அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் அவரது வீட்டில் காலமானார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது மனைவி முயன்றுள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிர் பிரிந்து விட்டதாக கூறி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமார்,சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த முத்துக்குமார், தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவரது தந்தை அன்னை புத்தகம் என்ற நூலத்தை தனது சொந்த முயற்சியில் வைத்திருந்தார். தனது தந்தையின் ஆர்வத்தால் முத்துக்குமாருக்கு கவிதை, பாடல்கள் எழுதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இளநிலை இயற்பியல் பட்டம் முடித்த முத்துகுமார், சென்னையில் தமிழில் எம்.ஏ., பட்டமும், டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 41 வயதாகும் நா.முத்துக்குமாருக்கு தீபலட்சுமி என்ற மனைவி (37), மகன் ஆதவன் (9) மற்றும் மகள் யோகலட்சுமி (8 மாதம்) உள்ளனர்.
இயக்குநர் கனவு : முத்துக்குமாருக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது தான் கனவு. அதனால் ஆரம்ப காலத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் உதவிய இயக்குநராக பணியாற்றி வந்தார். பின்னர் அந்த கனவு நிறைவேறாமல் போகவே பாடலாசிரியரானார்.
1500 பாடல்கள் : இயக்குநர் சீமானின், வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் முத்துக்குமார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், வெயில், காதல், கல்லூரி உள்ளிட்ட பல படங்களில் சுமார் 1500 பாடல்களுக்கு மேல் எழுதி உள்ளார்.
யுவனுடன் அதிக பயணம் : தமிழ் சினிமாவில் உள்ள அநேக இசையமைப்பாளர்களுடன் நா.முத்துகுமார் பணியாற்றி உள்ளார். குறிப்பாக இவர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை எழுதி உள்ளார்.
ஒரே ஆண்டில் 100 பாடல்கள் : தமிழ் சினிமாவின் நம்பர்-1 பாடலாசிரியராக இருந்த முத்துக்குமார், ஒரே ஆண்டில் 103 பாடல்கள் எழுதி சாதனை படைத்தார்.
கைவசம் 100 படங்கள் : இறக்கும் சமயத்திலும் பிஸியான பாடலாசிரியாக இருந்து வந்த முத்துக்குமார் சுமார் 100 படங்கள் கைவசம் வைத்திருந்தார் என்று அவருடன் இருந்தவர்கள் கூறினர். இதில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் 2.O படமும் முக்கியமானது.
வசனகர்த்தா : பாடலாசிரியராக மட்டுமல்லாது, ஏஎல் விஜய் இயக்கத்தில், அஜித் நடித்த கிரீடம் படத்தில் வசனகர்த்தவாகவும் பணியாற்றியிருக்கிறார் முத்துக்குமார். இதுதவிர ஒரு தொலைக்காட்சி தொடரிலும் வசனகர்த்தாவாக இருந்துள்ளார்.
2 முறை தேசிய விருதுகள் : தங்கமீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய்... என்ற பாடலுக்காகவும், சைவம் படத்தில் அழகே அழகே எதுவும் அழகே... பாடலுக்காகவும் இவர் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இது தவிர 2005 ல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
எழுத்தாளர் : பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, ஆனா... ஆவன்னா..., என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்களும் எழுதியுள்ளார்.
திரையுலகம் அதிர்ச்சி : நா.முத்துக்குமாரின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர்கள் விக்ரமன், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நா.முத்துக்குமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக டுவிட்டரில் நா முத்துக்குமாருடன் பயணித்த பல திரைபிரலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவே பலரும் தெரிவித்துள்ளனர்.
உடல் தகனம் : மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து நியூ ஆவடி ரோடு வேலங்காடு மயானம் வரை அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.தொடர்ந்து அங்கு அவருக்கு இறுதி சடங்குகள்நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரைத் துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.