தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெள்ளைச் சிரிப்பும்,வெண்கல குரலுமாக, 'மக்க கலங்குதப்பா... மடி பிடிச்சு இழுக்குதப்பா...' என, சமீபத்தில் வெளிவந்த 'தர்மதுரை' படத்தில் பாட்டெழுதி பாடியும், நடித்தும் அசத்தியவர் நம் மதுரைக்காரர், மதிச்சியம் பாலா.
அப்பா பெத்து என்ற கோபால், கிளாரினெட் இசைக்கலைஞர். தந்தை வழியில் பயணிக்க விரும்பிய போது, அப்பாவின்அன்புக் கட்டளையால் பி.ஏ., வரை முடித்தார், பாலா. கல்லுாரி படிப்பின் போதே, உடன் பயின்ற மாணவி ஜானகியை கண்டார்.
கண்டதும் காதல்.... ஜானகிக்காக கவிஞராக, பாடகராக தன்னை மாற்றிக்கொண்டார்.
மஞ்ச புடவை கட்டி...மல்லிகைப்பூ தலையில் வச்சு ... என, ஜானகிக்காக உருகி உருகி எழுதிப் பாடிய பாடல்கள் தான்...பாலாவின் திரையுலக பிரவேசத்திற்கு, காரணமாக அமைந்தன. அது ஒரு பிரமிப்பான, அனுபவம் என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் பாலா.
நான் 8ம் வகுப்பு படிக்கும் போது, கோயில் திருவிழாவில் ஒரு பாட்டி முளைப்பாரி, தெம்மாங்கு பாடல் பாடுவார். இரண்டாண்டுகளாக அந்த பாட்டியுடன் கூட சேர்ந்து கேலி செய்து பாடிக் காட்டினேன். மூன்றாம் முறை சென்ற போது, அந்த பாட்டி இறந்து விட்டார். அப்போது கோயிலில் முளைப்பாரி பாட்டை, அடுத்து யார் பாடுவது என்ற கேள்வியெழுந்தது. அத்தை என்னை காட்டினார்.அப்படித் ஆரம்பித்தது என் பாட்டுப் பயணம்.
கல்லுாரிக்குள் காலடி எடுத்து வைத்த போது எனது உயிரை (ஜானகி) கண்டேன். அவளின் முகம், கண், தலைமுடி, நிறத்தை வைத்தே... இட்டுக்கட்டி பாட்டெழுதினேன். என் காதலை ஆரம்பத்தில் மறுத்தவள், தொடர்ந்து எனது பாடல்களிலும், குரலிலும் மயங்கினாள். இனிதாய்
இல்லறம் புகுந்தோம்.அதற்கு சாட்சியாக இரண்டு வயதில் ஆணும், பெண்ணுமாக இரட்டை குழந்தைகள்.
பறையாட்ட கலைஞர் வேலு, ஒருநாள் என்னை போனில் கூப்பிட்டார். அவர் தான் எனது ஆசான். 'நல்லா பாட்டெழுதி, அப்படியே பாடுற கலைஞர் இருந்தா இயக்குனர் சீனு ராமுசாமிக்கு அனுப்பிவிடு' என்றார். 13 கலைஞர்களை அனுப்பினேன். அவருக்கு திருப்தியாகவில்லை.
இந்நிலையில் என்னையே போய் பார்க்கச் சொன்னார். சீனு ராமசாமியை பார்க்க சென்றேன். 'வயதானவரின் துக்கநிகழ்வு, அதில் சந்தோஷமாகவும் பாடவேண்டும்; அதற்கேற்ப
பாட்டெழுது' என்றார்.
அவருக்கு கால் மணி நேரத்தில் பாட்டெழுதி கொடுத்தேன். பாடச் சொன்னபோது, மக்க(ள்) கலங்குதப்பா... என்று சோகமாக பாடினேன்.இதையே சந்தோஷமாகவும் பாடு என்றார். பாடினேன். அதன்பின், பாட அழைத்தனர். எனதுபாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ஏத்தகோவிலுக்குசென்றேன். அங்கு துக்க நிகழ்வுக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. மைக் கட்டப்பட்டிருந்த பந்தலில் நின்று என்னை பாடச் சொன்னார்கள். சுற்றிலும் கேமரா ஒளிவெள்ளத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை. பின் பாட்டை மனப்பாடம் செய்து, பாடி முடித்தேன். பட்டிதொட்டியெல்லாம் எனது பாடலை இளசுகள் விரும்பி கேட்டபோது, பெரிய உயரத்தை தொட்ட மாதிரி இருந்தது,என்றார்.
இவரிடம் பேச 7639 779430.