இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தென்னிந்திய படங்களில் அசத்தி வந்த நடிகை காஜல் அகர்வால், இப்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அவர் தற்போது ரன்தீப் ஹூடாவுடன் ‛டூ லப்சான் கி கஹானி' என்ற படத்தில் முதன்முறையாக பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இப்படம் பற்றியும், பார்வையற்ற பெண்ணாக நடித்த அனுபவம் குறித்தும் காஜல் அகர்வால் அளித்த பேட்டி இதோ...
இந்தப்படத்தில் நடிக்க எப்படி சம்மதம் சொன்னீர்கள்?
இயக்குநர் தீபக் திஜோரி தான் இந்த வாய்ப்பை வழங்கினார். இப்படத்தில் நடிக்கும் முன்னரே இயக்குநர், இந்த கதைக்காக மிகவும் அப்பாவியான பெண்ணாக இருக்க வேண்டும் என்றார். இந்தப்படத்தின் கேரக்டருக்கு நிச்சயம் நான் பொருந்துவேன் என்பதால் நடிக்க சம்மதம் சொன்னேன். எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது நடிப்பு திறனை மேலும் வெளிப்படுத்த இந்தப்படம் ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது. படத்தில் ஹீரோவுக்கு இணையாக என்னுடைய கேரக்டர் உள்ளது. அதனால் தான் இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?
‛ஆல்வேஸ்' என்ற கொரியன் படத்தின் ரீ-மேக் தான் ‛டூ லப்சான் கி கஹானி'. இது ஒரு காதல் படம். இரண்டு பேருக்கும் இடையேயான காதல் தான் படம் முழுக்க சொல்லப்பட்டுள்ளது. என் சினிமா கேரியரில் முதன்முறையாக கண் பார்வையற்றவராக நடித்துள்ளேன். படத்தில் எனது ரோலின் பெயர் ஜெனி. விபத்து ஒன்றில் என் பார்வை பறிபோகிறது. அதன்பின்னர் சூரஜ் எனும் ரன்தீப்பின் அன்பின் கிடைக்க, அதுவே காதலாக மாறுகிறது. ஒருக்கட்டத்தில் எங்களுக்கு பிரிவு ஏற்படுகிறது, மீண்டும் அவர்கள் சந்திக்கிறார்கள், அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் சுவாரஸ்யம். படம் முழுக்க முழுக்க ஒரு அழகிய காதலை சொல்லும் படமாக இருக்கும்.
பார்வையற்ற பெண்ணாக நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
முதன்முறையாக பார்வையற்ற பெண்ணாக நடித்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது. இருந்தாலும் எனது பெஸ்ட்டை கொடுப்பதற்காக இந்தப்படத்தில் அதிகம் உழைத்தேன். ரசிகர்கள் என்னை எப்போதும் மறக்கக்கூடாது என்பதற்காகவே வித்தியாசமான ரோலில் நடித்தேன். முன்னதாக இந்த ரோலில் நடிக்க பார்வையற்றவர்கள் பள்ளிக்கு சென்று அவர்களிடம் பேசி பழகினேன். பின்னர் அதேப்போன்று பயிற்சி எடுத்து நடித்தேன்.
படத்தில் முத்தக்காட்சியில் எல்லாம் நடித்துள்ளீர்கள்?
எனக்கு முத்தக்காட்சியில் நடிக்க உடன்பாடில்லை, ஆனால் படத்தின் கதைக்கு அந்தக்காட்சி அவசியமாக இருந்தது. கதையின் தன்மையை உணர்ந்து முத்தக்காட்சியில் நடித்தேன். மேலும் இந்த முத்தக்காட்சி செக்ஸியாக இருக்காது, அது ஒரு உணர்வுப்பூர்வமான காட்சியாக இருக்கும். பிளாக் படத்தில் அமிதாப்பும், ராணி முகர்ஜியும் எப்படி முத்தக்காட்சியில் நடித்திருந்தார்களோ அதேப்போன்ற உணர்வை தான் இந்தப்படத்தின் முத்தக்காட்சியும் இருக்கும்.
ரன்தீப்புடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
மிகவும் திறமையான நடிகர் ரன்தீப், அவருடன் நடித்தது அருமையாகவும், மறக்கமுடியாததாகவும் இருந்தது. ரன்தீப், கடுமையாக உழைக்ககூடியவர், உணர்ச்சிப்பூர்வமான நடிகர், நல்ல மனிதர். பொதுவாக நான் சீக்கிரமாகவே தூங்குபவள், இந்தப்படத்திற்காக இரவுநேரங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் எனக்கு அது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் ரன்தீப் அப்படியல்ல, எவ்வளவு நேரம் ஆனாலும் நடிப்பார். அவர் மீது எந்த குறையும் சொல்ல முடியாது.
சமீபமாக தென்னிந்திய கலைஞர்கள் அதிகளவில் பாலிவுட்டில் பணியாற்றுகிறார்கள், இதுப்பற்றி உங்கள் கருத்து?
இது நல்ல விஷயம். இங்கு தென்னிந்திய சினிமா மட்டுமல்ல, பாலிவுட் சினிமா மட்டுமல்ல அதையும் தாண்டி இந்திய சினிமா என்ற ஒன்று தான் நம்மை இணைக்கிறது. முன்பெல்லாம் இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும், பாடகர்களும் தான் பிறமொழிகளில் பணியாற்றுவார்கள், ஆனால் இப்போது அப்படியல்ல, தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட்டில் நடிக்கிறார்கள், பாலிவுட் கலைஞர்கள் தென்னிந்திய படங்களில் நடிக்கிறார்கள். இங்குள்ள படங்கள் அங்கு மொழிமாற்றமும், ரீ-மேக்கும் செய்யப்படுகிறது, அங்குள்ள படங்கள் இங்கு மொழிமாற்றமும், ரீ-மேக்கும் செய்யப்படுகிறது. நடிகர்களுக்கு, சினிமா கலைஞர்களுக்கு மொழி ஒரு தடை கிடையாது. ஒரு நடிகனுக்கு நல்ல நடிப்பு திறன் இருந்தால் எந்த மொழியிலும் சாதிக்கலாம்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.