அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இன்றைக்கு நாம் ஹாலிவுட் தரத்தில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் ஒரு ஹாலிவுட் இயக்குனர். பெயர் எல்லீஸ் டங்கன். காலத்தால் அழிக்க முடியாத காவியங்களை உருவாக்கியவர்.
பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியை நடிக்க வைத்த பெருமை இவரையே சாரும். எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவரும் இவரே. 'இரு சகோதரர்கள்', 'அம்பிகாபதி', 'சூர்யபுத்திரி', 'சகுந்தலா', 'மீரா' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார். அப்படிப்பட்ட மகத்தான சாதனையாளர் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப்பற்றிய சிறிய அறிமுகம்....
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் டங்கன். சிறு வயது முதலே புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருந்தார். புதிதாக வாங்கிய கேமராவைக் கொண்டு, தான் படித்த பள்ளி ஆண்டு இதழுக்காக புகைப்படங்கள் எடுத்தார். அந்த இதழின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத் துறையில் ஒளிப்பதிவு பிரிவில் சேர்ந்தார். திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, படத்தயாரிப்பு நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் ஆர்வத்தோடு கற்றார்.
மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவரும் அங்கு படித்தார். படிப்பு முடிந்ததும், இந்தியா திரும்பி திரைப்படம் தயாரிக்கத் தொடங்கிய அவர், உதவிக்கு தனது கல்லூரி நண்பர் டங்கனை அழைத்து வந்தார். இந்தியா வந்த டங்கன், 'நந்தனார்' திரைப்படத்தில் நண்பருக்கு உதவியாளராக சேர்ந்தார். அதில் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ.என்.மருதாச்சலம் என்ற தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தை இயக்குமாறு டாண்டனிடம் கேட்டார். அவர் நண்பன் டங்கனை சிபாரிசு செய்ய, 1936-ல் 'சதி லீலாவதி' திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட இயக்குநரானார் டங்கன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அறிமுகமான படம் இது.
தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்த தமிழ் உதவியாளர்களைக் கொண்டே தமிழ் சினிமா உலகில் தனித் தன்மை கொண்ட, வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். சினிமாவில் நாடக பாணி எதிரொலிப்பதை மாற்றி, நடிகர்களின் முகபாவனை, உடல்மொழிகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். முதன்முதலாக வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தினார். கேமரா கோணம், ஒளியமைப்பு ஆகியவற்றில் பல புதுமைகளைக் கையாண்டார். சிம்பாலிக் ஷாட்களை அறிமுகப்படுத்தினார். காதல் காட்சிகளில் எல்லை மீறாத நெருக்கத்தை துணிந்து காட்சிப்படுத்தினார்.
தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலப் படங்களையும் இயக்கி முத்திரை பதித்தார். தி ஜங்கிள், தி பிக் ஹண்ட், வீலிங், டார்ஜான் கோஸ் டூ இண்டியா, உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களையும் இயக்கினார். தமிழ் சினிமாவில் 'சதி லீலாவதி'யில் தொடங்கிய இவரது சாதனைப் பயணம் 1950 வரை தொடர்ந்தது. பிறகு அமெரிக்கா திரும்பியவர், தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து 'எ கைடு டு அட்வெஞ்சர்' என்ற பெயரில் சுயசரிதை வெளியிட்டார். அந்நிய நாட்டின் மொழி, கலாச்சாரம், மக்களின் ரசனை, எதிர்பார்ப்பு குறித்து தெரிந்துகொண்டு, தனது தன்னிகரற்ற திறனால் சாதனை இயக்குநராக முத்திரை பதித்த எல்லிஸ் ஆர்.டங்கன் 2001ம் 92வது வயதில் மறைந்தார். தமிழ் சினிமாவின் தந்தை என்று இவரை தாராளமாக அழைக்கலாம்.