வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல பாடலாசிரியரான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமையன்று மரணமடைந்தார். மஞ்சள் காமாலை நோய் தாக்கி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனதால்தான் அவர் மரணமடைந்தார் என செய்திகள் வெளியாகின. அதற்குரிய முழுமையான சிகிச்சைக்காக முத்துக்குமாருக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்பட்டதாகவும், அவ்வளவு பெரிய தொகையை அவரால் செலுத்த முடியாத காரணத்தால் அவர் மரணத்தைத் தழுவ நேர்ந்தது என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக நேற்று பல தகவல்கள் வெளியாகின.
நா.முத்துக்குமார் அடுத்தவர்களுக்கு அதிகம் உதவும் குணம் கொண்டவர் என்றும், தான் பாடல்கள் எழுதிய எந்த படத் தயாரிப்பாளரிடமும் தனக்கு சேர வேண்டிய பணத்திற்காகக் கூட நெருக்கடிகளைக் கொடுத்தது கிடையாது என்கிறார்கள். அவருக்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பணமில்லாத காரணத்தால் 'பவுன்ஸ்' ஆகி திரும்ப வந்துள்ளது. அப்படிப்பட்ட காசோலைகள் மட்டுமே முத்துக்குமாரிடம் நூற்றுக்கும் மேற்பட்டு இருந்தது என்கிறார்கள். இளகிய மனம் கொண்டதாலும், யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாமல் வாழ வேண்டும் என்று அவர் விரும்பியதாலும் அவரைப் பலர் பணம் தராமல் ஏமாற்றிவிட்டனர் என்கிறார்கள். அப்படி திரும்பி வந்த காசோலைகளின் மதிப்பு, முத்துக்குமாரின் மருத்துவச் செலவுக்கு ஆக வேண்டிய தொகையைவிட அதிகம் என்கிறார்கள்.
சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகர், நடிகைகள் மட்டுமே அதிலும் முக்கிய ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு மட்டுமே எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சம்பளத்தைக் கொடுத்துவிடுவார்கள். மற்றவர்களுக்கு பேசும் தொகையை விட பல சமயங்களில் குறைவாகத்தான் கொடுப்பார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். முத்துக்குமாரின் தமிழ் வரிகளை வைத்து அதற்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும், வாயசைத்து தங்களின் சூப்பர் ஹிட் பாடல் என்று பெருமைப்பட்டுக் கொண்ட முக்கிய ஹீரோக்களுக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை, சம்பந்தப்பட்டவர்கள் அவருக்குச் சேர வேண்டிய தொகையை கொடுத்தால் கூட நிர்க்கதியாய் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும் என முத்துக்குமாரின் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். அவர் எழுதி இன்னும் வெளிவர வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கான பணத்தையும் பாக்கி வைக்காமல் சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
இதனிடையே, நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, சேரன் ஆகியோர் சக இயக்குனர்களிடம் நிதியை பெற்று நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு உதவ முயற்சித்து வருகிறார்கள் என கோலிவுட்டில் பேசி வருகிறார்கள். சினிமாவைப் பொறுத்தவரையில் நல்லவனாக இருப்பவர்களுக்கு கடைசியில் நாலு காசு கூட மிஞ்சாது போலிருக்கிறது.