவே பெரிய கதையும் இல்லாமல் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல.
ஜோக்கர்
கமர்ஷியல்ரீதியிலான படங்களுக்கு மத்தியில் சிறந்த கதையம்சத்துடன் வெளிவந்த படங்களில் இரண்டு படங்கள் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட படங்களாக அமைந்தன. அவை ஜோக்கர் மற்றும் அப்பா. அந்த இரண்டு படங்களும் சிறந்த படங்களின் பட்டியலில் இடம் பெறுவது பெருத்தமான ஒன்று.
படத்தின் பெயரோ ஜோக்கர், ஆனால் அந்த கதாநாயகன் பேசும் விஷயங்களும், சாதிக்கம் விஷயங்களும் பிரில்லியன்ட் ஆனவை. திரைப்படங்கள் மூலம் மக்களிடம் நல்ல கருத்துக்களை விதைக்க முடியும் என்று இன்றும் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய இரண்டாவது படத்திலேயே ஒரு முக்கியமான பிரச்சனையை மையப்புத்தி ஆச்சரியப்படும்படியான ஒரு படத்தைக் கொடுத்தார் இயக்குனர் ராஜு முருகன்.
விமர்சகர்கள், திரையுலகத்தினர், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரின் பாராட்டை இந்த ஆண்டில் பெற்ற முதன்மையான படம் என்ற தகுதி ஜோக்கர் படத்திற்கு உண்டு.
அப்பா
செல்வம், வீரத்தை விட சிறந்தது கல்வி. ஆனால், இன்று கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது. சிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டிய அரசாங்கம் டாஸ்மாக்கில் கூட எலைட் என்பதைக் கொண்டு வந்துவிட்டது. ஆனாலும், அரசுப் பள்ளிகளில் எலைட் பள்ளிக் கூடம் என்பது இல்லை. இன்னமும் அடிப்படை வசதி கூட இல்லாத பல அரசுப் பள்ளிகள் நம் நாட்டில் இருக்கின்றன.
தனியார் பள்ளிகள் கல்வியை வியாபார நோக்கில் நடத்தி கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் தனியார் பள்ளிகளில் லட்சம் லட்சமாக கல்விக் கட்டணத்தைச் செலுத்துபவர்கள் கூட அரசாங்கப் பள்ளிகளைத் தேடி வருவார்கள்.
இப்படி ஏற்றத் தாழ்வு மிக்க கல்வியால் இன்றைய மாணவ, மாணவிகள் எப்படிப்பட்ட சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை யதார்த்தமாய் அப்பா படம் மூலம் சொல்லியிருந்தார் இயக்குனர் சமுத்திரக்கனி.
மேலே குறிப்பிட்ட படங்களைத் தவிர கமர்ஷியல் ரீதியாக சுமாரான, ஓரளவு வெற்றி பெற்ற படங்கள் என மேலும் சில படங்கள் உள்ளன. இந்தப் படங்கள் தயாரிப்பாளருக்கு மட்டும் லாபம் கொடுத்த படங்களாகவே, வினியோகஸ்தர்களுக்கு மட்டும் லாபம் கொடுத்த படங்களாகவோ, தியேட்டர்காரர்களுக்கு லாபம் கொடுத்த படங்களாகவோ இருக்கலாம்.
ஒரு படத்தின் முழுமையான வியாபாரம் அந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை முதல் இணையதளம், மற்ற டிஜிட்டல் தளங்கள், மற்ற உரிமைகள் என தொடர்ந்து கொண்டிருக்கும். இன்னமும் தொலைக்காட்சி உரிமை விற்கப்படாத சில பெரிய படங்களும் உள்ளன.
திரையுலகத்தில் இருந்து கிடைத்த தகவல்கள், விமர்சகர்கள் பாராட்டிய படங்கள், ரசிகர்கள் பாராட்டிய படங்கள், சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கிடைத்த வரவேற்புகள் ஆகியவற்றுடன் தான் மேலே சொன்ன படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.